பெருந்தொற்றிலிருந்து உலகம் விரைவில் மீண்டு மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வரத் தொடங்குவார்கள் என்று 74-வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவைத் தொடங்கி வைத்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிக்கியுடன் இணைந்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த 74-வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் இந்திய காட்சிக் கூடத்தின் காணொலி வாயிலான திறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இரண்டாவது ஆண்டாக காட்சிக்கூடங்கள் காணொலி வாயிலாக நடத்தப்பட்டாலும், இதில் இடம்பெற்றுள்ள படைப்புத்திறன், திறமை, தொழில்நுட்பம் ஆகிய அனைத்தும் உண்மையானது என்றும், இவற்றில் மிக சிறந்தவற்றையே இந்தியா வழங்குவதாகவும் கூறினார். “வருங்கால உலக திரைப்படம் குறித்து விவாதிக்கும் தளமாக இந்த மெய்நிகர் இந்திய காட்சிக்கூடம் செயல்படலாம்”, என்று அவர் குறிப்பிட்டார்.






