சனி, 14 செப்டம்பர், 2019

அமித்ஷா கருத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில், அமித்ஷா அவர்களின் கருத்துக்கான எதிர்வினை குறித்து முடிவெடுக்கப்படும்.
 -  மு.க.ஸ்டாலின் பேட்டி
(தலைவர், திமுக)


இன்று (14-09-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதன் முழுவிவரம் பின்வருமாறு:

கேள்வி : இளைஞர் அணியில் 30 இலட்சம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை வைத்து உதயநிதி அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது பற்றி?

மு.க.ஸ்டாலின்: அது அவருடைய வேலை – கடமை. அந்த வேலையை அவர் செய்துக் கொண்டிருக்கிறார்.

கேள்வி : ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு, ஒரே நாட்டிற்கு ஒரே மொழி இந்தி தான் என்று அமித் ஷா அவர்கள் சொல்லியிருக்கிறார். பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் இதுபோன்று கருத்து கூறியிருப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

மு.க.ஸ்டாலின் : பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்குப் பிறகு, இது போன்று 2வது முறையாக தொடர்ந்து தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் ரயில்வேயில், தபால் அலுவலகங்களில், அது தேர்வாக இருந்தாலும், வேலை வாய்ப்பாக இருந்தாலும், அறிக்கைகளாக இருந்தாலும் அவைகளில் எல்லாம் தமிழ் இடம்பெறக் கூடாத ஒரு நிலையை, பா.ஜ.க ஆட்சி ஈடுபடுத்திள்ளது. அதனை, ‘முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி, அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியதற்குப் பிறகு அவைகள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றது.

ஆனால், திடீரென்று இன்று அமித்ஷா அவர்கள் கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. எனவே, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இது நிச்சயம் அமையும். அக்கருத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வலியுறுத்துகிறேன்.

நாளைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா நிகழ்ச்சி முடிந்த மறுநாள், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து இதனை எப்படி சந்திப்பது? எப்படி நம்முடைய எதிர்ப்புக் குரலை கொடுப்பது? என்பது பற்றி கலந்து பேசி முடிவெடுத்து அதற்குப் பிறகு அறிவிக்க இருக்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக