புதன், 6 நவம்பர், 2019

தாய்மொழி பாதுகாப்பு - இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

“தாய்மொழி பாதுகாப்பு - இந்தி திணிப்பு எதிர்ப்பு
தென் மாநிலங்களின் மாநாடு”

- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)


இந்திய நாடு பல தேசிய இனங்களைக் கொண்டது. இதை அரசியல் சட்டமும் அங்கீகரித்துள்ளது. அதனடிப்படையிலேயே அரசியல் சட்டத்தின் முதல் பிரிவு இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று வரையறுத்திருக்கிறது. இந்த வரையறுப்பு இந்தியாவின் பன்முகத் தன்மையை அங்கீகரிக்கிறது. எனவேதான், வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமைமிகு அடையாளமாக போற்றப்படுகிறது.


நாட்டின் விடுதலைக்குப் பின்னர் எண்ணற்ற போராட்டங்களுக்குப் பிறகு மொழிவழி அடிப்படையிலான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்தியாவின் மொழி பிரச்சனைக்கு முறையான தீர்வு காணப்படவில்லை. பல மொழி பேசும் மக்களைக் கொண்ட இந்திய நாட்டில் இந்தி மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவித்தது மட்டுமின்றி அம்மொழியை அனைத்து மாநிலங்களிலும் வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தையும் மொழிவழியான மாநிலங்களையும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் அதன் ஆரம்ப காலம் தொட்டு எதிர்த்து வருவதை தனது தத்துவார்த்த நிலைபாடாக கொண்டுள்ளது. அதனடிப்படையிலேயே “ஒரே நாடு, ஒரே மொழி” என்ற கோட்பாட்டின் படி இந்தியை வலிந்து திணிப்பதுடன், சமூகத்தை சமஸ்கிருதமயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தி மொழி வளர்ச்சிக்கு பலநூறு கோடி ரூபாய்களை வாரி வழங்கும் மத்திய அரசு, இதர மொழிகளின் வளர்ச்சிப் பற்றி எள்ளளவும் கவலைப்படவில்லை.

சொந்த விருப்பத்தின் அடிப்படையில் யார் ஒருவரும் இந்தி உட்பட எந்த மொழியையும் கற்பது அவரது உரிமையாகும். ஆனால், இதர மொழி பேசும் மக்கள் மீது கட்டாயமாக இந்தியை திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள தேசிய கல்வி வரைவுக் கொள்கையின் மூலம் இந்தி கொல்லைப்புற வழியாக திணிக்கப்படுகிறது. ஒருபுறம், இந்தியை கட்டாயமாக திணிப்பதும், இன்னொருபுறம் அரசியல் சட்டம் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளையும் புறக்கணிப்பதும், கூட்டாட்சித் தத்துவத்தை சிதைப்பதாகும் என இம்மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தாய்மொழி காப்பும், வளர்ப்பும் ஒரு மனிதனின் பிறப்புரிமை. பயிற்று மொழியாகவும், அந்தந்த மாநிலத்தில் அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியை அரியணையேற்றுவதும், அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சமத்துவ அங்கீகாரம் வழங்குவதுமே இந்தியாவின் பன்முகத் தன்மையையும், ஒற்றுமையையும் பாதுகாத்திட உதவி செய்யும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது.

இந்த சீரிய நோக்கத்தை நிறைவேற்றிட கீழ்க்கண்ட கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்மாநிலங்களின் மாநாடு நாட்டு நலனிலிருந்தும், ஒற்றுமைக்கான அக்கறையிலிருந்தும் முன்வைக்கிறது.

1. தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டு எந்தவொரு வகையிலும் மாநிலங்களின் மீது இந்தி திணிப்பதை இந்த மாநாடு கண்டிக்கிறது. அதேசமயம் எந்தவொரு மொழியையும் யாரும் கற்பதற்கு எவ்வித தடையும் இருக்கக்கூடாது என்பதையும் இம்மாநாடு உறுதிபட தெரிவிக்கிறது.

2. மத்திய ஆட்சி நிர்வாகத்தில் 8வது அட்டவணையில் உள்ள மொழிகள் அனைத்திற்கும் சமமான வாய்ப்பும், வளர்ச்சிக்கான நிதியும் வழங்குவதை மத்திய அரசு உத்தரவாதப்படுத்திட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

3. மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே அனைத்து நிலைக் கல்வியையும் கற்பதற்கும், அலுவல் மொழி, நீதிமன்ற மொழியாக அந்தந்த மாநில மொழிகளே விளங்குவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அவசர கால நிலைக்கு முன்பாக இருந்ததைப் போன்று கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென கோருகிறது.

4. மாநிலத்திலுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் அந்தந்த மாநில மொழிகள் பயன்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

5. மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளும் அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள அனைத்து மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்.

6. நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசு நிர்வாகத்தில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழி என்பது கைவிடப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக அரசியல் சட்ட 17வது அட்டவணையில் உரிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

7. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர்களின் தாய் மொழியில் பேசுவதற்கான உரிமையும், அதேசமயம் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

8. அனைத்து மத்திய சட்டங்கள், அரசாங்க உத்தரவுகள் மற்றும் தீர்மானங்கள் அனைத்து தேசிய மொழிகளிலும் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இந்தியாவின் பன்முகத்தன்மையை கணக்கில் கொள்ளாமல் இந்தி மொழியை பல்வேறு தேசிய இனங்களின் மீதும் கட்டாயமாகத் திணிக்கும் பாஜகவின் முயற்சிகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, அனைத்து தேசிய மொழிகளையும் சமமாக அங்கீகரிப்பதற்கான போராட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல முன்வருமாறு ஜனநாயக சக்திகளையும் இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக