ஞாயிறு, 3 ஜனவரி, 2021

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஊடகத்துறையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது! - தி.வேல்முருகன்



 பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஊடகத்துறையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது! - தி.வேல்முருகன்

உலகம் முழுவதும் 2020-ல் குறைந்தது 50 ஊடகத்துறையினர் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் ஒழுங்கமைந்த குற்றங்கள் , ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு குறித்து ஆய்வு செய்யும் போது கொலை செய்யப்பட்டதாக Reporters Without Borders என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்த துணியும் ஊடகவியலாளர்கள் காட்டுமிராண்டித்தனமான கொலைகளின் இலக்குகளாகத் தொடர்கின்றனர் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

புலனாய்வு ஊடகவியலாளா்கள் கொலை செய்யப்படும் போக்கு அதிகரித்துள்ளது என்று Reporters Without Borders குழு கூறுகிறது. 

இந்தியாவில் கொரோனா குறித்து செய்தி வெளியிட்ட குறைந்தது 57 ஊடகத்துறையினர் மீது கைது நடவடிக்கை,  முதல் தகவலறிக்கை, தாக்குதல்கள், வீட்டின் மீது தாக்குதல்கள் நடைபெற்றிருப்பதாக ரைட்ஸ் அண்ட் ரிஸ்க்ஸ் அனாலிசிஸ் குரூப் (RRAG) கூறியிருக்கிறது. 

குறிப்பாக, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஊடகத்துறையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. ( சிறைக்குப் பின்னால் : இந்தியா 2010-2020, ஊடகத்துறையினர் கைது மற்றும் தடுப்புக்காவல்)

நேர்மையான ஊடகத்துறையினரை கொலை செய்தோ, சிறைப்படுத்தியோ, தாக்கியோ அச்சுறுத்துவதன் மூலம் உண்மையை மக்களிடமிருந்து தற்காலிகமாக மறைக்கப் பார்க்கிறார்கள். 

கருத்துரிமையின் குரல்வளையை நெரிக்கும் விதமாக ஒருபுறம் ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைவது, இன்னொருபுறம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தாக்குதல் தொடுப்பது, இவற்றுக்கும் மேலாக கௌரி லங்கேஷ் போன்று நேர்மையான பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்வது என்ற மும்முனைத் தாக்குதலை பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தொடுத்துள்ளது. 

குறிப்பாக, குணசேகரன், கார்த்திகைச் செல்வன், நெல்சன் சேவியர், தியாகச்செம்மல், கார்த்திகேயன், செந்தில்வேல், ஜீவசகாப்தன், அசீஃப், பீர் முகமது உள்ளிட்ட ஊடக நண்பர்களின் மீதே, பாஜக கும்பல் தனிமனித தாக்குதலை நடத்தியது.  குணசேகரன், செந்தில்வேல், ஜீவசகாப்தன், அசீஃப் ஆகியோர்ரஃ தாங்கள் பணியாற்றி ஊடங்களை விட்டு வெளியேறும் படி செய்தது பாஜக கும்பல் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பெண் பத்திரிகையாளர்களை, பாசிச கும்பலை சேர்ந்த சிலர் இழிவுப்படுத்தியதையும் நாம் அறிவோம். 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இப்படியானவர்களின் நடவடிக்கைகளை அனுமதிப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறக் கூடிய அபாயம் இருக்கிறது.

 எனவே, Reporters Without Borders என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை கருத்தில் கொண்டு, ஊடகவியலாளர்கள் மீது பாசிச கும்பல் நடத்தி வரும் தாக்குதலை தடுக்க அதிமுக அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக