வியாழன், 28 நவம்பர், 2019

தமிழக நதிகள் இணைப்பு திட்டங்கள் குறித்து மக்களவையில் திரு. டி. ஆர். பாலு வலியுறுத்தல்

தமிழக நதிகள் இணைப்பு திட்டங்கள் குறித்து
மக்களவையில் திரு. டி. ஆர். பாலு வலியுறுத்தல்


முன்னாள் மத்திய அமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக நாடளுமன்ற குழுத்தலைவரும், திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான திரு. டி. ஆர். பாலு, தமிழகத்தின் நதிகள் இணைப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு மாண்புமிகு மத்திய நீர் வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் விரிவான பதிலை மக்களவையில் இன்று 28 நவம்பர் 2019 அளித்துள்ளார்.

நதிகள் இணைப்பு குறித்த சிறப்புக் குழு தீபகற்ப இந்தியாவில் 14 இணைப்புகளையும் இமயமலை நதிகள் இரண்டு இணைப்புகள் நிறைவேற்ற கண்டறிந்துள்ளதா எனவும், இந்த இணைப்பு திட்டங்கள் எவ்வளவு நாட்களில் முடிக்கப்படும் என்றும், வறட்சி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் திட்டங்கள் ஏதேனும் உள்ளனவா என்று திரு. டி. ஆர். பாலு மத்திய நீர் வளத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். 2012 பிப்ரவரி உச்ச நீதிமன்ற திப்பின்படி, செப்டம்பர், 2014ல் நதிகள் இணைப்பிற்கான சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. 

சிறப்புக் குழு இதுவரை 16 சந்திப்புகளை நடத்தியுள்ளது. தேசிய நீர் வளர்ச்சி முகமையின், தேசிய முன்னோக்கு திட்டத்தின்படி தீபகற்ப இந்தியாவில் 16 நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கும் இமாலாய நதிகளில் இரண்டு நதி நீர் இணைப்பு திட்டங்களுக்கும் சாத்தியக்கூறு அறிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது திட்ட வரைவு அறிக்கைகளுக்கான முயற்சிகள் எடுக்கப்பட உள்ளன.

கோதாவரி - ஈஞ்சம்பள்ளியிலிருந்து கிருஷ்ணா - நாகர்ஜுன சாகர் வரையிலான இணைப்பு கிருஷ்ணா - அல்மாட்டியிலிருந்து பெண்ணார் வரையிலான இணைப்பு பெண்ணார் - சோமசிலாவிலிருந்து காவிரி - கல்லணை வரையிலான இணைப்பு காவிரி - கட்டளையிலிருந்து - வைகை குண்டாறு இணைப்பும், பம்பை - அச்சன் கோவிலிருந்து - வைப்பாறு இணைப்பு திட்ட வரைவு அறிக்கைகள் தயாரிக்கும் பணிகளுக்காக எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன. 

திட்ட வரைவு அறிக்கைகள் தயாரிக்கப் பட்டவுடன் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ், பழங்குடியினர் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் முதலியவை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட மாநில அரகளின் உதவியுடன் நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் என்று மாண்புமிகு மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மக்களவையில், திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் திரு. டி. ஆர். பாலு எழுப்பிய கேள்விக்கு விரிவான பதிலை அளித்துள்ளார்.

இந்த நதி நீர் இணைப்புகள் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்திற்கு மிக்க நன்மை அளிக்கும் என்று திரு. டி. ஆர். பாலு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக