வெள்ளி, 31 ஜூலை, 2020

பீகாரில் புதுப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி பாலத்தை, திரு.நிதின் கட்கரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.


பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி பாலத்தை, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்ச்ர திரு.நிதின் கட்கரி, இன்று காணொளிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.   நிகழ்ச்சிக்கு, பீகார் முதலமைச்சர் திரு.நிதிஷ் குமார் தலைமை வகித்தார்.  மத்திய அமைச்சர்கள் திரு.ராம்விலாஸ் பாஸ்வான், திரு.ரவிசங்கர் பிரசாத், மத்திய இணையமைச்சர்கள்  திரு.வி.கே.சிங், திரு.அஸ்வனிகுமார் சவுபே மற்றும் திரு.நித்தியானந்த் ராய், துணை முதலமைச்சர் திரு. சுசில்குமார் மோடி, மாநில சாலைக் கட்டுமானத் துறை அமைச்சர் திரு.நந்த் கிஷோர் யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி, திரு.ராம் கிரிபால் யாதவ், திரு.பசுபதி குமார் பரஸ் மற்றும் திருமதி.வீனா தேவி, மத்திய – மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.  

 பாட்னா – ஹாஜிப்பூர் இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்.19இல் அமைக்கப்பட்டுள்ள இந்த 4 வழிப் பாலம், 5.5.கி.மீ.-க்கும் அதிக தூரம் உடையது ஆகும்.   இந்தப் பாலம் ரூ.1,742 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.  இந்தப் பாலப் பணிகள், இந்தியாவிலேயே முதன்முறையாக, புதுவிதமான முறையில் மேற்கொள்ளப்பட்டது.   ஹாஜிப்பூர், சாப்ரா, முசாபர்பூர், சமஸ்திப்பூர், தர்பங்கா, மதுபானி, சிதாமார்ஹி, சிவான் உள்ளிட்ட பீகாரின் வட மாவட்டங்கள்,  கிழக்கு உத்தரபிரதேசம்,  மற்றும்  பீகாரின் தென் மாவட்டங்களான பாட்னா, ஆரா, ஆர்வால், ஜெகனாபாத், நாளந்தா,  கயா, அவுரங்காபாத் மற்றும் ஜார்க்கன்ட் மாநிலமும் இந்த புதிய பாலத்தால் பயனடையும்.  

நிகழ்சசியில் பேசிய திரு.நிதின் கட்கரி,  ஏற்கனவே இருந்த பாலத்தை மேம்படுத்துவதற்காக, முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.   இது ஒரு பொறியியல் அதிசயம் என்று குறிப்பிட்ட அவர்,  கட்டுமானவியல் பொறியாளர்களுக்கு இது ஒரு சிறந்த பாடமாக அமையும் என்றும் கூறினார்.  பாட்னாவில், கங்கை ஆற்றின் குறுக்கே 5 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய பாலம் கட்டப்படும் என்று அறிவித்த அவர்,  இந்தப் பாலத்தின் கீழ், கப்பல்கள் சென்றுவர ஏதுவாக  நீண்ட இடைவெளியைக் கொண்டதாக அமையும் என்றும் தெரிவித்தார்.  இதற்கான டென்டர் அடுத்த மாதம் முடிவு செய்யப்பட்டு,  பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   இந்தப் பாலம் ரூ.3,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.  தேசிய நீர்வழிப் பாதை என்பது தமது நீண்ட நாள் கனவு என்பதை நினைவுகூர்ந்த அமைச்சர், இத்திட்டத்தின்படி,  கங்கை ஆற்றில் பிரயாக்ராஜ் மற்றும் மேற்கு வங்கத்தின் ஹால்டியா இடையே 3 மீட்டர் ஆழத்திற்கு தண்ணீர் ஒடுவது உறுதி செய்யப்படும் என்றார்.  இதற்கு ஏதுவாக, பிரயாக்ராஜ் – வாரணாசி இடையே, ஆழப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.  அடுத்தகட்டமாக,  யமுனை ஆற்றில், தில்லி மற்றும் பிரயாக்ராஜ் இடையே,  ஒரு மீட்டர் ஆழப்படுத்தப்படும்.   இதற்காக, ரூ.12,000 கோடி மதிப்பீட்டிலான  விரிவான திட்ட அறிக்கை, ஏற்கனவே உலக வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  தில்லியிலிருந்து ஹால்டியா வரை நீர்வழிப் பாதை பயணம் என்ற தமது கனவு விரைவில் நிறைவேறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

மத்திய அமைச்சர் திரு.ராம்விலாஸ் பாஸ்வான் பேசுகையில்,  1977-ஆம் ஆண்டு வாக்கில் ஹாஜிப்பூரில் தாம் வசித்தபோது,  கங்கை ஆற்கைக் கடந்து செல்ல, நீராவியால் இயங்கும் படகு மட்டுமே இருந்ததை நினைவுகூர்ந்தார்.  

மத்திய அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, பீகாருக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் என்றார். 

இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி நிறைவேற்றி முடித்த முழுப் பெருமையும், திரு.நிதின் கட்கரியையே சாரும் என, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் திரு.வி.கே.சிங் தெரிவித்தார்.   பீகார் மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக, சுமார் ரூ.30,000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  பீகாரில் நிலம் கையகப்படுத்தியதற்காக, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஏற்கனவே ரூ.3,800 கோடி செலுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக