வியாழன், 11 ஏப்ரல், 2019

“வெற்றி நம் பக்கம், விழிப்புடன் செயலாற்றுவோம்!” - மு.க.ஸ்டாலின்


“வெற்றி நம் பக்கம், விழிப்புடன் செயலாற்றுவோம்!”
- கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மடல்.

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
எங்கு சென்றாலும் பொங்கும் ஆரவாரம். எல்லாத் திசையிலும் நம்பிக்கை முழக்கம். எந்த ஊர் என்றாலும் சமுத்திரம் போல மக்கள் சங்கமம் இதுதான் கடந்த 20 நாளாக தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டுள்ள பரப்புரைகளின் நான் காண்கிற களிப்புமிகு காட்சி. நான் மட்டுமல்ல, கழகத்தினர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் இந்த எழுச்சியையும் விழிப்புணர்ச்சியையும் காண முடிகிறது. மக்களின் மனநிலை என்ன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியென வெளிப்படுத்திடும் வகையில் தேர்தல் களம் அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலும், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இணைந்தே நடப்பதால் மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெறுகிற மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று வாக்காளர்கள் நினைப்பதன் அடையாளமாகத்தான் தி.மு.கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்குப் பேராதரவு பெருகி வருகிறது. ஊடகங்கள் வெளியிடும் கருத்துக் கணிப்புகளிலும் அது நன்றாகவே பிரதிபலிக்கிறது.
நாம் கருத்துக் கணிப்புகளை மட்டுமே நம்பியிருப்பவர்களல்ல. களத்தில் இறங்கிக் கண்ணயராமல் செயல்படுபவர்கள். பாடுபட்டு வளர்த்த பயிரை, அறுவடை நேரம் வரை கவனமுடன் பாதுகாத்தால்தான், வெற்றி எனும் விளைச்சலைக் காண முடியும். சற்று அசந்தாலும் அது களவாடப்படக்கூடும். ஏனென்றால், வேலியே பயிரை மேய்கின்ற காலம் இது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, எங்கு சென்றாலும் மக்கள் பெருந்திரளாக வரவேற்றார்கள், வெற்றிவாய்ப்பு தெளிவாகத் தெரிந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகமும், அதற்குச் சாதகமாக தேர்தல் ஆணையம் பாராமுகமாக - பாரபட்சமாக செயல்பட்டதும், இத்தகைய சூழ்ச்சிகளையும் சூதுகளையும் அறியாமல் கழகத்தினர் சற்று அலட்சியமாக இருந்ததாலும், வெறும் 1.1% வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியமைக்கும் வாய்ப்பினைக் கழகம் கை நழுவ விட்டது. நம் உயிரனைய தலைவர் கலைஞர் அவர்கள் ஆறாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்கும் வரலாற்றுச் சாதனைக்கு வாய்ப்பின்றிப் போனது.
இந்தியத் தலைவர்கள் வியந்து பார்க்கும் மூத்த தலைவரான நம் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக அமர்ந்திருந்தால், அவர் இன்னும் ஊக்கத்துடன் உழைத்து, நமக்கு வழிகாட்டியாக இருந்து, நூறாண்டு கடந்து வாழ்ந்திருப்பார். ஒருவேளை, இப்போது போலவே இயற்கையும் முதுமையும் அவரை நிரந்தர ஓய்வு கொள்ளச் செய்திருந்தாலும், வங்கக் கடலோரம் தன் அண்ணன் துயிலுமிடத்திற்கு அருகே இதேபோல ஓய்வு கொண்டு இரவலாகப் பெற்ற இதயத்தை திரும்ப ஒப்படைத்து, அண்ணாவுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி இருப்பார். அவர் முதல்வராக இல்லாத காரணத்தால், அரசியல் பண்பு அறியாத - சுயமரியாதையை அடகு வைத்து பதவிக்கு வந்தோரிடம் நம் தலைவருக்கு கடற்கரையில் இடம் கேட்டு கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலை வந்தது. அப்போதும் இரக்கமின்றி நம்மை விரட்டியவர்களை, சட்டத்தின் வழியாகப் போராடி நீதியை நிலைநாட்டி, தலைவர் கலைஞருக்கு கடற்கரையில் இடம் கிடைக்கச் செய்தோம். மரணத்திலும் போராளியாகி, தனக்கான கல்லறைக்குரிய இடஒதுக்கீட்டைப் பெற்ற மாவீரனானார் தலைவர் கலைஞர் அவர்கள்.
வெறும் 1.1% வாக்கு வித்தியாசம்தான் நம்மை மட்டுமல்ல, தமிழ்நாட்டையே பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் களத்தில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்பதற்கு இதைவிட கசப்பான உதாரணம் இருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு உருப்படியான திட்டங்கள் ஏதேனும் உண்டா? உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி விளம்பரமும் வருமானமும் தேடிக்கொண்டவர்கள் உரிய அளவில் முதலீட்டைக் கொண்டு வந்ததுண்டா? 3 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையை ஏற்றியதும், மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் சாஷ்டாங்கமாக அடகு வைத்ததும்தான் இவர்களின் பரிதாபச் சாதனைகள்.
இந்த இழிநிலையை மாற்ற தி.மு.கழகக் கூட்டணியால்தான் முடியும் என தமிழக மக்கள் நம்புகிறார்கள். ஏன் இந்த ஆட்சியை மாற்றவில்லை என எங்கு சென்றாலும் நம்மை நோக்கித்தான் கேள்வி கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்கான விடையை ஜனநாயக வழியில் தருவதற்கான நாள்தான், ஏப்ரல் 18. மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறவைக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். கழக நிர்வாகிகள் அதற்கு முழுமையான ஆயத்தத்துடனும் எச்சரிக்கையுடனும் இருந்திட வேண்டும். விளைந்து நிற்கின்ற வெற்றிக்கதிரை அறுவடை செய்து களத்து மேட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென்றால், விழிப்புடன் இருந்து செயலாற்றிட வேண்டும்.
மத்திய - மாநில ஆட்சியாளர்களுக்கும் அவர்களுடைய கூட்டணியில் இருப்போருக்கும் இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது என்பதை அவர்களின் தேர்தல் பரப்புரை பேச்சுகளிலிருந்தே நாமும் உணர்கிறோம். மக்களும் உணர்ந்து கொண்டார்கள். மக்களின் ஆதரவு இல்லை என்பது தெரிந்ததால், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது பற்றி பொதுமேடையிலேயே சூசகமாகப் பேசுகிறார்கள். ஓட்டுக்கு நோட்டு கொடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என வியூகம் வகுக்கிறார்கள். ‘தான் திருடி, பிறரை நம்பாள்’ என்பது போல தங்களின் மோசடியை மறைக்க, மோடியின் அதிகாரக் குடைக்குள் நுழைந்துகொண்டு, எதிர்க்கட்சியினரைக் குறி வைத்து ரெய்டு நடத்தி, பழி சுமத்தி, வெற்றி பெற முடியாத தொகுதிகளில் தேர்தலை நிறுத்திவிட முடியுமா எனத் திட்டமிடுகிறார்கள்.
இத்தனை சூது வளையங்களையும், சூழ்ச்சி வலைகளையும் அறுத்தெறிந்துதான், நாம் மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும். உறுதியாகிவிட்ட கழகக் கூட்டணியின் வெற்றியை அதிகார அத்துமீறல் கரங்களால் பறிக்க நினைக்கும் ஆட்சியாளர்களிடமிருந்தும், அவர்களின் கூட்டணியினரிடமிருந்தும் கவனமாகக் கண்ணெனப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.கழக நிர்வாகிகளுக்கு இருக்கிறது.
தேர்தல் பரப்புரையின் இறுதிக்கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கூடினோம். கலைந்தோம் என்பதாக இல்லாமல் குழு குழுவாகச் சென்று, வீடு வீடாக வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். எந்த ஒரு வாக்காளரும், எங்களை தி.மு.க.வினர் சந்திக்கவில்லை என்று சொல்ல முடியாத அளவில் உங்கள் பணி முழுமையாக அமைந்திட வேண்டும். அதுபோலவே, ஆட்சியாளர்கள் கடைசி நேரத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள அதிகார அத்துமீறல்களைக் கண்டறிவதில் கொக்குபோல கழகத்தினர் செயலாற்ற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாகவே, நமது கழகத்தின் சார்பிலும் கூட்டணியின் சார்பிலும் வாக்குச்சாவடி முகவர்களாக செயல்படுவோருக்கு உரிய பயிற்சிகளை அளித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே சேரும் வகையில் செயலாற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும், ஆளுங்கூட்டணியின் அதிகார அத்துமீறல்களை அனுமதித்திடக் கூடாது.
நாடும் நமதே நாற்பதும் நமதே; இருபத்தி இரண்டும் எமதே என்பதே நமது இலக்கு. மத்திய பாசிச ஆட்சியையும் மாநிலத்தில் உள்ள அடிமை ஆட்சியையும் ஒருசேர விரட்டிடவும் வீழ்த்திடவும் நமக்கு கிடைத்திருக்கிற நல்வாய்ப்புதான் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்றத் தொகுதிகளுக்காக இடைத்தேர்தலும். அதனை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து கண் இமைக்காமல், பசி நோக்காமல் களைப்படையாமல் விழிப்புடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் நம் பக்கமே!
வெற்றியைத் தருவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். அதனைப் பெற்று, வங்கக் கடற்கரையில் நிரந்தர ஓய்வெடுக்கும் நம் தலைவர் கலைஞரின் காலடிகளில் காணிக்கையாக்கும் பொறுப்பு அந்த உயிர்நிகர் தலைவரின் உடன்பிறப்புகளான உங்களின் கைகளில்தான் இருக்கிறது. வெட்டி வா என்றால் கட்டிவரக்கூடியவர்கள் எனது உடன்பிறப்புகள் எனப் பெருமையுடன் சொல்வார் முத்தமிழறிஞர் கலைஞர். அந்தப் பெருமைக்குரிய உடன்பிறப்புகளிடம் உங்களில் ஒருவனாக நான் எதிர்பார்ப்பது 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 22 சட்டமன்றத் தொகுதிகளிலும், முழுமையான வெற்றி ஒன்றைத்தான்.
களத்தில் செயலாற்றுவீர்… கழகக் கூட்டணியின் வெற்றியை உறுதியாக நிலைநாட்டுவீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக