டெல்டா மற்றும் பெரும்பகுதி மாவட்டங்களில் கனமழைவிவசாய பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்!
ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நஷ்டஈடு வழங்கிடவும்,
விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும்
தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்!! - கே. பாலகிருஷ்ணன்
கடந்த ஒரு வார காலமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பெரும்பகுதியான மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையினால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டன. மற்றும் வாழை, உளுந்து, பாசிப்பயிறு, வேர்க்கடலை உள்ளிட்ட பல வகையான பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு வழியில்லாமல் மொத்தத்தில் சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலங்களில் சாகுபடிகள் முழுமையாக அழிந்து விட்டன. இரண்டொரு தினங்களில் அறுவடை முடிந்து நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகள் தலையில் இடி விழுந்தது போல கலங்கியுள்ளனர். அறுவடை திருநாளான பொங்கல் விழா கொண்டாட முடியாமல் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.