வெள்ளி, 14 டிசம்பர், 2018

உயிரினும் மேலான தலைவர் கலைஞர்

“உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்கள் நிலையாக நம் நெஞ்சில்! சிலையாக அறிவாலயத்தில்!”

- மு.க.ஸ்டாலின்


நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
வார்த்தைகளில் அடக்கி விட முடியாது தலைவர் கலைஞரின் தனிப்பெரும் வரலாற்றை! வடிவங்கள் என்னென்ன உண்டோ அத்தனையிலும் அவரது பெருமைகளை எடுத்துக் கூறினாலும் மேலும் ஏராளமானவை எஞ்சியிருக்கும். இந்தியத் துணைக் கண்டம் இதுகாறும் கண்டிராத ஈடு இணையற்ற தனித்துவமான தலைவர். தமிழினத்தின் தலைவர் – முத்தமிழறிஞர் - 80 ஆண்டு பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் - அரை நூற்றாண்டுக்காலம் தமிழ்நாட்டின் அரசியலை தன் விரலசைவுக்கேற்ப விசையேற்றிச் சுற்றிச் சுழல வைத்தவர் - இந்திய அரசியலில் இக்கட்டுகள் ஏற்பட்டபோதெல்லாம் தன் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தால் ஜனநாயகத்தை நிலைநாட்டியவர் - பல குடியரசுத் தலைவர்களையும் பல பிரதமர்களையும் உருவாக்கியவர்.
13 சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொண்டு தோல்வியே காணாமல் வெற்றிகளைக் குவித்து சரித்திரம் படைத்தவர். தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறை பொறுப்பேற்று 19 ஆண்டுகள் ஆட்சி செய்து, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களை உருவாக்கித் தந்தவர். 14 வயதில் தமிழ்க்கொடி பிடித்து இனமான முழுக்கத்துடன் சமூக நீதி காக்கக் களமிறங்கி 95 வயதிலும் தளராமல் போராடி, மரணத்திலும் தனக்கான இடஒதுக்கீட்டைப் பெற்று சமூக நீதியைக் காத்த போராளி.
எழுத்தாளர் – கவிஞர் – பேச்சாளர் – பத்திரிகையாளர் – பாடலாசிரியர் – கதாசிரியர் - திரைப்பட வசனகர்த்தா - இயக்கப் பிரசார நடிகர் எனப் பன்முக ஆளுமைகொண்ட படைப்பாளி என உலகில் வேறெவரும் தொடாத உயரங்களைத் தொட்ட ஒரே தலைவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
அந்த மாபெரும் தலைவர் மறைந்தாலும் அவர் கட்டிக்காத்த இயக்கமும் அதன் கொள்கைகளும், அவர் உருவாக்கித் தந்த திட்டங்களின் பலன்களும், சட்டங்களின் விளைவுகளும் சாதனை வைரங்களாக சதா ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த வைரங்களை மணிமுடியில் பதிப்பது போல - அதன் பெருமை உலகுக்கெல்லாம் தெரிவது போல டிசம்பர் 16ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் தனது ஆருயிர்த் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் அருகில், சிலையாக எழுகிறார் தலைவர் கலைஞர் அவர்கள்.
அவர் கண் பார்த்து - கரம் தொட்டு உருவாக்கிய சிலைகள் பல தமிழ்நாட்டில் ஊர்தோறும் நிலைப்பெற்றிருக்கின்றன. எத்தனையெத்தனை அண்ணா சிலைகள், எத்தனையெத்தனை பெரியார் சிலைகள், அவர்கள் மட்டுமின்றி பெருந்தலைவர் காமராஜர், உலக உத்தமர் காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், தமிழறிஞர்கள், கவிஞர்கள், திராவிட இயக்க தீரர்கள், மொழிப்போர்க்களத் தியாகிகள் எனப் பலருக்கும் சிலைகளையும் மணிமண்டபங்களையும் நிறுவியவர் தலைவர் கலைஞர். குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் 133 அடி உயர வள்ளுவர் சிலையும், சென்னை மாநகரில் எழில் கொஞ்சும் வள்ளுவர் கோட்டமும் தலைவர் கலைஞரின் கலைத்திறனைப் பறைசாற்றும் காலந்தோறும்!
அத்தகைய பெருமைமிக்க தலைவருக்கு - பெரும்படைப்பாளிக்கு அவரின் உடன்பிறப்புகளான நாம் செலுத்தும் நன்றிக்கடன்தான் அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படவிருக்கின்ற திருவுருவச் சிலை. சிற்பி தீனதயாளன் அவர்களும், அவர்தம் குழுவினரும் ஓயாது உழைத்து உருவாக்கியுள்ள உயிர்த்துடிப்புமிக்க சிலை.
அன்றாடம் அறிவாலயத்திற்கு வந்து தன் உடன்பிறப்புகளின் முகம் கண்டு அகம் மலர்வது தலைவரின் வழக்கம். எத்தனை நெருக்கடிகள் அவருக்குள் இருந்தாலும், தொண்டர்களைப் பார்த்துவிட்டால் துன்பமெல்லாம் தூர விலகி ஓடிவிடும். அதுபோலவே, எத்தனையோ இன்னல்கள் மொய்த்தாலும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, வரும் உடன்பிறப்புகளுக்கும் தலைவரின் முகம் பார்த்த நொடியில் அத்தனை சிரமங்களும் பறந்தோடிவிடும். கழகத்தைக் கட்டிக்காக்கும் அந்தத் தலைவருக்குத் துணை நிற்பதே நம் தொண்டு என்ற உணர்வு உடன்பிறப்புகளின் நெஞ்சில் ஊற்றெடுக்கும். அவர்களின் கரங்கள் கழகத்தின் இருவண்ணக் கொடியை எப்போதும் உயர்த்திப் பிடிக்கும்.
அந்த உணர்வின் பெருவெளிப்பாடுதான் கழகத்தில் அடிப்படைத் தொண்டனாக அடியெடுத்துவைத்து, தன் அயராத உழைப்பால் ஒவ்வொரு கட்டமாக உயர்ந்து, சென்னையின் மேயர் என்ற பொறுப்பை தலைவர் கலைஞர் அவர்களால் பெற்றவர் சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மா.சுப்ரமணியன். எத்தனை உயர்வான பதவிகள் கிடைத்தாலும் கழகத்தின் தொண்டன் -கலைஞரின் உடன்பிறப்பு என்பதே எல்லாவற்றையும் விடப் பெருமை என நினைக்கிற மா.சுப்ரமணியனின் முனைப்பான செயல்பாட்டால் அறிவாலயம் வாசலில் 114 அடி உயர கொடிக்கம்பத்தில் உயர்ந்து பறக்கிறது கழகத்தின் இருவண்ணக் கொடி.
அவரைப் போலத்தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள கழக நிர்வாகிகளும் பிற மாநிலங்களில் உள்ள நிர்வாகிகளும் கலைஞரின் உடன்பிறப்பு என்ற சிந்தனை மாறாமல் செயல்பட்டு வருவதால்தான் சோதனைகளை எதிர்கொண்டு சாதனைகளாக்கி செம்மாந்து நிற்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
எந்த உடன்பிறப்புகளால் இந்தக் கழகம் வலிமையுடன் இருக்கிறதோ, அந்த உடன்பிறப்புகளை எந்த அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் நாள்தோறும் சந்தித்து அகம்மிக மகிழ்வாரோ அதே அறிவாலயத்தில் தன் உடன்பிறப்புகளைக் காண்பதற்கு திருவுருவச் சிலையாக எழுந்து நிற்கிறார். எந்தத் தலைவரைக் கண்டால் தங்கள் உள்ளம் மகிழுமோ, உணர்வு பெருகுமோ அந்தத் தலைவரைத் திருவுருவுச் சிலை வடிவில் காண ஒரு கோடி உடன்பிறப்புகள் பேரார்வத்துடன் இருக்கிறார்கள்.
உயிர்த்துடிப்புடன் வடிக்கப்பட்டிருக்கும் அந்த சிலையிலிருந்து தன் கரகரப்பான காந்தக் குரலால்… “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே… ஓடி வா… கழகத்தின் பெருமையை நாடே எடுத்துரைக்கும் வகையில் நல்லுள்ளம் கொண்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ள விழாவிற்கு திரண்டு வா” எனத் தலைவர் கலைஞர் அவர்களே அழைப்பதாகக் கருதி, ஒவ்வொரு மாவட்டம் –ஒன்றியம் – நகரம் – பேரூர் - சிற்றூர் கழகங்களிலிருந்து உடன்பிறப்புகள் சென்னை நோக்கி வருவதற்கு ஆயத்தமாகி விட்டனர்.
உடன்பிறப்புகளே! உங்களில் ஒருவனான நான் உங்களின் பேரார்வத்தை மதிக்கிறேன்… போற்றுகிறேன்… வணங்குகிறேன். பெருமைமிகு திருவுருவச் சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர்- நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர் அவர்களை தந்தை நிலையில் மனதில் வைத்துப் போற்றும் திருமதி.சோனியா காந்தி அம்மையார் அவர்களுடன், ஆந்திர மாநில முதல்வர் மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்களும், கேரள மாநில முதல்வர் மாண்புமிகு பினரயி விஜயன் அவர்களும், புதுச்சேரி மாநில முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களும் பங்கேற்று, இந்திய அரசியலின் வழிகாட்டியாக விளங்கிய வரலாற்று நாயகர் நம் தலைவருக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.
பல மாநிலங்களிலிருந்தும் வரும் தலைவர்களுடன் தமிழ்நாட்டில் நம் தோழமைக் கட்சியின் தலைவர்கள் - நிர்வாகிகள், பல்வேறு கட்சி -அமைப்புகளின் தலைவர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையினர், பல துறை அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள் எனத் தலைவர் கலைஞர் அவர்களின் மீது பேரன்பு கொண்ட பலரும் பங்கேற்கிறார்கள்.
அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழாவில், இடவசதி கருதி அதிகம் பேர் பங்கேற்க இயலாது என்பதால்தான், டிசம்பர் 16 மாலை 5 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெற்றதும், தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறவிருக்கிறது. அதன் ஏற்பாடுகளை விழாக்கள் நடத்துவதில் முத்திரை பதித்த சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ அவர்கள் கவனித்து வருகிறார். கழகத்தின் தொண்டர்களாம் கலைஞரின் உடன்பிறப்புகள் யாவரும் ஆர்வமிகுதியால் அறிவாலயம் முன்பு கூடுவதைத் தவிர்த்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் அணிஅணியாய்த் திரள வேண்டும் என உங்களில் ஒருவனான நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு என பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த முத்தான மூன்றில், கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியமானது என்பதைத் தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டியதுடன், அரை நூற்றாண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்து, அதனைக் கட்டுப்பாட்டுடன் கட்டிக்காத்த வரலாற்றுப் பெருமையும் இந்திய அரசியலில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அந்தப் பெருமைக்குக் காரணம், அவரின் உயிருக்கு உயிரான உடன்பிறப்புகளான நீங்கள்தான். நம் நெஞ்சமெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் நிறைந்திருக்கும் நிலையில், அவர் நமக்கு வகுத்தளித்த கட்டுப்பாட்டு உணர்வினைக் காத்திட வேண்டும்.
இது நம் வீட்டு விழா. நம் குடும்ப விழா. விருந்தினரை வரவேற்று அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே, கட்டுப்பாடு காப்போம். அறிவாலயத்தில் கூடுவதைத் தவிர்த்து, ஆர்ப்பரிக்கும் கடலென ராயப்பேட்டை அரங்கில் கூடிடுவோம். தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்புற நிகழ்ந்த பிறகு, மாவட்ட வாரியாக ஒவ்வொரு நாளும் நம் உயிர்நிகர்த் தலைவரை சிலையில் காண்போம். இதயம் குளிர்வோம்.
சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றுகின்ற உரை, தலைவர் கலைஞர் கட்டிக்காத்த மதசார்பற்ற – முற்போக்கு – சமூகநீதி -ஜனநாயகக் கொள்கைகளின் முழக்கமாக அமையும். அது இந்தியா எதிர்கொள்ளப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தமிழ்நாடு காணவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் நமக்கான வெற்றிப் பாதையை சுட்டிக்காட்டும்.
அந்த வெற்றியை நம்மைவிட அதிகமாக நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் மனநிலை அறிந்த மாற்றுக் கட்சியினரும் அதனை உணரத் தொடங்கியிருப்பதால்தான் கொள்ளைக்கூட்டத்தாரிடமிருந்து தப்பி வந்து, கொள்கைக் கோட்டையாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை ஒப்படைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.


கழகத்தின் வெற்றி என்பது கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு விட்டது. அதனை எடுத்துப் பதிக்கின்ற பணிதான் தேர்தல் களம். அதற்கேற்ப பொறுப்புணர்ந்து -கட்டுப்பாடு காத்து - ஓயாது உழைத்திட வேண்டும். அதுவே திருவுருவச்சிலையாக உயர்ந்து நிற்கும் தலைவர் கலைஞருக்கு நாம் செய்யும் தொண்டு - காட்டுகின்ற நன்றி - செலுத்துகின்ற காணிக்கை!

கிராம நிர்வாக அலுவலர் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

கிராம நிர்வாக அலுவலர் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்!



தமிழகமெங்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த டிசம்பர்10 முதல் இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
பணிநியமனம், மாவட்ட ரீதியான மாற்றல், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய பிறகும் தமிழக அரசு செவி சாய்க்காததால் இப்போது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் இறங்கி உள்ளனர். அவர்களது போராட்டத்தால் பொது மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டு பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
கணினி வசதி உள்ளிட்ட அலுவலக கட்டமைப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற அவர்களது கோரிக்கை மிகவும் நியாயமானது. அது போலவே பெண்கள் அதிகமாகப் பணியில் இருப்பதால் பணியிடமாற்றக் கொள்கையில் அதற்கேற்ப மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் கூட நியாமானது தான். இப்படியான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பது தமிழக அரசுக்குக் கவுரவமானது அல்ல.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாமல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது எளிதானது அல்ல. எனவே, தமிழக அரசு அவர்களது போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல் அவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுமாறு வலியுறுத்துகிறோம்.

ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்புக! வைகோ அறிக்கை

ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்புக!வைகோ அறிக்கை



காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 276 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர். 
ஆதிதிராவிடப் பள்ளியாக இருந்தபோதிலும் ஏனைய எல்லாம் சமூகத்து பிள்ளைகளும் இணைந்து பயிலும் பொதுப்பள்ளியாக விளங்கி வருகின்றது. இந்த பள்ளிக்குப் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அருகாமையில் உள்ள கடம்பாடி ஊராட்சி, குன்னத்தூர் ஊராட்சியைச் சார்ந்த மாணவர்களும் இந்தப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை 91 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம் 5; ஆனால் பணியாற்றுவது ஒரே ஓர் ஆசிரியர் மட்டும்தான்.
6-ஆம் வகுப்பில் இருந்து 10-ஆம் வகுப்பு வரை 137 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம் 9; ஆனால்  பணியாற்றுவது ஒரே ஓர் ஆசிரியர் மட்டும்தான்.
11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரை 48 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர்; இவ்வகுப்புகளுக்கு 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் போதுமான ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை.
வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணினி, உடற்கல்வி, ஆய்வுக் கூடங்கள், நூலகம், விளையாட்டுத் திடல், கழிவறைகள் இவை அனைத்தும் ஒவ்வொரு பள்ளியிலும் இருப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்திட வேண்டும். தேர்வுகள் நெருங்கி வருகின்ற வேளையில் போதுமான ஆசிரியர்களை உடனடியாக பணி அமர்த்திட வேண்டுகின்றேன்.
கல்பாக்கம் அணு உலை சுற்றுச்சுவர் அருகாமையில் அமைந்துள்ள இந்தப் பள்ளிக்கு எந்தப் பயனும் இல்லை என்பது தெளிவாகிறது. அணு உலை அமைவதற்கு நிலம் கொடுத்த சுற்றுப்புற கிராம மக்களுக்கு மக்கள் நலத் திட்டங்களைச் செய்து வருவதாக மத்திய அரசு சொல்வது இதன் மூலமாக பொய்த்துப்போய் உள்ளது.
மேலும் காலம் தாழ்த்திடாமல் போர்க்கால அடிப்படையில் போதுமான ஆசிரியர்கள் பணியிடங்களை நியமித்திட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

எஸ்.பி. வேலுமணியின் ஊழல் "அச்சம் - நாணமுமின்றி தலைவிரித்தாடுகிறது

எஸ்.பி. வேலுமணியின் ஊழல் "அச்சம் - நாணமுமின்றி தலைவிரித்தாடுகிறது


உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட, உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணியின் ஊழல், சென்னை மாநகராட்சியில் எவ்வித ச்சம் - நாணமுமின்றி தலைவிரித்தாடுவது அதிர்ச்சியளிக்கிறது. ரூ.740 கோடி மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல், அமைச்சரும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் கைகோர்த்து அமைத்துள்ள கூட்டணியை உறுதி செய்திருக்கிறது.

திங்கள், 10 டிசம்பர், 2018

புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக, புதிய கான்கிரீட் வீடுகள்

கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக, புதிய கான்கிரீட் வீடுகள்


புதுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் 27 வகையான நிவாரண பொருட்களை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக் கும் மின்சாரம் கிடைத்த பிறகே சென்னைக்கு செல்வேன் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்கும் போது அவற்றை காதுகொடுத்து கேட்க வேண்டியது அமைச்சரின் கடமை. மக்களின் கோரிக்கைகளை முடிந்த அளவுக்கு அரசு மூலம் செய்து கொடுக்க வேண்டும். முடிய வில்லை என்றால் அதுதொடர்பாக மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு நான் செய்ததால்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணியின்போது என்னு டைய காரை யாரும் மறிக்க வில்லை

தமிழக அரசு மேற்கொண்ட தீவிர மீட்புப் பணியின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதாக கூறினார். போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக பொதுமக்களுக்கு மின்சாரம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் 3 நாட்களுக்குள் வழங்கி சாதனை படைக்கப்பட்டதாக கூறிய அவர், சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் அரசால் அமைத்துத் தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரித்தார்

காவிரி மேலாண்மை தலைவரை நியமிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரத் தலைவரை நியமிக்க உத்தரவிடுமாறு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.


காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க உச்சநீதிமன்றம்  மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

ரசிகர்கள் யாரும் வீட்டுக்கு வரவேண்டாம் - ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், திரிஷா, சிம்ரன், சசிகுமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். 

பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் உண்மையில் யோகா மிகச் சிறந்த கலை. மனதையும் உடலையும் வலிமையாக வைக்கும். எக்ஸ்ட்ரா என்ற வார்த்தை அருமையான வார்த்தை. எக்ஸ்ட்ரா புகழக் கூடாது. எக்ஸ்ட்ரா பேசக் கூடாது. எக்ஸ்ட்ரா சாப்பிடக் கூடாது. ஒரு குழந்தையை வித விதமாக அலங்காரம் செய்து ரசிப்பதை போல என்னை கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார். முன்பு போல இல்லை. எனக்கு 69 வயது என்று சொன்னேன். இருந்த போதிலும் ஒவ்வொரு காட்சியும் ரசித்து எடுத்தார் கார்த்திக் சுப்புராஜ். செட்டிலுள்ள அனைவரும் என்னுடைய ரசிகர்களாக இருந்ததால் ரசித்து ரசித்து எடுத்தார்கள். 


பிறந்தநாள் வரப் போகிறது. கடந்த முறையே ரசிகர்கள் வீட்டுக்கு வந்து ஏமாந்து போனார்கள்.ஆனால், இந்தமுறையில் வீட்டில் இருக்க மாட்டேன். அதனால், ரசிகர்கள் இந்தமுறையும் வீட்டுக்கு வரவேண்டாம். கஜா புயலால் ஏற்பட்ட இழப்பு நினைத்துக் கூட பார்க்க முடியாத பேர் இழப்பு. எல்லோரும் சேர்ந்தால் மட்டுமே அவர்களை மீட்டு வர முடியும். கஜா புயலால் உயிர் இழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நானும் எனது மன்றமும் உதவிகளைச் செய்துள்ளோம். அரசால் மட்டுமே அவர்களை முழுமையாக மீட்க முடியும்’ என்று தெரிவித்தார்.

திரிஷாவின் இளமையின் ரகசியம் கேட்டு அறிந்த ரஜினி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், திரிஷா, சிம்ரன், சசிகுமார் நடித்துள்ளனர். 

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர் ரஜினிகாந்த், நடிகைகள் சிம்ரன், திரிஷா, நடிகர்கள் பாபி சிம்ஹா, சசிகுமார், சமுத்திரகனி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்றுள்ளனர்

பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் ஜித்து என ஒரு கேரக்டர் இருந்தது. அந்த கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி பண்ண போறார்ன்னு சொன்னதும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சிம்ரன் நடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சதும் செட் ஜாலியா ஆயிடுச்சு.

நான் பார்த்த நல்ல நடிகர் விஜய் சேதுபதி. அவர், சாதாரண நடிகன் அல்ல. அவர் ஒரு மகா நடிகன். அதைவிட அவர் ஒரு நல மனிதர். ரொம்ப நாள்கள் கழித்து நல்ல நடிகர் உடன் நடித்த அனுபவம். நான், பார்த்த தங்கமான மனிதர் சசிகுமார். திரிஷா முன்பு பார்த்தது போல இருப்பதற்கான ரகசியம் குறித்து கேட்டேன். அவர், யோகா என்று தெரிவித்தார். உண்மையில் யோகா மிகச் சிறந்த கலை.

மனதையும் உடலையும் வலிமையாக வைக்கும். எக்ஸ்ட்ரா என்ற வார்த்தை அருமையான வார்த்தை. எக்ஸ்ட்ரா புகழக் கூடாது. எக்ஸ்ட்ரா பேசக் கூடாது. எக்ஸ்ட்ரா சாப்பிடக் கூடாது. ஒரு குழந்தையை வித விதமாக அலங்காரம் செய்து ரசிப்பதை போல என்னை கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார். முன்பு போல இல்லை. எனக்கு 69 வயது என்று சொன்னேன். இருந்த போதிலும் ஒவ்வொரு காட்சியும் ரசித்து எடுத்தார் கார்த்திக் சுப்புராஜ். செட்டிலுள்ள அனைவரும் என்னுடைய ரசிகர்களாக இருந்ததால் ரசித்து ரசித்து எடுத்தார்கள்.

புதன், 5 டிசம்பர், 2018

தமிழகத்துக்கு கரம் கொடுங்கள் - நடிகர் அமிதாப்பச்சன்


நவம்பர் 15-ம் தேதி கஜா புயல் தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சூறையாடியது. அப்பகுதிகளில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.பல லட்சம் வீடுகள் கஜா புயலால் சூறையாடப்பட்டுள்ளது. இந்தப்பகுதிகளில் இருந்த தென்னைமரங்கள் 60 சதவிகிதம் புயலால் சாய்ந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கஜா புயல் சேதங்கள் குறித்து பேசிய வீடியோவை கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ‘நன்றி அமித் ஜி. கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகளைத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். உங்களுடைய உதவியும் இத்தருணத்தில் தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு கரம் கொடுங்கள். நம் நாட்டில் பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் உங்களைப் போன்ற மக்கள் அதை இணைக்கும் நூலாக இருக்கின்றனர் நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப் பட்டியலை கைப்பற்றிய வழக்கு

தேர்தல் ஜனநாயக நெறியின் நெஞ்சில், அதிமுக அரசு கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறது



சென்னை - ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வைத்திருந்த “பணப் பட்டியலை” வருமான வரித்துறை கைப்பற்றிய வழக்கு விசாரணையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தையும், சென்னை உயர்நீதிமன்றத்தையும் திசைதிருப்பி பெரிதும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவை சீண்டிய மைத்திரிபால சிறிசேனா

இந்தியாவை சீண்டிய மைத்திரிபால சிறிசேனா


இலங்கையில் அரசியல் குழப்பநிலை நீடித்துவரும் நிலையில் அந்நாட்டு  அதிபர் மைத்திரிபால சிறிசேனா விரிவான பேட்டி வெளியாகியுள்ளது . 

குஜராத் அரசுக்கு கம்பி நீட்டிய அமேரிக்கா

குஜராத் அரசுக்கு கம்பி நீட்டிய அமேரிக்கா




குஜராத் அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க மாநாடு ஒன்றை, 2019 ஜனவரியில் நடத்த திட்டமிட்டுள்ளது. குஜராத் தலைநகரான காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் ஜனவரி 18, 19 தேதிகளில் இம்மாநாடு நடைபெற உள்ளது. பிரமர் மோடி மாநாட்டைத் துவக்கிவைக்க உள்ளார்.

 இந்த மாநாட்டில் கனடா, செக் குடியரசு, டென்மார்க், பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து, தென்கொரியா, தாய்லாந்து, அரபு அமீரகம் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்குதாரராக உள்ளன.

இந்நிலையில், பங்குதாரராக வருமாறு அமெரிக்காவுக்கும் குஜராத் அரசு அழைப்பு அனுப்பியிருந்தது. ஆனால், அதனை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ளது. இம்மாநாட்டில், அமெரிக்கா பங்குதாரர் ஆகாது என்று, அந்நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசின் அளித்த அனுமதியை அடாவடி போக்கைக் கண்டித்தும், அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரியும் வருகிற டிசம்பர் 04 ஆம் தேதி திருச்சியில் ‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’ நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.

ஆர்.கே.நகரில் தப்பித்த டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா சம்பந்தமான வழக்குகள் ரத்து 


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா நடப்பதாகக் கூறி பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டன. அதே போல் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்த பெயர் பட்டியல் தொடர்பான வழக்குகளும் தேர்தல் ஆணையத்தால் வழக்கு பதியப்பட்டுள்ளது.