புதன், 15 ஏப்ரல், 2020

தங்கள் தவறுகள் மற்றும் தங்கள் மீதான விமர்சனங்களை மறைக்கவும் திசைதிருப்பவும் கூட கொரோனாவை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகிறார்களா? - தி.வேல்முருகன்

தங்கள் தவறுகள் மற்றும் தங்கள் மீதான விமர்சனங்களை மறைக்கவும் திசைதிருப்பவும் கூட கொரோனாவை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகிறார்களா? - தமிழக வாழ்வுரிமைக் கட்சி! 

இந்தக் கொரோனா சமயத்தில் ஆளும் தரப்பினர் மக்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி, ‘உயிரா, வயிரா, எது முக்கியம்?’ என்பதாகும். ஊரடங்கால் உணவின்றிச் சாகும் மக்களிடம் இதைவிடவும் நயவஞ்சகமான ஒரு கேள்வியை கேட்டுவிட முடியாது. வயிரின்றி உயிர் எப்படி என்ற எளிய உண்மை யாருக்குமே தெரியாததல்ல. 

ஏன் இந்த வஞ்சகக் கேள்வி வருகிறதென்றால், உலகிலேயே ஆகப்பெரும் ஜனநாயக நாடான நம் இந்தியாவில், உலகத்துக்கே - மனித குலத்துக்கே எதிரான, பிறப்பிலேயே மனிதரில் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் வர்ணாசிரம இழிவின், அவலத்தின் சித்தாந்தமான சனாதனம் ஆட்சிக்கு வந்ததுதான். சனாதனத்தின் பரம வைரியே ஜனநாயகம் என்பதால் அதனை அழிப்பதே தன் முதன்மைப் பணி எனச் செயல்படுகிறது சனாதனம். இதனால் கொரோனாவை ஒழிப்பது அதற்கு இரண்டாம் பட்ச, மூன்றாம் பட்ச பணியாகியிருக்கிறது. 

இன்று கைபேசி, எஸ்எம்எஸ், வாட்ஸ் அப், இணையம், முகநூல், ட்விட்டர் என நவீன தொலைத்தொடர்பு வசதிகள் அநேகம். குறைந்தபட்சம் கைபேசியாவது இல்லாது இன்றைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது.  அதுவும் இந்தக் கொரோனா சமயத்தில் அதன் அருமையைச் சொல்ல வார்த்தைகள்தான் ஏது? ஆனால் காஷ்மீர் மக்களுக்கோ இது நடு இரவின் கோரக்கனவுதான் (nightmare). 
கடந்த ஆகஸ்டில் காஷ்மீரின் தன்னாட்சிச் சட்டப்பிரிவு 370 முடக்கப்பட்டது. ஆனால் அதற்கு முந்தின நாளே தொலைத்தொடர்பு சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது. இதனை எதிர்த்து காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் அனுராதா பாசினும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் நபி ஆசாத்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 

160 நாட்கள் கழித்து, ஜனவரி 10 அன்று தீர்ப்பு வந்தது. ஆனால் தீர்ப்பில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் பொறுப்பு பிரதமர் மற்றும் உள்துறையிடம் (மோடி-அமித்ஷா) விடப்பட்டது. அதனால் இன்றுவரை அங்கு 
தொலைத்தொடர்பு சேவை இல்லை. இதைக் கிண்டலும் கேலியும் செய்தார் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “ஒருவரோடொருவர் பேசவும் தொடர்புகொள்ளவும் முடியாமல் தொலைத்தொடர்பு வசதிகள் பறிக்கப்பட்ட நிலையில் இருப்பதைவிடவும் அதிகபட்ச தண்டனை உண்டோ?” என்று! 
காஷ்மீர் மக்கள் அனுபவிக்கும் தண்டனைக்கு ஈடாக, கொரோனாவால் இன்று இந்தியா முழுவதுமே அனுபவிக்கிறது. ஆனால் ஒரே வித்தியாசம். காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகம், தொலைத்தொடர்பு வசதிகள் இரண்டுமே இல்லை; நமக்கோ தொலைத்தொடர்பு வசதிகள் இருந்தாலும் ஜனநயகம் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜனநாயகம் மோடியிடமே 
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

எப்படியென்றால், கொரோனா ஊரடங்கை இந்த மாதம் 30ந் தேதிவரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். அதைத் தொடர்ந்து பஞ்சாப். மகாரஷ்டிரா, கேரளா, பாஜக ஆளும் கர்நாடகா முதல்வர்களும் 30ந் தேதிவரை நீட்டித்தனர். அதற்குப் பிறகே ‘சம்மன் இல்லாது ஆஜராவது’ போல் முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டினார் மோடி. 

அந்த வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் ப.சாமி உள்ளிட்ட ஒருசிலரைத் தவிர மீதிப் பேர் மிஸ்ஸிங்! ஏற்கனவே ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த மோடி, அந்த வீடியோ கான்பரன்ஸில் அதை அறிவிக்காமலே கூட்டத்தை முடித்தார். 
ப.சாமிக்கோ ஒன்றும் ஓடவில்லை; மோடியின் உத்தரவுக்காகக் காத்திருந்து பார்த்தார். பதில் வரவில்லை. ஆகவே டெலிபோனில் கேட்டு 30ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு என் நேற்று அறிவித்தார். 
ஒன்றிய அரசைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மாநிலங்களின் மக்களுக்கே! அப்படியிருக்க, மாநில அரசு ஒன்றிய அரசின் உத்தரவுக்காகக் காத்திருப்பது என்றால், நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள், இது ஜனநாயகமா? 

சனாதனி மோடி ஜனநாயகத்தை அழிப்பவர் என்று தெரிந்தும், அவர் உத்தரவுக்காகக் காத்திருந்த ப.சாமியும் சனாதனிதானோ?
இதற்கு முன் 21 நாள் ஊரடங்கால் நாடு பட்ட பாட்டை மகளாகிய நாம்தான் அறிந்தோமே தவிர ஆட்சியாளர்கள் அறிந்திருந்தாலும் அறியாதது போல்தான் இருந்தார்கள் என்பதே உண்மை. இப்போது மேலும் 14 நாள் நீட்டிப்பால் படப்போகும் துன்பத்தை எப்படித் தாங்குவது? ஆட்சியாளர்கள் வழக்கம்போல் எந்த வழிவகையும் செய்வதாக அறிவிக்கவில்லை. 

சரி, போகட்டும். இந்தக் கொரோனாவை ஒழிக்கவாவது உரிய மருத்துவ வசதி உண்டா? முகக்கவசம், பாதுகாப்பு உடை, அதிவிரைவுப் பரிசோதனைக் கருவிகள், இன்னபிற எதுவுமே டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஊரடங்கைக் கண்காணிக்கும் காவலர்கள் ஆகியோருக்குக் கூட இதுவரையில் இல்லை. 
கூலிவேலை, சிறுதொழில், சிறு வியாபாரம், படிப்பு நிமித்தமாக பல்வேறு மாநிலங்களிலும் தங்கியுள்ளவர்கள் உணவின்றித் தொலைதூர சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறார்களே; இந்த 14 நாள் ஊரடங்கு நீட்டிப்பிலேயும் அவர்களுக்கு வழிவகை அறிவிக்கப்படவில்லையே, ஏன்? கட்டாயம் அவர்களைக் கரைசேர்க்க வேண்டுமாய் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து அரசுகளையும் கேட்டுக்கொள்கிறோம். 

வேலை, தொழிலின்றி வீட்டுக்குள் முடங்கிவிட்ட அல்லது வீடோ வேலையோ இன்றி தெருவோரம், ரோட்டோரம் ஒண்டியுள்ள அத்தனை பேருக்குமே வயிற்றுக்கு வழி செய்ய வேண்டுமாய் கேட்கும் அதேசமயம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்ததைக் கூட்டி இனி 10,000 ருபாயாயாக வழங்குவதோடு, குடும்ப அட்டை இல்லாதாருக்கும் அதை வழங்க வேண்டுமாய் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம். 

விளைபொருள்களை அறுவடை செய்ய ஆளின்றியும், அறுவடை செய்தாலும் விற்க முடியாமலும் திண்டாடுகிறார்கள் விவசாயிகள். இந்த நிலை நீடித்தால் அவர்கள் ஈடு செய்ய இயலாத நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். அரசுதான் அவர்களைக் காக்க வேண்டுமாய் வேண்டுகிறோம். 
இந்த ஊரடங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவுவதைத் தடுத்து அவர்கள் மேல் நடவடிக்கையும் எடுக்கிறது தமிழ்நாடு அரசு. இது ஜனநாயகத்துக்கும் அரசமைப்புச் சட்டத்துக்குமே எதிரானதாகும். ஜனநாயக விரோத சனாதன மோடியோடு சேர்ந்த தோஷத்தாலேயே இப்படியான அநாகரிக நடவடிக்கையில் ஈடுபடுகிறார் ப.சாமி. இதனைக் கைவிட்டு 
ஜனநாயக வழிக்குத் திரும்பக் கோருகிறோம். 

இப்போது கையில் பணமில்லை. அப்படிப் பணம் இருந்தாலும் பொருட்களை வாங்க முடியாத நிலை. காரணம், பொருட்களுக்கும் தட்டுப்பாடு, விலையும் எக்கச்சக்கம்! இது சிறு கடைகளால் அல்ல; அவர்களுக்கு சப்ளை செய்யும் மொத்த வியாபாரக் கடைகளால் வந்த வினை! போக்குவரத்தைத் தடை செய்ததும், கடைகள் மதியம் 1 மணி வரைதான் இயங்க வேண்டும் என்றதும் கூட இதற்கு ஒரு காரணமாகும். எமர்ஜென்சியின் போதுகூட எல்லாப் பணிகளும் நடந்ததே! ஊரடங்கில் எல்லாரும் எல்லாமும் இயங்குவதற்கென்ன? சமூக விலகலைத்தானே கடைப்பிடிக்க வேண்டும்! 

இல்லாத மக்களைப் பொறுத்தவரையில் இந்த ஊரடங்கு அடாவடி, கெடுபிடி என்பதாகவே படுகிறது. ஜனநாயக நாட்டில் இதற்கெல்லாம் இடமில்லை. அப்படியிருந்தும் ஏன் இந்த ஜனநாயக விரோத செயல்பாடுகள்? 
சனாதனச் சங்கியான மோடி 130 கோடி மக்களின் உழைப்பையும் வெறும் முப்பது பேரே உறிஞ்சிக் கொழுக்க வகை செய்திருக்கிறார். அதாவது ஜனநாயகத்தை அழித்து கார்ப்பொரேட் முதலாளித்துவத்தைக் கட்டமைத்ருக்கிறார். எந்தக் கட்டமைப்புக்கும் பக்கபலமாக ஓர் இசம் தேவைப்படும். மோடியின் சிந்தனையில் கார்ப்பொரேட் முதலாளித்துவத்துக்கானதே இந்த வர்ணாசிரம இசம் என்னும் சனாதனம். 
மேலும், இந்தக் கொரோனா வருவதற்கு முன்னமேயே நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள் பொருளியல் வல்லுநர்கள். அதாவது நாடே கிட்டத்தட்ட போண்டியாகிவிட்ட நிலைமை. அது வங்கிகள் மூலம் தெரியவந்தது. ஒருசில வங்கிகள் இழுத்து மூட வேண்டிய நிலைக்கே வந்தது. இதைச் சரிக்கட்டத்தான் பண மதிப்பழிப்பு 

(demonetisation) நடவடிக்கை! ஏழைபாளைகளின் சிறுவாட்டுப்பணம், சேமிப்புப்பணம் உட்பட அனைத்தும் வங்கிகளுக்கு வந்தன. வங்கிகள் மீண்டும் இயங்கின. 
சரி, இந்த வங்கிகள் ஏன் முதலில் போண்டியான நிலைக்கு வந்தன? கார்ப்பொரேட்டுகள் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாததால்தான்; அவர்களில் பல பேர் வெளிநாடுகளுக்குத் 
தப்பியோடி அங்கே பதுங்கிக் கொண்டதும்தான். 
அடுத்து ஜிஎஸ்டியைக் கொண்டுவந்து சிறுகுறு தொழில் உற்பத்திப் பொருட்களின் விலையை படாப்பழியாக உயர்த்தி ஏற்றுமதியையே முற்றாக நிறுத்தினார் மோடி (உதாரணம்: திருப்பூர்). நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கே சென்றது. 

இந்தப் பொருளாதார வீழ்ச்சியை மறைப்பது, திசைதிருப்புவது எப்படி? அதற்காகத்தான் காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு முடக்கம், முத்தலாக், சிஏஏ போன்றவை. அத்தனையுமே இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்; அரசமைப்புச் சட்டத்திற்குமே எதிரானவை. உலகமே இவற்றைக் கோட்டித்தனமானவை என்றது. சிஏஏவை உலகம் கண்டித்ததோடு, ஐ.நா.அவையே அருவருப்புடன் பார்த்து. சிஏஏ விடயத்தில் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியரைக் கொன்றதோடு, 300க்கும் மேற்பட்ட அவர்களது வீடுகளையும் சூறையாடினர் சங்கிகளும் பாஜக குண்டர்களும். இது இந்தியாவையே, ஏன் உலகையே அதிரச் செய்ததுடன், மோடியின் சுயரூபத்தையும் தோலுரித்துக் காட்டியது. 
இனி என்ன செய்வது என மோடி கைபிசைந்துகொண்டிருந்த வேளையில்தான் கொரோனா பிரச்சனை வந்தது. தனது அரசின் படுதோல்வியை மறைக்க, திசைதிருப்ப, படுபயங்கர கொரோனாவையும் பயன்படுத்தத் துணிந்தார் மோடி. 

உண்மையில் கொரோனா பிரச்சனையில் மோடி செய்வதற்கு ஒன்றுமே இல்லை. மாநிலங்கள் கேட்கும் நிதியைக் கொடுப்பதும் மருந்துகள், 
கருவிகளை வரவழைத்துக் கொடுப்பதும்தான் அவரது வேலை. ஆனால் அதையெல்லாம் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு ஆலோசனைகள் மற்றும் கட்டளைகள் வழங்குவதுமாயிருக்கிறார். 

இன்றும் தொலைக்காட்சியில் உரையாடிய மோடி, அரைத்த மாவைத்தான் அரைத்தார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், தளர்வுகள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். சமூக விலகலும் ஊரடங்கும் நமக்கு வெற்றியைக் கொடுத்துள்ளன என்றார். அவர் சொன்ன வெற்றிக்கு அவராலேயே விளக்கம் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை. 
இந்த ஊரடங்கின்போது ஒன்றிய அரசும் சரி, தமிழக அரசும் சரி, எதிர்க்கட்சிகளை, மக்களைக் கலக்காமல் சட்டவிரோத காரியங்கள் பலவற்றைப் பூடகமாகச் செய்துள்ளன. இதற்கான உதாரணத்தை, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலச் சொல்கிறோம். அதாவது, 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக ஒன்றிய அரசு இணைத்தது என்றால்; ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் சட்டவிரோதமாக மலைப்பகுதி காடுகளை கபளீகரம் செய்திருப்பதை நியாயப்படுத்தவும், அதன் பேரிலான வழக்குகளை செயலற்றுப்போகச் செய்யவும் சட்டத்தையே திருத்தி உதவியிருக்கிறார் ப.சாமி. 

ஆக, கொரோனா போர் என அபத்தமாகக் குறிப்பிட்டு, அதை ஜனநாயகத்துக்கும் சனாதனத்துக்குமான ஓர் ஆபத்தமான போராகவே மாற்றியுள்ளார் மோடி! இதில் செய்யவேண்டியதை தானும் செய்யாமல்; தன்னார்வலர்களையும் செய்ய விடாமல் மிரட்டுவதோடு, சட்டவிரோத காரியங்களையும் செய்திருக்கிறார் ப.சாமி!  
தங்கள் தவறுகளையும் தங்கள் மீதான விமர்சனங்களையும் மறைக்கத்தான் கொரோனாவை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகிறார்களா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக