சனி, 6 பிப்ரவரி, 2021

7 தமிழர் விடுதலை குறித்து, அது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நாளான பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.- DR.S.ராமதாஸ்

 பேரறிவாளன் விடுதலை: ஆளுனர் நாடகமாட

கூடாது - விரைந்து முடிவெடுக்க வேண்டும்! - DR.S.ராமதாஸ்

பேரறிவாளன் விடுதலை பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே இருப்பதாகக்கூறி, அது தொடர்பான கோப்புகளை மத்திய அரசுக்கு தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அனுப்பி வைத்திருக்கிறார். உச்சநீதிமன்ற ஆணைப்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும்  விடுதலை செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுனரின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு கடந்த மாதம் 21-ஆம் நாள் விசாரணைக்கு வந்த போது, அது தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஒரு வாரத்திற்குள் ஆளுனர் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர். அதன்படி கடந்த 28-ஆம் தேதிக்குள் பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுனர் முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அதன் பின்னர்  ஒரு வாரத்திற்கும் மேலாகியும் ஆளுனர் தரப்பிலிருந்து எந்த பதிலும் வராத நிலையில், உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,‘‘ பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க இயலும் என்று கூறி, அது குறித்த கோப்புகளை  மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுனர் அனுப்பி வைத்துள்ளார். அதை மத்திய அரசு சட்டப்படி ஆய்வு செய்து முடிவெடுக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாடாகும்.

1. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை பரிந்துரைத்த தீர்மானங்கள் அடங்கிய கோப்புகள் தமிழக ஆளுனருக்கு 09.09.2018-இல் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்பின் கடந்த 25.12.2020 அன்று தான், 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை; குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது என்று ஆளுனர் முடிவெடுத்தார். இடைப்பட்ட 871 நாட்களாக இது தெரியாமல் தான் ஆளுனர் இருந்தாரா? ஒரு சாதாரண முடிவெடுப்பதற்கு கூட  871 நாட்கள் எடுத்துக் கொள்ளும் ஆளுனரால் ஒரு மாநிலத்தை எவ்வாறு சிறப்பாக வழி நடத்த முடியும்?

2. 7 தமிழர்கள் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஆளுனருக்கு அனுப்பப்பட்ட சில நாட்களில், அந்தக் கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுனர் அனுப்பிவிட்டதாக  ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்தச் செய்திகளை மறுத்து 13.09.2018 அன்று ஆளுனர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘7 தமிழர் விடுதலை குறித்து சட்ட ஆலோசனை கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எந்தக் குறிப்பையும் ஆளுனர் மாளிகை அனுப்பவில்லை. இது மிகவும் சிக்கலான பிரச்சினை. இதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான முடிவை ஆளுனர் மாளிகையே எடுக்கும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது தமக்கு அனைத்து அதிகாரமும் இருப்பதாகவும், மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தை அனுப்பப் போவதில்லை என்றும் கூறிய ஆளுனர், இப்போது அம்முடிவிலிருந்து பின்வாங்கி, கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பியது ஏன்?

3. ராஜிவ் கொலைச் சதி குறித்து விசாரித்து வரும் பல்முனை கண்காணிப்புக் குழுவின் விசாரணை அறிக்கைக்காக ஆளுனர் காத்திருப்பதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் 7 தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுனர் முடிவெடுப்பார் என்றும் கடந்த 29.07.2020 சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆளுனர் சார்பில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஏ.நடராஜன் தெரிவித்திருந்தார். 6 மாதங்களுக்கு முன்பு வரை 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் தாம் தான் முடிவெடுக்கப்போவதாக கூறி வந்த ஆளுனர், இப்போது 7 தமிழர்களையும் விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனும் சூழலில், இந்த விவகாரத்தை மத்திய அரசின் ஆய்வுக்கு அனுப்பி வைத்தது ஏன்?

4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக ஆளுனருக்கு உண்டு என்று 06.09.2018 அன்று நீதியரசர் ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அதன்படி தான் 7 தமிழர் விடுதலையை தமிழக அரசு பரிந்துரைத்தது. அப்போது அதையேற்று தமிழக அரசின் பரிந்துரையை ஆய்வுக்கு ஏற்றுக் கொண்ட ஆளுனர், இப்போது திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்?

5. பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, அது குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுனருக்கு அதிகாரம் இல்லை; குடியரசுத் தலைவருக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். அதற்கு அடுத்த நாள் இந்த வழக்கில் நேர்நின்ற மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,  7 தமிழர் விடுதலை குறித்து ஆளுனரே முடிவெடுக்கலாம்; அவர் அடுத்த 3 நாட்களில் முடிவெடுப்பார் என்று உறுதியளித்தார். அதற்கு அடுத்த சில நாட்களில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை ஆளுனரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் தில்லியில் சந்தித்து 7 தமிழர்கள் விடுதலை குறித்து  ஆலோசனை நடத்தியுள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் ஆளுனர் அவரது பொறுப்பை தட்டிக்கழிப்பது ஏன்?

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையை அனுபவித்து விட்டனர். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே விரும்புகிறது. ஆனாலும், மிகவும் எளிதாக முடிவெடுக்கப்பட வேண்டிய ஒரு விவகாரத்தில், அவர்களின் விடுதலையை தாமதப்படுத்தும் நோக்குடன் ஆளுனர் மாளிகை பல நாடகங்களை அரங்கேற்றுவது நியாயமோ, மனித நேயமோ இல்லை. தமிழக ஆளுனருக்கு அரசியலமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை இருந்தால், 7 தமிழர் விடுதலை குறித்து, அது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நாளான பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்; இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதை உரியவர்கள் உணர  வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக