திங்கள், 20 மே, 2019

சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம் !!! - தொல்.திருமாவளவன்

மே 20, பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்
சனாதனத்தை வேரறுக்க
உறுதியேற்போம்!
தொல்.திருமாவளவன்

பண்டிதர் அயோத்திதாசர் தமிழ்மண்ணில் தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை. தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு போற்றுதலுக்குரியதாகும். தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற மாமனிதர்களுக்கு முன்தோன்றிய மூத்த தலைவர் அவர். அரசியல், சமூகம் மற்றும் கலாச்சாரம் போன்ற தளங்களில் அவர், அம்பேத்கர் பெரியார் ஆகியோருக்கு முன்னோடியாக இருந்து மாற்றுச் சிந்தனைகளை – முற்போக்கு கருத்துக்களை முன்வைத்தவர். அவர் நெடுங்காலமாக வரலாற்றில் மறக்கப்பட்டவராக அல்லது மறைக்கபட்டவராக ஆக்கப்பட்டிருக்கிறார். எனினும், வரலாற்றால் முற்றிலும் புறந்தள்ள இயலாதவராய் இன்று ஒரு மாபெரும் ஆற்றலாக உயர்ந்து நிற்கிறார்.

இந்திய வரலாறு பவுத்தத்திற்கும் சனாதனத்திற்கும் இடையில் நடந்த மாபெரும் யுத்தத்தின் வரலாறாக உள்ளது என்பதை உலகுக்கு உணர்த்திய பெருமைக்குரியவராக பண்டிதர் அயோத்திதாசர் விளங்குகிறார். கவுதம புத்தர் சனாதனத்தை எதிர்த்து நடத்திய யுத்தம் இன்றும் தொடர்வதற்கு பண்டிதரின் அறிவார்ந்த பங்களிப்பே முதன்மையானதாகும். பவுத்தத்தின் வீழ்ச்சி, அதனால் இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை ஆராய்ச்சிபூர்வமாக ஆதரங்களுடன் அம்பலப்படுத்தியவர் பண்டிதர்.

இந்து கலாச்சாரம் என்று கருதப்படும் யாவும் பவுத்த கலாச்சாரத்தின் திரிபுநிலைகளே என்பதையும் வெளிச்சப்படுத்தியவர் அயோத்திதாசரே ஆவார்.தமிழ்ப்பௌத்தம் என்கிற ஒரு புதிய கருத்தாக்கத்தையும் அவரே முன்வைத்திருக்கிறார். தமிழன் என்கிற தேசிய இன அடையாளத்தை முன்மொழிந்த பெருமையும் அவருக்குரியதே ஆகும்.

மிகச்சிறந்த பண்பாட்டு ஆய்வாளராக விளங்கிய அவர், தமிழக அளவில் மட்டுமின்றி இந்திய அளவில் ஆதிபௌத்தத்தை மீளுருவாக்கம் செய்த களப்பணியாளராகவும் விளங்கியிருக்கிறார். சாக்கிய சங்கம் கண்டு அதனை வெற்றிகரமாக வழிநடத்தியவர். அதன்மூலம் ஆதிபௌத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

திராவிட மகாஜன சபையை உருவாக்கி தென்னிந்திய மொழிகள் சார்ந்த உழைக்கும் மக்களின் கலாச்சாரத்தை மீட்கும் வகையில் கருத்துப்பரப்பலை மேற்கொண்டவர். ஒரு பைசா தமிழன் என்னும் பத்திரிக்கை தொடங்கி அதன்மூலம் மாபெரும் கருத்தியல் போரை நடத்தியவர். சாதிஒழிப்பே மக்கள் விடுதலை என்கிற கொள்கைப் புரிதலுடன் சனாதன எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியவர்.

அவருடைய கருத்தியல் தாக்கம் இன்றைய இளந்தலைமுறையினர் வரையில் வீரியத்துடன் நீட்சிபெற்றுள்ளதைக் காணமுடிகிறது. அதற்குச் சான்றாக விடுதலைச்சிறுத்தைகளும் அவரது புரட்சிகர சிந்தனைகளின் வழி செயல்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அவர்வழியில் சனாதனத்தை வேரறுக்க சனநாயகத்தை வென்றெடுக்க பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளில் (மே20) உறுதியேற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக