வியாழன், 24 அக்டோபர், 2019

அள்ளி வீசப்பட்ட வெள்ளிக் காசுகள் வெற்றியைத் தீர்மானித்து இருக்கின்றது. - வைகோ

தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

- வைகோ MP.
(பொதுச்செயலாளர், மதிமுக.)


தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி - நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், புதுவை மாநிலம் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இத்தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்.

இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது என்பதை கடந்த காலங்களில் நாடு பார்த்தது. இந்த இடைத்தேர்தலில் தமிழ்நாட்டில் முழுக்க முழுக்க ஆளும் கட்சியின் அதிகார பலம், அள்ளி வீசப்பட்ட வெள்ளிக் காசுகள் வெற்றியைத் தீர்மானித்து இருக்கின்றது.

விக்கிரவாண்டி - நாங்குநேரி இரண்டு தொகுதிகளிலுமே அரசு இயந்திரம் முழுமையாக ஆளும் கட்சியின் பக்கம் துணை நின்றது. இடைத்தேர்தல்களின் முடிவுகள் மட்டும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனோநிலையை காட்டுவதாகக் கருதிவிட முடியாது. ஜனநாயகக் களத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டி, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு இருக்கின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இத்தேர்தலில் பசி நோக்காமல், கண் துஞ்சாமல் களத்தில் இறங்கிப் பணியாற்றிய தி.மு.க., காங்கிரஸ், மறுமலர்ச்சி தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மராட்டியம் மற்றும் அரியானா மாநிலங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறப்போவதாக பாரதிய ஜனதா கட்சியினர் கூறி வந்தனர். ஆனால் கடந்தத் தேர்தலைவிட குறைவான இடங்களையே பெற்றிருக்கின்றன.

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆருயிர் சகோதரர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் தேர்தல் களத்தில் தங்கள் கடமையைச் செய்தனர். வரும் தேர்தல்களில் சிறப்பான வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுவோம்.

புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களுக்கும், கூட்டணி நிர்வாகிகளுக்கும், வாக்காளப் பெருமக்களுக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக