செவ்வாய், 27 ஏப்ரல், 2021

24 மணிநேரமும் பணியாற்றுகின்ற மருத்துவமனை ஊழியர்களுக்கு குறை வைக்காமல் தேவையானவற்றை செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் காலத்தின் தேவை.- E.R.ஈஸ்வரன்


முதல் கொரோனா அலையில் ஆர்வம் காட்டியது போல மருத்துவர்களும், செவிலியர்களும் இரண்டாவது அலையில் காட்டவில்லை.

முதல் கொரோனா அலை கடந்த வருடம் பரவிய போது மருத்துவர்களும், செவிலியர்களும் உயிர் காக்கும் கடவுள்களாக போற்றப்பட்டார்கள், வணங்கப்பட்டார்கள். பலரும் தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்து மரியாதை செய்தார்கள். பாரத பிரதமர் மோடி அவர்களும் அவர்களுக்காக நாட்டு மக்கள் அனைவரையுமே பாராட்டி கைதட்ட சொன்னார். மாநில அரசுகளும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்கள். சிறப்பு ஊதியமும், காப்பீட்டு திட்டங்களும்  அறிவிக்கப்பட்டன. ஆனால் கொரோனா முதல் பரவல் குறைய ஆரம்பித்த உடன் மருத்துவத்துறைக்கான வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. 

மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட எதையும் அரசாங்கங்கள் வழங்கவில்லை. அதனால் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தார்கள். தங்களுக்கும் நோய் தொற்று பரவும் என்பதை அறிந்தும், தங்கள் மூலமாக தங்கள் குடும்பங்களுக்கும் பரவும் என்பதை தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இரவு பகலாக உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தார்கள். 

இரண்டாவது கொரோனா பரவல் இவ்வளவு தீவிரமாக இருக்குமென்று அறியாத மத்திய, மாநில அரசுகள் செய்வதறியாது தடுமாறி கொண்டிருக்கின்ற நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஒத்துழைப்பும் முன்புபோல இல்லை என்ற செய்தியும் வேதனையளிக்கிறது. பல மருத்துவமனைகளில் குறைவான மருத்துவர்களையும், செவிலியர்களையும் வைத்துதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவையான ஆக்சிஜன் திட்டமிடலும் ஒத்துழைப்பின்மை காரணமாக சரிவர நடக்கவில்லை. தேவையான உயிர்காக்கும் மருந்துகளும் திட்டமிட்டு இருப்பு வைக்கப்படவில்லை. இதற்கெல்லாம் ஈடுபாடும்,  ஆர்வக்குறைவும் தான் காரணம். முதல் கொரோனா பரவலின் போது மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டிருந்த மத்திய மாநில அரசுகள் இப்போது மவுனம் காப்பதும் ஏனென்று புரியவில்லை. 

மருத்துவர்களையும், செவிலியர்களையும் முழுவீச்சில் களமிறக்காமல் கொரோனா பரவலில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. உடனடியாக மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கு உறுதிமொழி அளித்ததை அரசுகள் நிறைவேற்ற வேண்டும். அரசுகளுடைய உறுதிமொழியை மருத்துவர்கள் நம்பாத நிலையில் நீங்கள் அறிவிக்கும் ஊக்கத்தொகைகளை முன்பணமாக கொடுப்பதற்கு அரசு முன்வர வேண்டும். 24 மணிநேரமும் பணியாற்றுகின்ற மருத்துவமனை ஊழியர்களுக்கு குறை வைக்காமல் தேவையானவற்றை செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் காலத்தின் தேவை. மருத்துவர்களுடைய ஆதங்கங்களையும், கள உண்மைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுகின்ற நம் கடமையை செய்திருக்கின்றோம். தவறு எங்கு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக