திங்கள், 6 ஜூலை, 2020

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்'' என்ற அமைப்பில் ஆர்.எஸ்.எஸ்.ஊடுருவல்? அதிகாரப்பூர்வமற்றவர்களுக்கு அதிகாரம் அளிப்பதா? அரசு இதுகுறித்து மறுபரிசீலனை செய்வது அவசியம்! - கி.வீரமணி


போலீசாருக்கு நண்பர்கள், எதிரிகள் என்று தனிப்பட்ட முறையில் இருக்கலாமா?
‘‘ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்'' என்ற அமைப்பில் ஆர்.எஸ்.எஸ்.ஊடுருவல்?
அதிகாரப்பூர்வமற்றவர்களுக்கு அதிகாரம் அளிப்பதா?
அரசு இதுகுறித்து மறுபரிசீலனை செய்வது அவசியம்!
- கி.வீரமணி

சாத்தான்குளம் காவல்துறை லாக்-அப் இரட்டைப் படுகொலையும் - அது தொடர்பான நிகழ்வுகளும் மக்கள் மத்தியில் பெரும் அளவுக்குச் சர்ச்சையை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

காவல்துறை நண்பர்கள் என்பவர்கள் யார்?

இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய மூன்றாவது தலையீடு முக்கியமானது. அதுதான் ‘‘காவல் துறையின் நண்பர்கள்'' (‘‘ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’’).

1993 ஆம் ஆண்டில் முதன்முதலாக  இராம நாதபுரத்தில் இது தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மக்களுக்கும் - காவல்துறைக்கும் இடையிலான ஒரு சுமூக உறவுப் பாலத்தை ஏற்படுத்துவதற்கான அமைப்பு என்றெல்லாம் சொல்லப்படுவது ஒருபுறம் இருக்கட்டும்.

சாத்தான்குளம் கொடூரத்தில் இவர்களின் முரட்டுக்கரங்களும் சம்பந்தப்பட்டுள்ளன என்ற செய்திகள் கசிந்து மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டுள்ளன.

அண்மையில் இதே சாத்தான்குளம் அரு கிலுள்ள பேய்க் குளம் என்ற ஊரில் நடந்த காவல்துறை அத்துமீறலிலும், 2018 இல் மார்த் தாண்டத்தில் கூலித் தொழிலாளி ராஜன் மரணத் திலும் இந்தக் காவல்துறை நண்பர்களின் கைநீண்டிருக்கிறது என்றெல்லாம் இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வருகிறது.

அரசுடன் இணைந்து செயல்படும் அமைப்பு (Joint Government Organisation) என்று சொல்லப்படும் காவல்துறையின் நண்பர்கள் என்ற இந்த அமைப்பில் சேர்க்கப்படுவதற்கு என்னென்ன நிபந்தனைகள், குணாம்சங்கள் என்பது முக்கியம்.

போக்குவரத்தை ஒழுங்கு செய்வது, திருவிழாக் கூட்டங்களில் உதவுவது உள்ளிட்ட பணிகளில் இவ்வமைப்பில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், கல்லூரி மாண வர்கள் அல்லாதவர்களையும் இவ்வமைப்பில் இணைத்து பயன்படுத்துகிறது காவல்துறை.

காவல்துறையில் தங்களுக்கு இருக்கும் இந்த மரியாதை, செல்வாக்கைப் பயன்படுத்தி அத்து மீறி நடக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இதற்கு முன்பும் அத்துமீறல்கள்!

இதற்குமுன் சில அசம்பாவிதங்களும் நடந்திருக்கின்றன. 2019 இல் வளசரவாக்கத்தில், இந்த அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது.

மகாராட்டிரத்தைச் சேர்ந்த கல்லூரி மாண வர்கள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து நகைகள், செல்போன்கள், பணம் முதலிய வற்றைப் பறித்துச் சென்ற சம்பவமும் உண்டு.

லத்தியோடு இரவு நேரங்களில் ரோந்து!

இந்தக் காவல் துறை நண்பர்கள் இரவு நேரங் களில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். கையில் லத்தி வைத்துக் கொள்ள உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. அத்தகு தருணத்தில் பொது மக்களுக்கும், இவர்களுக்கும் தேவை யில்லாத சச்சரவுகள், கைகலப்புகள் நடப்பது இயல்பே!

‘‘போலீஸ் நண்பர்கள் குழுவுக்குக் காவல் துறையின் எந்த அதிகாரமும் கிடையாது. வழக்கு விசாரணையில் அவர்கள் தலையிடக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தென் மண்டல அய்.ஜி. திரு.முருகன் தெரிவித்துள்ள திலிருந்து காவல்துறை நண்பர்கள் என்று கூறப்படுபவர்களின் தலையீடு ஏதோ ஒரு வகையில் இருந்திருக்கிறது என்று கருதப்பட இடம் உள்ளது.

இப்பொழுது கிடைத்துள்ள மற்றொரு தக வல் அதிர்ச்சிக்குரியது. இந்த அமைப்பில் ஆர்.எஸ்.எஸ். - சங் பரிவார் ஊடுருவல் என்பது தான் அந்தத் தகவல்.

ஆர்.எஸ்.எஸின் ஊடுருவல் அம்பலம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா எச்சரிக்கை என்ற பெயரில் ஒரு துண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், காவல்துறை - ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்பதோடு ‘‘சேவா பாரதி’’ என்னும் அமைப்பின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. சேவா பாரதி என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு தொடர்புடையது.

அதைவிட முக்கியமாக அடையாள அட்டை ஒன்று சேவா பாரதி, ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற பெயர்கள் போட்டு, காவல்துறை அதிகாரியின் கையொப்பத்துடன் உலா வருகிறது. ஆனால், இது போலி அடையாள அட்டை என்று ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மாநில அமைப்பு மறுத்துள்ளது. அப்படியெனில், இந்தப் போலி அடையாள அட்டையைத் தயாரித்தவர்கள், வைத்திருந்த வர்கள்மீது எடுக்கப்பட்டுள்ள சட்டப்படியான நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்வி எழுகிறது.

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது அறிக்கையில் சாத்தான்குளம் மரணம் தொடர்பாக ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறியிருப்பது முக்கியமானதாகும்.

பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் -ஹிந்து யுவவாஹினி

பி.ஜே.பி. ஆளும் சில மாநிலங்களில் ஹிந்து யுவ வாஹினி போன்ற அமைப்புகள் போலீஸ் மித்ரா அமைப்பில் இணைந்து அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது அறிந்ததே. உரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்க சல் வார் ஜூடூம் என்ற அரசுசார் வன்முறை படையை சட்டீஸ்கரில் ஆதிக்கவாதிகள் உருவாக்கினர். அவற்றோடு தொடர்புபடுத்திப் பார்க்கும்போது ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் போர்வையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஊடுரு வலுக்கு வாய்ப்பு மிகமிக அதிகமே - இந்த வகையிலும் விசாரணை நடத்தப்படுவது மிகமிக முக்கியமாகும்.

காவல்துறைக்கு நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?

காவல்துறைக்கு நண்பர்கள் என்றோ, எதிரிகள் என்றோ பார்வை ஏதும் கிடையாது.

சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கவேண்டிய காவல்துறையினருக்குப் பொதுமக்களின் அனைத்துத் தரப்பினரும் பொதுவானவர்களே - இதில் நண்பர்கள் என்று சிலரை இணைத்துக் கொள்வது எப்படி சரியானதாகும்!

இவர்கள் அளவுக்கு அதிகமான உரிமை களை எடுத்துக்கொள்ளமாட்டார்களா? அப்படி எடுத்துக்கொண்ட சம்பவங்களும் நடந்திருக் கின்றன என்கிறபோது - இந்தப் பிரச்சினை மறுசிந்தனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

போலீஸ் அதிகாரிகள் என்ற வேடத்தில் பல இடங்களில் பணப் பறிப்பு உள்ளிட்ட வேலை களில் சிலர் ஈடுபடுவது குறித்து அவ்வப்பொழுது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தவறுகள் செய்ய அதிக வாய்ப்பு!

இந்த நிலையில், காவல்துறையே அங்கீ கரித்து ஓர் அமைப்பை உண்டாக்கி, அதில் குறிப்பிட்டவர்களை (என்ன அளவுகோலோ!) இஷ்டத்திற்கு நியமித்துக் கொண்டால், அதி காரப்பூர்வத் தோரணையோடு தவறுகள் செய்ய வாய்ப்புகள் அதிகரிக்கத்தானே செய்யும்.

மறுபரிசீலனை தேவை!

அரசு இதில் கவனம் செலுத்தி - அரசுத் துறைக்குத் தொடர்பில்லாதவர்களுக்கு அதி காரம் கொடுத்து - செயல்பட வைப்பது ஆபத் தானதாகும். இதற்கொரு முடிவை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக