புதன், 22 மே, 2019

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அமைதியான ராமதாஸ் சென்ற ஆண்டு அறிக்கை

தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக 
துப்பாக்கிச் சூடு: தாக்குதல் தொடர்ந்தால் 
ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும்!
- ராமதாஸ் சென்ற ஆண்டு அறிக்கை

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதற்கிணங்க தூத்துக்குடி மக்கள் மீது இன்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இன்றைய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஓர் இளைஞர் கொல்லப் பட்டிருக்கிறார். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தூத்துக்குடியில் காவல்துறையினர் நேற்று நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். முதலமைச்சரும், அரசுத்துறை உயரதிகாரிகளும் பாதிக்கப் பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத பினாமி ஆட்சியாளர்கள் தூத்துக்குடி நகரத்திலும், அதையொட்டிய மீனவ கிராமங்களிலும் காவலர்களை நிறுத்தி பொதுமக்களை அச்சுறுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியிலும் காவல்துறையினரின் இத்தகைய ஒடுக்குமுறை காரணமான பொதுமக்களுடன் ஏற்பட்ட மோதலைப் பயன்படுத்தி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி இளைஞர் ஒருவரை கொன்றுள்ளனர். இதுவும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலை என்பதில் சந்தேகமில்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். மனித உரிமை செயல்பாட்டாளர்கள், நீதித்துறையினர் அடங்கிய குழுவை அனுப்பி தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள காவல் படைகளை திரும்பப்பெற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அடுத்தடுத்து 
அம்பலமாகும் சதி - அரசு விலக வேண்டும்!
- ராமதாஸ் சென்ற ஆண்டு அறிக்கை

தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் 13 பேரின் உயிரைப் பறித்த காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டது யார் என்பது குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு எதிர்பாராத தூண்டல் காரணமல்ல... அரசும் காவல்துறையும் தீட்டிய சதி தான் காரணம் என்பது இந்த உண்மைகளின் மூலம் உறுதியாகியுள்ளது.

தூத்துக்குடி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புற்றுநோய் உற்பத்தி மையமாக விளங்கிய ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்திய மக்கள் மீது கடந்த 22&ஆம் தேதியும், 23&ஆம் தேதியும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிட்டது யார்? என்ற வினாவுக்கு இன்று வரை தெளிவான விடை கிடைக்கவில்லை. இந்த வினாவுக்கு பதிலளிக்க தமிழக அரசும், முதலமைச்சரும் மறுத்து வந்த நிலையில், துணை வட்டாட்சியர்கள் ஆணையிட்டதன் அடிப்படையில் தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை தலைமை இயக்குனர், முதலமைச்சர் ஆகியோரைத் தாண்டி துணை வட்டாட்சியர் தான் அதிகாரம் படித்தவர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அவர்கள் மீது பழியை சுமத்தி தப்பிக்க நினைப்பது நகைப்புக்குரியது மட்டுமல்ல... மிகவும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் இந்த நாடகமும் அம்பலமாகிவிட்டது. தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திரேஸ்புரம் ஆகிய இரு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடுகளில் தான் 12 பேர் கொல்லப்பட்டனர். எஃப்.சி.ஐ ரவுண்டானா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டால், அதை சமாளிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் பொறுப்பு அதிகாரிகளாக துணை வட்டாட்சியர் நிலையிலுள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்படி திரேஸ்புரம் பகுதிக்கு சேகர் என்ற தேர்தல் துணை ஆட்சியரும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு ராஜ்குமார் தங்கசீலன் என்ற தனி வட்டாட்சியரும் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிடும் அதிகாரம் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக அரசு கூறுவது உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட இவர்கள் தான் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், இவர்களுக்கு பதிலாக வேறு இடத்தில் இருந்த அதிகாரிகளிடமிருந்து ஆணை பெறப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் பேரை பலிவாங்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலக துப்பாக்கிச் சூட்டுக்கு அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள திரேஸ்புரம் பகுதிக்கு பொறுப்பான சேகர் என்ற தேர்தல் துணை வட்டாட்சியர் ஆணையிட்டதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், திரேஸ்புரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பணியில் இருந்த கண்ணன் என்ற துணை ஆட்சியர் தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிடும் அதிகாரிகள் அப்பகுதியில் நிலவும் சூழலை ஆய்வு செய்து தான் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட வேண்டும். அதற்காகத் தான் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பொறுப்பு அதிகாரியிடம் அனுமதி பெறாமல் எங்கோ உள்ள ஓர் அதிகாரியிடம் ஆணை பெற்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுவது இமாலயப் பொய் ஆகும். இது மக்களையும், நீதித்துறையையும் முட்டாள்களாக்கும் முயற்சி ஆகும்.

அதேபோல், எப்.சி.ஐ. ரவுண்டானா பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்த, அப்பகுதியின் பொறுப்பு அதிகாரியான வட்டார வழங்கல் அலுவலர் கோபால் ஆணையிட்டதாக சில நாட்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த பகுதியில் எந்த கலவரமும் நடக்கவில்லை; துப்பாக்கிச் சூடு நடத்த தாம் ஆணையிடவில்லை என்று அந்த அதிகாரி மறுத்துவிட்டார். துப்பாக்கிச் சூடு சதி அம்பலமானதால், எப்.சி.ஐ. ரவுண்டானா பகுதியில் பொறுப்பு அதிகாரியை தேடிக் கண்டுபிடிக்க முடியாததால் தாமே துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டதாக காவல் ஆய்வாளர் மீனாட்சி நாதன் என்பவர் கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இது அபத்தத்திலும் அபத்தமாகும்.

தூத்துக்குடியில் எந்த இடத்திலுமே துப்பாக்கிச்சூடு நடத்த வட்டாட்சியர்கள் ஆணையிடவில்லை என்று தெரிகிறது. ஆட்சியாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் நிலையில் தீட்டப்பட்ட சதித் திட்டத்தின்படி காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, துணை வட்டாட்சியர்கள் ஆணைப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. திரேஸ்புரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளின் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்த துணை வட்டாட்சியர்கள் இந்த சதித் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால், இந்த சதி நாடகத்தில் அவர்களுக்கு பதிலாக வேறு இரு துணை வட்டாட்சியர்கள் புதிய கதாபாத்திரங்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

எந்த வகையில் பார்த்தாலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு சூத்திரதாரிகள் தமிழக ஆட்சியாளர்கள் தான். அவர்களின் சதிக்கு அதிகாரிகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி தப்பிக்க முயல்கின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள பொம்மை ஆணையத்தால் எந்த பயனும் விளையாது. இதுகுறித்து பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான பினாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக