திங்கள், 18 மே, 2020

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் வேளாண் பெருமக்கள் திறம்பட பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்க வேண்டும் - எடப்பாடி கே.பழனிசாமி


காவேரி டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு குறித்து
 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 
திரு. எடப்பாடி K பழனிசாமி அவர்களின் அறிக்கை

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவேரி டெல்டா பகுதி வேளாண் பெருமக்களின் நலனுக்காக மாண்புமிகு அம்மாவின் அரசு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம் 2020, புதிய வேளாண் ஆராய்ச்சி நிலையம், பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு மையம், தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் சேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தல் போன்ற பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டிஎம்சி அடியாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே, டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து குறுவை நெல் சாகுபடிக்கென இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு காவேரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் வேளாண் பெருமக்கள் திறம்பட பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கீழ்க்கண்ட அறிவுரைகளையும் துறை அலுவலர்களுக்கு நான் வழங்கியுள்ளேன்.

  • டெல்டா பகுதிகளில் 12 மணிநேர தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்க மின்சாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். (Uninterrupted 3 phase power supply)
  • பொதுப் பணித் துறையின் மூலம் A & B பாசன வாய்க்கால்களும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் C & D பாசன வாய்க்கால்களும் விரைவாக தூர்வாரப்பட வேண்டும். பொதுப் பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அனைத்து டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • குறுவை சாகுபடிக்கு ஏற்ற குறுகிய கால நெல் ரக விதைகளை தேவையான அளவு இருப்பில் வைத்து விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும்.
  • நெல் சாகுபடிக்கு தேவைப்படும் நடவு இயந்திரங்கள், டிராக்டர்கள், சுழற்கலப்பைகள், உழுவை இயந்திரங்கள் போன்ற வேளாண் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
  • நெல் சாகுபடிக்கு தேவைப்படும் ரசாயன உரங்களை போதுமான அளவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தனியார் உர விற்பனை மையங்களிலும் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் நுண்ணுாட்டக் கலவைகள் மற்றும் உயிர் உரங்கள் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைத்து விநியோகிக்க வேண்டும்.
  • கிணற்று நீர் வசதியுள்ள விவசாயிகள் ஜூலை 12ஆம் தேதிக்குள் நாற்று விட்டு, நடவு பணியினை முடிக்க வேளாண்மை துறை அதிகாரிகள் தங்கள் பகுதி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும், கிணற்று நீர் வசதி இல்லாத விவசாயிகளின் நலனுக்காக, அந்தந்த கிராமத்தில் கிணற்று நீர் வசதியுள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உதவியுடன், மே மூன்றாம் வாரத்திலேயே தேவையான அளவு நாற்று விட்டு, ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் வாய்க்காலில் நீர் வந்தவுடன் நிலம் தயார் செய்து, நடவுப் பணியினை மேற்கொள்ளும் வகையில் முன்கூட்டியே சமுதாய நெல் நாற்றங்கால் அமைப்பதற்கு வேளாண்மைத் துறை அலுவலர்கள் விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும்.

  • அதிக மகசூல் தரும் தொழில்நுட்பங்களான திருந்திய நெல் சாகுபடி மற்றும் இயந்திர நடவு முறையினை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கோடை உழவு, பசுந்தாளுர பயிர்கள் சாகுபடி செய்வதற்கு வேளாண் பெருமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • வேளாண் பெருமக்கள் குறுவை நெல் சாகுபடி பணி மேற்கொள்வதற்கு தேவையான பயிர் கடன் வசதி பெறுவதற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லாக் கடன் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
  • மேலும், தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, விவசாயப் பெருமக்களும், வேளாண் தொழிலாளர்களும் முகக்கவசம் அணிந்து, பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளியினை பின்பற்றி சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு, 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது. இன்று நான் அறிவித்த அறிவிப்பின் மூலம் நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது. பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொண்டு உயர் விளைச்சல் பெற்றிட வேண்டுமென டெல்டா அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு மாண்புமிகு அம்மாவின் அரசு 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து, இது வரை சுமார் 22.81 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்துள்ளது. மீதமுள்ள நெல்லை விரைவில் கொள்முதல் செய்து வரலாற்று
சாதனை படைக்கப்பட உள்ளது.

போதிய அளவு நீர் இல்லாத சூழ்நிலையிலும், நவீன பாசன முறைகளை கடைபிடித்து, உணவு தானிய உற்பத்தியில் சாதனை அளவைக் கடந்து மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதினை 5 முறை தமிழ்நாடு பெற்றுள்ளது. தற்போது, உரிய காலத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் சூழல் உள்ளதால், இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் நமது மாநிலம் ஒரு புதிய சாதனை அளவை எட்டும் என நம்புகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக