புதன், 9 அக்டோபர், 2019

இந்தியா - சீனா இடையேயான நல்லுறவு பொருளாதார வளர்ச்சி தரும் நம்புவோம் - ஜி.கே.வாசன்

இரு நாட்டு மக்களுக்கும் பயன் தருவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும், நல்லுறவுக்கும் முன்னேற்றம் தரும் என்று நம்புவோம்.

-ஜி.கே.வாசன்
(தலைவர், த.மா.கா.)


இந்தியா - சீனா இடையேயான நல்லுறவுக்கு நல்வழி ஏற்படுத்தும் விதமாக சென்னை மாமல்லபுரத்தில் சீன அதிபரும், பாரதப் பிரதமரும் நாளை மறுநாள் 11 ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த இருப்பது இரு நாட்டு மக்களுக்கும் பயன் தருவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும், நல்லுறவுக்கும் முன்னேற்றம் தரும் என்று நம்புவோம்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் அரசு முறை பயணமாக நாளை மறுநாள் சென்னை வருவது தமிழர்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக சீன அதிபர் சென்னைக்கு அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மாமல்லபுரத்திற்கு வந்து இந்தியப் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்து இரு நாட்டிற்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவது பாராட்டுக்குரியது.

இந்திய மக்கள் அனைவரும் இந்த சந்திப்பை மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமையும்.

இந்தியா - சீனா இடையே அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், எல்லை, பிராந்திய அமைதி உள்ளிட்ட பலவற்றில் ஒத்த கருத்து ஏற்பட்டு இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்க வேண்டும், பயன் தர வேண்டும், பலன் அளிக்க வேண்டும் என்பது தான் இந்திய மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இப்பேச்சுவார்த்தையில் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் நமது நாட்டிற்கும் சீனாவிற்கும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது இரு நாடுகளுக்கும் பெரும் பயன் தரும்.

எனவே தமிழகத்திற்கு வருகை புரிந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள சீன அதிபருக்கும், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக