வியாழன், 16 டிசம்பர், 2021

திராவிடர் கழகத்தின்மீது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் அவதூறுப் பிரச்சாரம்! காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். - கி.வீரமணி



திராவிடர் கழகத்தின்மீது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் அவதூறுப் பிரச்சாரம்!
காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். - கி.வீரமணி

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் - கட்சியின் அதிகாரப்பூர்வமான முறையில் நேற்று (13.12.2021) பிற்பகல் 12.48 மணிக்கு திராவிடர் கழகம் பற்றி பொய்யான தகவலைப் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் விபத்தில் மரணித்தது குறித்து. திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கலையும், வீர வணக்கத்தையும் ‘விடுதலை’ நாளேட்டில் 8.12.2021 அன்று வெளியிட்டுள்ளோம்.

உண்மை இவ்வாறு இருக்க, ‘திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமான துணை அமைப்புகள் ஜெனரல் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடி இருப்பதாக’ தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவர் திரு.அண்ணாமலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

எங்கு, எப்பொழுது திராவிடர் கழகம் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடியது என்று விளக்கப்படவில்லை என்பதிலிருந்தே, இது பொய்யானது என்பது வெளிப்படை.

திராவிடர் கழகத்தின்மீது பொய்யான வகையில் அபாண்டமாக அவதூறு பரப்பி, மக்கள் மத்தியில் திராவிடர் கழகத்தைப்பற்றி மோசமான அபிப்ராயம் உருவாகும் வகையில் செயல்பட்டுள்ளார்.

தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு, 75 ஆண்டுகளுக்குமேல் - மக்கள் மத்தியில் நிலவும் தீண்டாமை, ஜாதி, மூடநம்பிக்கை இவற்றை எதிர்த்தும், சமூகநீதி, பெண்ணுரிமை, மதச்சார்பற்ற தன்மை, பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும், செயல் பாடுகளையும் மேற்கொண்டுவரும் அரசியல் சார்பில்லாத ஒரு சமூக சீர்திருத்த இயக்கத்தின்மீது அவதூறு பரப்பியுள்ள தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலைமீது சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசையும், குறிப்பாகக் காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக