செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவிப்பதோடு, தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்- கே. பாலகிருஷ்ணன்



சிபிஐ (எம்) மாநிலக்குழுக் கூட்டத் தீர்மானங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பிப்ரவரி 5,6 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்ராமன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் - 1:

தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் 
தொடர்ந்து புறக்கணிப்பு!
சிபிஐ(எம்) கண்டனம்!!

மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து ரயில்வேயின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பிங்க் புக்  வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தின் 11 புதிய லைன் திட்டங்களுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் போது வெறும் ரூ.95 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மத்தியஅரசின் இந்த பாரபட்சமான போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அதுவும் ரூ. 208 கோடி தேவைப்படுகிற ராமேஸ்வரம்-தனுஷ்கோடி திட்டத்துக்கு ரூ.75 கோடியும், மதுரை-அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கான புதிய பாதை திட்டத்திற்கு  1800 கோடி ரூபாய் தேவைப்படுகிற நேரத்தில் வெறும்  ரூ. 20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.  திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை; திண்டிவனம் - நகரி; அத்திப்பட்டு -புத்தூர்; ஈரோடு - பழனி; சென்னை - மகாபலிபுரம்- கடலூர்; கூடுவாஞ்சேரி-  திருப்பெரும்புதூர்; மொரப்பூர்- தர்மபுரி; காரைக்கால் -பேரளம்; சின்னசேலம்- கள்ளக்குறிச்சி ; தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ஆகிய திட்டங்களுக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் தலா வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 

சென்ற ஆண்டு இதுகுறித்து எங்களது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது,  ரயில்வே நிர்வாகம்  காட்பாடி - விழுப்புரம்; கரூர் - சேலம் - திண்டுக்கல்; கரூர் - ஈரோடு; சென்னை கடற்கரை - எழும்பூர் ஆகிய இரட்டை பாதை திட்டங்கள் மின் மயமாக்கக்கூடியதாக இந்த பட்ஜெட்டில் இணைத்துள்ளோம் என்று  தெரிவித்தது. ஆனால் அந்த நான்கு திட்டத்திற்கும் கூட தலா வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது என்று எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினார்கள். ஆனால் அதற்குப் பிறகும் கூட, எந்த முன்னேற்றமும் இல்லாமல் இந்த ஆண்டும் மேற்கண்ட நான்கு திட்டங்களில், 3 திட்டஙகளுக்கு  தலா 1000 ரூபாய் தான்.  கடற்கரை திட்டத்துக்கு 4.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு 779 கோடி ரூபாய்க்கு 5 கோடி ரூபாய்தான்  ஒதுக்கப்பட்டுள்ளது. 

எனவே, இந்தத் திட்டங்கள் நடைமுறையில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களாக மாறியுள்ளன. தமிழக வளர்ச்சி இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைப்போல மதுரை- வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி மின் மயத்துடன்  கூடிய இரட்டைப் பாதை திட்டம். அதைப்போல வாஞ்சி மணியாச்சியிலிருந்து நாகர்கோயில்; அதைப்போல திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு என்று மூன்று திட்டங்களுக்கும் மீதி 3000 கோடி தேவைப்படுகிறது. ஆனால் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வெறும் 775 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம்  2017ல் அறிவித்தபோது 2022-ல் முடியும் என்று  மத்திய அமைச்சரவை கூறியது. ஆனால் இப்போதைய நிலைமையில் 2025ல் கூட இந்தத் திட்டம் முடியுமா என்று தெரியவில்லை.  

மத்திய பட்ஜெட் தமிழகத்தின் ரயில் வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது. மறுபரிசீலனை செய்து இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த திட்டங்களுக்கான போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 2

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பதாகையின் கீழ், பலகட்ட சந்திப்பு, முறையீடுகள் பலனளிக்காத பின்னணியில், அரசு ஊழியர்கள் பிப்ரவரி 2, 2021 முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தினமும் கைதாவதும், மாலையில் விடுவிக்கப்பட்டாலும் உறுதியோடு மறியலை தொடர்வதுமாய் போராட்டக் களத்தில் நிற்கின்றனர். தமிழகத்தின் பல ஊர்களில் 5 நாட்களாக இரவு-பகல் பாராது கொளுத்தும் வெயில், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது வீதிகளில் அமர்ந்து போராடி வருகிறார்கள். சில மையங்களில் காவல்துறையின் அடக்குமுறையையும் எதிர் கொண்டுள்ளார்கள். பெண் ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் களத்தில் இருக்கின்றனர்.

அவர்களின் முக்கியக் கோரிக்கைகளாக புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது, நிரப்பப்படாத காலியிடங்கள், தொகுப்பூதியம்- மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்க்கு காலமுறை ஊதியம், முடக்கப்பட்ட பஞ்சப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் தொகை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வோம் என்பது கடந்த தேர்தலில் அ.இ.அ.தி.மு.க அளித்த வாக்குறுதியாகும். அடுத்த சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையிலும் அரசு வாளாவிருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. லட்சக் கணக்கான காலியிடங்களை நிரப்பாமல் இருப்பது இளைஞர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதாகும். 

ஐந்து நாட்களாக போராடும் அரசு ஊழியர்களை அழைத்து பேச முதல்வர் இதுவரை முன்வரவில்லை. கோவிட்டை எதிர் கொள்வதில் சிறப்பான மக்கள் சேவை ஆற்றிய அரசு ஊழியர்களுக்கு அரசு தருகிற பரிசு இதுதானா என்ற கேள்வி எழுகிறது. 

ஆகவே, அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவிப்பதோடு, தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக