செவ்வாய், 15 அக்டோபர், 2019

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த துரோகம் - கே.எஸ்.அழகிரி

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த துரோகத்திற்கு உரிய பாடத்தை வாக்காளப் பெருமக்கள் வருகிற தேர்தல் நாள் அன்று நிச்சயம் தங்களது வாக்குகள் மூலம் வெளிப்படுத்துவார்கள்

- கே.எஸ்.அழகிரி
(தலைவர், காங்கிரஸ்.) 



நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு நீர்ப்பாசன திட்டம் குறித்து ஆதாரமற்ற அவதூறான கருத்துக்களை கூறியிருக்கிறார். இத்திட்டத்தைப் பொறுத்தவரை கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, 2009 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.369 கோடி ஒதுக்கப்பட்டு தீவிரமாக திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த 50 ஆயிரம் ஹெக்டேர் நிலம் நீர்பாசனம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் உப்பு நீராகியுள்ள நீராதாரங்கள் பயன்படுத்துகிற நல்ல நீராக மாறும்.

தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் வீணாக கடலில் கலக்கிற 14 டி.எம்.சி. நீரை தடுத்து நிறுத்தி, விவசாயிகளுக்கு பயன் தருகிற வகையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட 2 வருடங்களில் ரூபாய் 214 கோடி செலவிடப்பட்டு திட்டத்தின் பாதி வேலைகள் முடிந்து விட்டன. இந்நிலையில் 2011இல் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை கிடப்பில் போடுகிற முடிவை எடுத்தார். கலைஞர் ஆட்சியில் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முடக்குவது என்பது ஜெயலலிதாவின் கொள்கையாகவே இருந்தது. எனவே, இதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பாக அந்தப் பகுதியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு. அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2016-க்குள் இத்திட்டத்தை முடித்து விடுவோம் என்று உறுதி கூறியது.

ஆனால், அதன்படி எந்த வேலையும் தொடங்கப்படவில்லை. மீண்டும் 2017 இல் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று காரணம் கூறியது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்து இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று ஆணை பிறப்பித்தது. நாங்குநேரி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் எச். வசந்தகுமார் இத்திட்டத்தை அவசியம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி பேசினார். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் தமிழக அரசு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்தது. இதன்படி, எந்தவிதமான முறையான திட்ட மதிப்பீடும், ஆய்வும் செய்யாமல் டெண்டர் விடப்பட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவான 12 ஒப்பந்தக்காரர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. இதனால், ஒப்பந்தக்காரர்கள் பயன் அடைந்தார்களே தவிர, இணைப்பு கால்வாய் திட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மொத்தத்தில் நான்கு கட்டப் பணிகளில் இரண்டு கட்டப் பணிகள் தி.மு.க. ஆட்சியில் முடிக்கப்பட்டது. ஆனால், மீதிப் பணிகள் 2011-க்கு பிறகு நடைபெறவில்லை. தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் இத்திட்டம் குறித்து முறையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டம் 2020-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்களை ஏமாற்றுவதற்காக பொய்யான வாக்குறுதியை வழங்கியிருக்கிறார். அத்துடன் நில்லாமல், தி.மு.க. ஆட்சியில் நிலம் கையகப்படுத்தாமலேயே திட்டம் அறிவிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பான தகவலை கூறியிருக்கிறார். ஆனால், திட்ட அறிவிப்பு வந்தவுடனேயே திருநெல்வேலி மாவட்டத்தில் 694 ஹெக்டேர் நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 106 ஹெக்டேர் நிலங்களும் இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலம் கையகப்படுத்தாமல் திட்டத்தின் பாதி பணிகள் நிறைவு பெற்றிருக்காது என்பதை ஒரு முதலமைச்சர் அறியாமல் இருப்பது மிகுந்த வியப்புக்குரியது. ஒரு முதலமைச்சராக இருப்பவர் கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்து முடிந்த வேலைகளை நடக்கவில்லை என்று கூறுவதைவிட முறையற்ற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

இத்திட்டப் பணிகள் 2009 இல் தொடங்கப்பட்டு, 2011 வரை 50 சதவீத பணிகள் முடிக்கப்பட்டது. ஆனால், 2011 இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 8 ஆண்டுகளாக இந்த நீர்ப்பாசன திட்டத்திற்காக இந்த அரசு எடுத்த முயற்சிகள் என்ன ? தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டதனாலேயே அந்த திட்டத்தை நிறைவேற்றாமல் முடக்க வேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அரசியல் உள்நோக்கத்தோடு கருதியதால் தான் இத்திட்டம் முடக்கப்பட்டது என்பதை எடப்பாடி பழனிச்சாமியால் மறுக்க முடியுமா ? நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதற்குப் பிறகும் பணிகள் தொடங்கப்படாத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்ட காரணத்தினால் தான் இப்பணியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தமான சூழல் ஏற்பட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இந்த நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றுவதில் இப்பகுதிகளுக்கு குறிப்பாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்த துரோகத்திற்கு உரிய பாடத்தை வாக்காளப் பெருமக்கள் வருகிற தேர்தல் நாள் அன்று நிச்சயம் தங்களது வாக்குகள் மூலம் வெளிப்படுத்துவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். எடப்பாடி பழனிச்சாமி அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைக்கு பாடம் புகட்டுவதற்கு கிடைத்திருக்கிற அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, அ.தி.மு.க. வேட்பாளரை தோற்க்கடிக்க வேண்டுமென வாக்காளப் பெருமக்களை கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக