செவ்வாய், 1 டிசம்பர், 2020

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு கவலை


 பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாகப் பற்றிக்கொண்டிருக்கும் நாடுகள் குறித்து கவலை தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, தீவிரவாதத்தை ஆதரிக்கும் புகலிடங்கள், உள்கட்டமைப்பு மற்றும் நிதி வலைப்பின்னலை முற்றிலும் ஒழிப்பதற்காக உலகளவில் அங்கீகரமளிக்கப்பட்ட சட்ட வடிவங்களை செயல்படுத்துமாறு ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டார்.

இந்தியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் அரசு தலைவர்கள் குழுவின் 19-வது அமர்வில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் இந்தியா எதிர்ப்பதாகக் கூறினார்.

"ஆட்சி செய்யப்படாத இடங்களில் இருந்து வரும் மிரட்டல்கள், குறிப்பாக பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாகப் பற்றிக்கொண்டிருக்கும் நாடுகள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். இத்தகைய அணுகுமுறை ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் எண்ணங்களுக்கும், கொள்கைகளுக்கும் முற்றிலும் மாறானது," என்று அவர் கூறினார்.

வளர்ச்சிக்கு இன்றியமையாதத் தேவையாக அமைதி திகழ்வதாக குறிப்பிட்ட திரு நாயுடு, பயங்கரவாதம், குறிப்பாக எல்லை தாண்டிய தீவிரவாதம், இந்த பிராந்தியம் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளதாகக் கூறினார்.

"மனிதகுலத்தின் உண்மையான எதிரி தீவிரவாதம் தான். நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்து போராட வேண்டிய தீமை அது," என்று குடியரசு துணைத் தலைவர் மேலும் கூறினார்.

"தீவிரவாதம் என்னும் தீமையை ஒழிப்பதன் மூலமே நம் அனைவரின் முழுத் திறனையும் நாம் அடைந்து, நிலையான, பாதுகாப்பான மற்றும் நீடித்த வளர்ச்சியை அடைய முடியும்," என்று திரு நாயுடு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக