செவ்வாய், 13 அக்டோபர், 2020

உலகப் புகழ்த் தகுதியே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை, மத்தியப் பல்கலையாக்கிடும் கெட்ட எண்ணத்தில்தான், உயர்புகழ்த் தகுதி எனச் சூழ்ச்சி வலை பின்னுகிறார் சூரப்பா! - தி.வேல்முருகன்


 உலகப் புகழ்த் தகுதியே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை, மத்தியப் பல்கலையாக்கிடும் கெட்ட எண்ணத்தில்தான், உயர்புகழ்த் தகுதி எனச் சூழ்ச்சி வலை பின்னுகிறார் சூரப்பா! 

அந்த வலையில் அதிமுக அரசு விழ வேண்டாம்; அது அண்ணா பல்கலைக்கழகமாகவே இருக்கட்டும்; சூரப்பா சும்மாவே இருந்துவிட்டுப் போகட்டும் என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ்த் தகுதி (Institute of Eminence) வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை அப்பல்கலைக்கழகமே திரட்டிக் கொள்ளும் என்று ஒன்றிய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. 

இந்தியா முழுவதும் 20 பல்கலைக்கழகங்களுக்கு உயர்புகழ்த் தகுதி வழங்க ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளதில், அண்ணா பல்கலைக்கழகமும் அதில் அடக்கமாம். 

உயர்புகழ்த் தகுதிக்கு கட்டமைப்பை பெருக்க வேண்டுமாம். அதற்கு ரூ.2,750 கோடி செலவாகுமாம். அதில் ரூ.1000 கோடியை ஒன்றிய அரசு வழங்குமாம். மீதி ரூ.1,750 கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கு தமிழக அரசு வழங்க வேண்டுமாம். இதுதான் உயர்புகழ்த் தகுதிக்கு ஒன்றிய அரசு விதித்துள்ள நிபந்தனை. 

தமிழக அதிமுக அரசு இதை அடியோடு நிராகரித்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல், இது குறித்து முடிவெடுக்க அமைச்சர்கள் குழுவை அறிவித்திருக்கிறது. 

ஆனால் துணைவேந்தர் சூரப்பாவோ, “தமிழக அரசு ஒன்றும் நிதி தர வேண்டியதில்லை; அண்ணா பல்கலைக்கழகமே 5 ஆண்டுகளில் ரூ.1570 கோடியைத் தன் சொந்த நிதியிலிருந்து செலவழித்துக் கொள்ள முடியும்; எனவே உயர்புகழ்த் தகுதி வழங்க வேண்டும்” என்று, தமிழக அரசைக் கேட்காமலேயே, ஒன்றிய அரசுக்கு எழுதியிருக்கிறார். 

சூரப்பாவுக்கு இந்தத் துணிச்சலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் எங்கிருந்து வந்தது? 

அவரைத் துணைவேந்தராக்கிய ஆளுநராலும், ஆளுநரை நியமித்த மோடி அரசாலும்தான் இந்தத் துணிச்சலும் அதிகாரத் துஷ்பிரயோகமும் சூரப்பாவுக்கு வந்ததென்றாலும், “இருக்கிறவன் ஒழுங்காக இருந்தால் சிரைக்கிறவன் ஒழுங்காகச் சிரைப்பான்” என்பதற்கேற்ப அல்லவா தமிழக அரசும் நடந்துகொண்டிருக்க வேண்டும்?,

எடுத்த உடனேயே ஒன்றிய அரசின் இந்தச் சூழ்ச்சித் திட்டத்தை ஒரேடியாக நிராகரிக்காமல், அமைச்சர்கள் குழுவைப் போட்டதென்ன அதிமுக அரசு? 

இந்த இடைவெளியைப் பயன்படுத்தித்தான் சூரப்பா, ஏதோ தன் வீட்டுச் சொத்துக்கு தமிழக அரசை ஏன் கேட்க வேண்டும் என்பது போல தான்தோன்றித்தனமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் போல உடன்பாடு தெரிவித்து ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். 

இது பிறவிக் குணமோ என்னவோ, சுரப்பாவின் இந்த அத்துமீறலை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு உயர்புகழ்த் தகுதி வழங்குவதற்கு வேண்டிய முழுத் தொகையையும் ஒன்றிய அரசே வழங்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் முழுத் தொகையையும் ஒன்றிய அரசே வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோருகிறது; ஆனால் அதை ஒன்றிய அரசு ஏற்கவில்லையாம். 

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ்த் தகுதி வழங்கப் பட்டாலும் கூட, 69% இட ஒதுக்கீடு தொடரும் என ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தமிழக அதிமுக அரசு வலியுறுத்துகிறதாம். ஆனால் இதைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளும் மோடி அரசு, எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவாதமும் அளிக்க மறுக்கிறதாம். 

எப்படி இருக்கிறது!

உயர்புகழ்த் தகுதி என்பது என்பது அண்ணா பல்கலைக்கழகத்தை மத்தியப் பல்கலைக்கழகமாக்கி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் சதியன்றி வேறில்லை. அதன்பின் கல்விக்கட்டணம், தேர்வுக் கட்டணம் கடுமையாக உயரும்; ஏழை எளி நடுத்தர வர்க்க மாணவர்கள் அதில் சேர முடியாத நிலை உருவாகும். அதிகம் ஹிந்தி மாணவர்களே வந்து புகுவர்; அதனால தமிழர்களுக்கு அறவே இடமில்லாமல் போகும்.

இதைப் பற்றியெல்லாம் சூரப்பாவுக்கு கவலை இருக்க முடியாது. அவர் இப்படித் தன்னிச்சையாக செயல்படுவது, 69% இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட நினைப்பவர்களின் கைப்பாவையாக அவர் இருப்பதால்தான். 

மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே பதவியில் இருக்கக்கூடிய துணைவேந்தர் அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகளை எடுக்க முடியாது. அப்படியிருக்க, இப்படி ஒரு முடிவை தன்னிச்சையாகவே சூரப்பா எடுத்ததை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. 

இம்முடிவை தொடக்கத்திலேயே அடியோடு நிராகரித்திருக்க வேண்டிய அதிமுக அரசு, அதற்காக அமைச்சர்கள் குழுவை அமைத்த்தும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதே. அதை உடனடியாக்க் கலைத்துவிடக் கோருகிறோம்.

உலகப் புகழ்த் தகுதியே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத்தான் உயர்புகழ்த் தகுதி எனச் சூழ்ச்சி வலை பின்னுகிறார் சூரப்பா! 

அந்த வலையில் அதிமுக அரசு விழக் கூடாது; அது அண்ணா பல்கலைக்கழகமாகவே இருக்கட்டும்; சூரப்பா சும்மாவே இருந்துவிட்டுப் போகட்டும் என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக