திங்கள், 22 பிப்ரவரி, 2021

தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 62 படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவற்றை மீட்பது குறித்து இலங்கை அரசிடம் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 தமிழக மீனவர்களின் 62 படகுகள்  இலங்கை வசம் உள்ளன: மீனவர்களைத் தாக்கக் கூடாது என இலங்கைக்கு கண்டிப்பு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினாவுக்கு வெளியுறவு அமைச்சர் பதில்

தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 62  படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்,  அவற்றை மீட்பது குறித்து இலங்கை அரசிடம் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீனவர்கள் பிரச்சினை குறித்து பா.ம.க. உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  வினா எழுப்பினார். வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்களின் படகுகளும்,  மீன்பிடி வலைகளும் சட்டவிரோதமாக பறிமுதல் செய்யப்படுவதும் மத்திய அரசுக்கு தெரியுமா? என்றும், தெரிந்திருந்தால் அது குறித்த விவரங்களை வெளியிடும்படியும் அவர் வினவினார்.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வினாவுக்கு விடையளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் அவர்கள்,’’  2019, 2020 ஆகிய இரு ஆண்டுகளில் 284 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 53 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2021 ஜனவரி மாதத்தில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் தூதரக நடவடிக்கைகளால் அனைத்து மீனவர்களும் மீட்கப்பட்டு விட்டனர்.  இப்போது தமிழக மீனவர்களின் 62 படகுகள் இலங்கை அரசின் பிடியில் உள்ளன. 

மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை அவ்வப்போது மீட்பதற்காக இலங்கை அரசுடன் மத்திய அரசு தூதரக வழியாக பேச்சு நடத்தி வருகிறது. மீனவர்கள் நலன் சார்ந்த இரு தரப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் 30.12.2020 அன்று  நடைபெற்றது. அதில் அனைத்து சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கடந்த 18.01.2021 அன்று தமிழக மீனவர்களின் படகுடன் இலங்கை கடற்படை படகு மோதியதைத் தொடர்ந்து அந்தப் படகு மூழ்கியதில் அதில் இருந்த 4 மீனவர்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் நமது தூதர் மூலமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  தில்லியில் உள்ள இலங்கை பொறுப்பு தூதரை அழைத்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  மீனவர்கள் குறித்த பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த நிகழ்வுகள் எதுவும் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக வெளிநாடுகளில்  சிக்கித் தவித்த இந்தியர்களின் விவரம் குறித்தும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா எழுப்பினார்.  வெளிநாடுகளில் தவித்தவர்களில் எத்தனை பேர் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் வினா எழுப்பினர். அதற்கு விடையளித்த மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன், 20.01.2021 வரை மொத்தம் 36,11,373 பேர்  வெளிநாடுகளில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும்,  அவர்களில் 3,44,937 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும்  தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக