எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மனதின் குரலின் மேலும் ஒரு பகுதி வாயிலாக நாம் ஒன்றிணைகிறோம். இது 2022ஆம் ஆண்டின் முதலாம் மனதின் குரல். நாடு-நாட்டுமக்கள் ஆகியோரின் ஆக்கப்பூர்வமான கருத்தூக்கங்கள்-சமூக அளவிலான முயல்வுகள் நிறைந்திருக்கும் விஷயங்களை இன்று நாம் மீண்டும் முன்னெடுத்துச் செல்வோம். இன்று நமது வணக்கத்துக்குரிய அண்ணல் காந்தியடிகள் மறைந்த நாள். ஜனவரி மாதம் 30ஆம் தேதி என்பது அண்ணல் அளித்த கற்பித்தல்களை மீண்டும் நினைவில் கொள்ள வைக்கிறது. சில நாட்கள் முன்பாகத் தான் நாம் நமது குடியரசுத் திருநாளைக் கொண்டாடினோம். தில்லியின் ராஜ்பத்தில் தைரியம் மற்றும் திறமைகளைப் பார்த்தோம், இவை அனைவருக்குள்ளும் பெருமிதத்தையும், உற்சாகத்தையும் நிரம்பச் செய்தன. ஒரு மாற்றத்தையும் நீங்கள் கவனித்திருக்கலாம் - குடியரசு தினக் கொண்டாட்டங்கள் ஜனவரி மாதம் 23ஆம் தேதி அதாவது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளன்று தொடங்கி, ஜனவரி மாதம் 30ஆம் தேதி, அதாவது காந்தியடிகள் காலமான தினம் வரை நடக்கும். இந்தியா கேட்டில் நேதாஜியின் டிஜிட்டல் உருவமும் நிறுவப்பட்டிருக்கிறது. இது தேசமெங்கிலும் மிகப் பெரிய அளவு வரவேற்பைப் பெற்றது மக்கள் ஆனந்தப்பட்டார்கள், அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளை நம்மால் என்றுமே மறக்க இயலாது.