புதன், 22 மே, 2019

தேர்தல் ஆணையம் செய்த சனநாயகப்படுகொலை! - தொல். திருமாவளவன் அறிக்கை

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு. 
தேர்தல் ஆணையம் செய்த சனநாயகப்படுகொலை! 
தொல். திருமாவளவன் அறிக்கை!


ஏப்ரல் 18, வாக்குப்பதிவு நாளன்று சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பொன்பரப்பி என்னும் கிராமத்தில் சாதிவெறியர்கள் தலித்துகளை வாக்களிக்கவிடாமல் தடுத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் வாக்களிக்க விரும்பி அன்றே கோரிக்கை விடுத்தனர். வேட்பாளர் என்கிற முறையில் திருமாவளவனாகிய நானும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் அலுவலர் ஆகியோரிடம் முறையிட்டேன். ஆனால், தேர்தல் ஆணையம் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அதனைத்தொடர்ந்து தடுக்கப்பட்ட வாக்களர்களில் ஒருவரான விஷ்ணுராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் 07.05.2019 அன்று ரிட் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை 16.05.2019 அன்று விசாரித்த நீதிபதிகள் திரு சி வி கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர், 21.05.2019 நாளுக்குள் அதுதொடர்பாக உரிய ஆணை பிறப்பிக்க வேண்டுமென தீர்ப்பளித்தனர்.

ஆனால், ஐந்து நாட்கள் கழித்து வரையறுக்கப்பட்ட நாளான மே21ஐ கடந்து 22ந் தேதி (இன்று), பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது எதிர்பார்த்தது தான் என்றாலும் தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையான ஒருசார்பு அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது. “நூறு விழுக்காடு வாக்காளர்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்; வாக்களிக்காமல் ஒருவரும் விடுபடக்கூடாது” என்று பலநூறு கோடிகளைக் கொட்டி இறைத்துப் பரப்புரை செய்யும் தேர்தல் ஆணையம், 
பொன்பரப்பியில் சாதிவெறியர்களால் தடுக்கப்பட்ட சுமார் 250 வாக்காளர்களின் வாக்களிக்க வேண்டுமென்கிற கோரிக்கையை ஏற்க மறுத்திருப்பது தேர்தல் ஆணையம் நடத்திய அப்பட்டமான ஒரு சனநாயகப் படுகொலையாகும். நேர்மை தவறி வெளிப்படையாக ஆளுங்கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் தேர்தல் ஆணையத்திடமிருந்து சனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதே தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவில் தேர்தல்ஆணையம் இத்தேர்தலில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆட்பட்டுருக்கிறது. அந்த அளவுக்கு வெளிப்படையாக ஆளுங்கட்சி ஆதரவுநிலை எடுத்து செயல்படுவது அனைத்துவகை முறைகேடுகளுக்கும் வழிவகுக்குமென்பதையும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பெருங்கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக