வெள்ளி, 8 நவம்பர், 2019

JEE நுழைவுத்தேர்வை தமிழில் நடத்த வேண்டும் - TTV. தினகரன்

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான JEE நுழைவுத்தேர்வை தமிழில் நடத்த வேண்டும்:
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
- TTV. தினகரன் MLA
(பொதுச்செயலாளர், அமமுக.)

மத்திய அரசின் ஐ.ஐ.டி (IT) உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வை (JEE Main) தமிழ் மொழியிலும் நடத்திட வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை பழனிசாமி அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவற்றோடு, மாநில மொழிகளில் ஒன்றான குஜராத்தில் மட்டுமே JEE Main நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கான வசதி தற்போது இருக்கிறது. இது குறித்து சர்ச்சை எழுந்ததையடுத்து இத்தேர்வினை நடத்தும் தேசிய தேர்வு முகமை - என்.டி.ஏ (NTA - National Testing Agency) விளக்கம் அளித்திருக்கிறது. அதில், குஜராத் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே குஜராத் மொழியில் இத்தேர்வு நடத்தப்படுவதாகவும், மற்ற மாநில அரசுகள் இது குறித்து எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிற கனவு இன்னும் நம்முடைய எழை, எளிய மாணவச்செல்வங்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிற நேரத்தில் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் மொழியிலும் அதற்கான நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான கோரிக்கையை உடனடியாக பழனிசாமி அரசு தேசிய தேர்வு முகமையிடம் (NTA) வைத்திட வேண்டும்.

இதன் மூலம் வருகிற ஆண்டு (2020) முதலே தமிழ் வழியாக JEE Main நுழைவுத்தேர்வினை தமிழக மாணவர்கள் எழுதுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இதனால் மிகக் குறைந்த அளவே தமிழக அரசின் மாநில பாடத்திட்டம் வழியாக படித்த மாணவர்கள் ஐ.ஐ.டி (IIT) போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் தற்போதைய நிலையை மாற்றிட முடியும்.

அதே நேரத்தில் என்.டி.ஏ (NTA) அளித்திருக்கும் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற இன்னொரு நுட்பமான செய்தியையும் பழனிசாமி
அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிற பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையையும் JEE நுழைவுத் தேர்வின் வழியாக நடத்துவதற்கு முன் ஒப்புக்கொண்ட குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள், அம்முடிவை 2016 ஆம் ஆண்டோடு கைவிட்டு விட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்க பட்டிருக்கிறது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களே தேசிய பொது நுழைவுத் தேர்வு வழியாக மாநிலங்களில் மாணவர் சேர்க்கையை நடத்துவதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து அதிலிருந்து வெளியேறி இருப்பதைப் பழனிசாமி அரசு புரிந்து கொண்டு, எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டில் அப்படியோர் நிலை வருவதற்கு ஒப்புக் கொள்ள கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக