செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

அடித்தட்டு மக்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை பாதுகாக்கும். சாமானிய மக்களுடைய தேவைகளை, கூக்குரலை மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை.- E.R ஈஸ்வரன்


 அனைத்து தரப்பு மக்களுடைய எதிர்பார்ப்பையும் கண்டுகொள்ளாமல் ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை.

மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஒரு திரைப்படம் பார்க்கும் போது இடைவேளைக்குப் பிறகு முக்கியமான காட்சிகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் படம் நிறைவு என்று போட்டு முடித்தது போல இந்தியா முழுவதும் எதிர்பார்ப்புகளோடு அமர்ந்திருந்தவர்கள் அதிர்ச்சியோடு ஏமார்ந்து போய் இருக்கிறார்கள். 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான ஆக்கபூர்வமான அறிவிப்புகள் ஏதும் இல்லை. உலக அளவில் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவின் ஏற்றுமதி மிக குறைவாக இருக்கின்ற சூழ்நிலையில் அதை அதிகப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உடைய இரத்தத்தை உறிஞ்சி தான் தனியார் பெரு தொழில் நிறுவனங்கள் லாபத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். 

அதன் மூலமாகத்தான் வரி வருவாய் அதிகமாய் இருக்கிறது. அதற்கான பலனை பாதிக்கப்பட்ட சிறு, குறு நிறுவனங்களுக்கு தருவதற்கு பதிலாக பெரு நிறுவனங்களுக்கு வரி விகிதம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் மீண்டும் வசதி படைத்தவர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசம் அதிகப்படுத்துவதற்கான நோக்கங்கள் தான் தெரிகிறது. அதை குறைப்பதற்கான எந்த முயற்சியும் தென்படவில்லை. 2020ஆம் ஆண்டு வங்கிகள் மூலம் அறிவிக்கப்பட்ட 3 லட்சம் கோடி கடனை தொழில் நிறுவனங்கள் இன்னும் முழுமையாக பயன்படுத்தாத போது அவை 5 லட்சமாக அதிகப்படுத்தி அறிவித்திருப்பது எதற்காக என்று புரியவில்லை. 

ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையில் கோதாவரி, காவிரி இணைப்பு என்பது பல வருடங்களாக அறிவிப்பு நிலையிலேயே இருக்கின்றன. உற்பத்தி மாநிலங்களின் ஜிஎஸ்டி வரி இழப்பை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு செய்து கொண்டு இருக்கின்ற உதவியை இன்னும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுமென்பது கண்டுகொள்ளப்படவில்லை. விவசாயிகளை காப்பாற்றுவதற்கான எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகள் ஏதும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. டிஜிட்டல் என்ற வார்த்தை தான் நிதிநிலை அறிக்கையில் மிக அதிகமாக ஒலித்தது. இது எந்தவகையில் அடித்தட்டு மக்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை பாதுகாக்கும். சாமானிய மக்களுடைய தேவைகளை, கூக்குரலை மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை என்பது தான் இந்த நிதிநிலை அறிக்கையை பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக