வியாழன், 8 ஏப்ரல், 2021

இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. - கே.எஸ்.அழகிரி


 கொரோனா தொற்று காரணமாக  கடந்த மார்ச் 2020 முதல்  உயிரிழப்புகள், உடல் நல சீர்கேடுகள், பொருளாதார பேரழிவுகளை இந்தியா சந்தித்து வந்தது. குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானத்தை துறந்து, தங்களது ஊர்களுக்கு பயணம் செய்வதற்கு போக்குவரத்து வசதி இல்லாமல் கால்நடையாகவே நடந்து சென்று தங்களது ஊர்களுக்கு திரும்பி சென்றனர். இதில் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அவலம் பிரதமர் மோடி ஆட்சியில் தான் நிகழ்ந்தது. 

ஆனால், கடந்த 2020 ஏப்ரல் 18 இல் கொரோனாவின் எண்ணிக்கை 2013 ஆக தான் இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டில் மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சியப் போக்கு காரணமாக 6 ஏப்ரல் 2021 இல் பாதிப்பின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 269 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் 630 பேர் பலியாகி உள்ளனர். உலக நாடுகள் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா இருப்பது மிகுந்த கவலையைத் தருகிறது. 

அதேபோல, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஒரே நாளில் 4 ஆயிரமாகவும், சென்னையில் 1500 ஆகவும் உயர்ந்திருக்கிறது. இத்தகைய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக மக்களிடையே மீண்டும் அச்சமும், பீதியும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், தங்களுடைய வாழ்வாதாரம் மீண்டும் படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டு விடுமோ என்கிற கவலையில் மக்கள் ஆழ்ந்துள்ளனர். இதனால், அவர்களுக்கு எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையும், கேள்விக் குறியும் ஏற்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புகளை விட, கொரோனா தொற்று காரணமாக தங்களது உயிருக்கு ஏதாவது ஒருவகையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பீதியில் மக்கள் உறைந்திருக்கின்றனர். இவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன ? 

அதேபோல, கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கிற கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அந்த வகையில்  18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி கொரோனா தடுப்பூசி உடனடியாக போட வேண்டும். ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் யாருக்கு தடுப்பூசி அவசியமோ, அவர்களுக்கு மட்டும் தான் போடப்படும் என்று கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஏப்ரல் 6 நிலவரப்படி 8.7 கோடி பேருக்கு போடப்பட்டிருக்கிறது. இதை வைத்து பார்க்கிற போது 1 லட்சம் பேருக்கு சராசரியாக 6,310 பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால், உலகளவில் தடுப்பூசி போட்டவர்கள் சராசரியாக 1 லட்சம் பேருக்கு 8,900 ஆக இருக்கிறது. மற்ற நாடுகளை ஒப்பிடுகிற போது 1 லட்சம் பேருக்கு அமெரிக்காவில் 50,410, பிரிட்டனில் 54,680 ஆகவும் இருக்கிறது. இந்நிலையில் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலமே கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க முடியும். மத்திய அரசு இதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டுமே தவிர, தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மத்திய அரசு இதுவரை 6 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு மக்கள் விரோத நடவடிக்கையாகும். இதனை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக