சனி, 20 பிப்ரவரி, 2021

மலைவேடன் இன மக்களுக்கு பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி திண்டுக்கல்லை திணற வைத்த போராட்டம்! - DR.S.ராமதாஸ்

மலைவேடன் இன மக்களுக்கு பழங்குடி 

மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி 

திண்டுக்கல்லை திணற வைத்த போராட்டம்! - DR.S.ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும் போராடும் கட்சி. பிற கட்சிகளைப் போல வார்த்தைகளில் மட்டும் சொல்லும் கட்சியல்ல. செயலில் காட்டும் கட்சி. அதற்கு ஆயிரமாயிரம்   எடுத்துக்காட்டுகளை கூற முடியும். அத்தகைய எடுத்துக்காட்டுகளில் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில்  மலைவேடன் எனப்படும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக நான் பங்கேற்று நடத்திய போராட்டம் ஆகும்.

தமிழ்நாட்டில் பழங்குடியினர் பட்டியலில் 36 சமுதாயத்தினர் வாழ்கின்றனர். அவர்களில் கணிசமான அளவில் வாழும் பல சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்பது தான் மிகக் கொடுமையான சமூக அநீதி ஆகும். அவ்வாறு பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களில் ஒரு பிரிவினர் மலைவேடன் சமூகத்தினர் ஆவர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் வாழும் இந்த மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்று என்னிடம் புகார் கூறினார்கள். அதைத் தொடர்ந்து திண்டுக்கல்  மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 12.12.2000 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் இல்லம் முன் ஆர்ப்பாட்டமும், விளக்கப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

இதற்காக எனது தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் இல்லம் வரை பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் மலைவேடன் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் உடலில் இலை, செடி, கொடிகளை அணிந்தும், கைகளில் வில், அம்புகளை ஏந்தியும் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் அணிதிரண்டு வந்ததால் திண்டுக்கல் நகரம் திணறியது. இந்த பேரணி, போராட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் அதிக அளவு பெண்கள் கலந்துகோண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டமும், அதைத் தொடர்ந்து விளக்கப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்தப் போராட்டம் மற்றும் விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு மாநில மாநாட்டுக் குழுத் தலைவர் அருள்மொழி முன்னிலை வகித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் வெள்ளை கோபால், வினோதன், டோமினிக் செல்வராஜ், ஜான் கென்னடி, கோபாலகிருஷ்ணன், பழங்குடியினர் நலச் சங்கங்களின் நிர்வாகிகள் எம்.ஆர். முருகேசன், எஸ்.வி. நாராயணன், எஸ். தவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்திலும், பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றுப் பேசிய நான்,‘‘ பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் பெற்றுத் தரும் வரை நான் ஓய மாட்டேன். தொடர்ந்து போராடுவேன். பழங்குடியின மக்களுக்கு உரிய சாதி சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதிக்காமல் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் பல லட்சம் பழங்குடியினர் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டேன். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக