செவ்வாய், 14 ஜூன், 2022

பெங்களூரு தேசிய ராணுவப் பள்ளியின் பவள விழாக் கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை


 பெங்களூரு தேசிய ராணுவப்பள்ளியின் பவள விழாவை கொண்டாடுவதற்கான இந்த சிறப்புமிகு விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இங்கு பயிற்சி பெறும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள்,  முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன். 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளி, தற்போது நாட்டில் உள்ள மிகச்சிறந்த உண்டு உறைவிடப்பள்ளிகளில் ஒன்றாக திகழ்கிறது.

தற்போதைய கர்நாடகத்தை உள்ளடக்கிய இந்த பிராந்தியம், ஆன்மீகம், கலை, கட்டிடக்கலை, அறிவியல், கல்வி மற்றும் வீரம் போன்றவற்றில் பல நூறு ஆண்டுகளாக  சிறப்புற்று திகழ்கிறது.

இந்த மண்ணின் மைந்தரும், இந்திய ராணுவத்தின் முதலாவது இந்திய தலைமை தளபதியுமான  பீல்டு மார்ஷல் கே எம் கரியப்பாவின் பங்களிப்பை இந்தியர்கள் எப்போதும் நினைவு கூர்வார்கள்.

கர்நாடக மாநிலம் நவீன கல்வி மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னோடி மையமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்பு அட்டவணையில், கர்நாடகா முதலிடத்தை பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான சர்வதேச அளவில் ஒப்பிடக்கூடிய மையமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது.

ராணுவ வீரர்களின் புதல்வர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட தேசிய ராணுவப்பள்ளிகளில், தற்போது சாதாரண பொதுமக்களின் குழந்தைகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டு வருகின்றனர்.  தற்போது  இந்த பள்ளியில் 23 மாநிலங்களைச்சேர்ந்த மாணவர்கள் பயின்று வருவதாக என்னிடம் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீர் முதல் கேரளா வரை  உள்ள மாநிலங்களைச்சேர்ந்த மாணவர்கள் இங்கு பயில்வது, “வேற்றுமையில் ஒற்றுமையை” பிரதிபலிக்கிறது. இதுபோன்ற பல்வேறு தரப்பினரும், ஓரிடத்தில் இணைந்து படிப்பதன் மூலம், ஒரு மாணவர் சக மாணவர்களின் கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரிய சிறப்புகளை அறிந்துக்கொள்ள உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் சுதந்திர தின அமிர்த பெருவிழா கொண்டாடப்படும்  வேளையில், இந்த பள்ளியின் பவள விழாவும் கொண்டாடப்படுவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இந்த பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் பயணம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள குக்கிராமங்களிலும் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை எடுத்துக்கூறியதுடன், ராணுவப்படைகளில் சேரும்மாறு இளைஞர்களை ஊக்குவித்துள்ளது.  இதுபோன்ற  தேசப்பற்று மிக்க முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக