செவ்வாய், 28 ஜூலை, 2020

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - தி.வேல்முருகன்


மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு!
இந்த உத்தரவை குறித்த காலத்திற்குள் விரைந்து நிறைவேற்றுமாறு கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இதில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஓபிசியினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி தொரடப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8ந் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் மருத்துவப் படிப்புகளில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையையே பின்பற்ற அனுமதிக்கலாம். ஆனால் அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில்,  உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும் என்றும், மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது என்றும் வாதிடப்பட்டது.

கடந்த 4 வருடங்களில் 3,580 இடங்கள் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டன. ஆனால் ஒன்றிய அரசு இடஒதுக்கீடு வழங்காததால் 2700க்கும் மேற்பட்ட ஓபிசி தமிழக மாணவர்களின் இடங்கள் பறிபோயின. ஆக, இட ஒதுக்கீடு  விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை, ஒன்றியய அரசு திருடிக் கொண்டிருக்கிறது என்றும் வாதிடப்பட்டது. 

ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஒன்றிய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

உயர் நீதிமன்ற உத்தரவை ஒன்றிய அரசு குறித்த காலத்திற்குள் விரைந்து நிறைவேற்றுமாறு கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! 

மேலும் இதற்காக வழக்கு தொடுத்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்  தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக