சனி, 16 மே, 2020

“மண்ணின் மக்கள் வேலை வழங்கு வாரியம்” அமைக்கக் கோரி தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கைக் கடிதம்!


“மண்ணின் மக்கள் வேலை வழங்கு வாரியம்”  அமைக்கக் கோரி தமிழ்நாடு முதல்வருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது : 

"கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் தாய் மண்ணில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புவது தற்காப்பு உணர்வு சார்ந்த உளவியல் உந்துதல் ஆகும். எனவே, வெளி மாநிலங்களில் பணிபுரிந்த தமிழ்நாட்டுத் தொழிலாளிகள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதும், தமிழ்நாட்டில் சிக்கிக் கொண்டுள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் அவரவர் தாயகப் பகுதிக்கு அனுப்பி வைப்பதும் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கட்டாயக் கடமையாகும்.

இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர் தொழிலாளிகள் போய்விட்டால், இங்கு திறக்கப் படவுள்ள சிறு - குறு - நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கும், பெருந்தொழிற் சாலைகளுக்கும் தேவையான தொழிலாளிகளுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழும்.

தமிழ்நாட்டில் மண்ணின் மக்களின் மனித வளம் அதிகம். இப்போது வெளி மாநிலங்களிலிருந்து வந்து சேரும் தமிழ்த் தொழிலாளிகளும் இந்த மனித வளத்தில் கூடுதலாகச் சேர்ந்து கொள்வார்கள். ஏற்கெனவே தமிழ்நாட்டுத் தொழில் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாட்டுத் தொழிலாளிகள் பல இலட்சம் பேர் வேலையின்றி இருக்கிறார்கள். உள்ளூர் வேலைகளை தவிர்த்து விட்டு வேலை கிடைக்கவில்லை என்று இருப்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறானவர்களை உள்ளூர் வேலைகளுக்கும், தமிழ்நாட்டு வேலைகளுக்கும் ஈர்க்கும் தனி முயற்சியும் அரசு எடுக்க வேண்டும்.

இவர்கள் அனைவர்க்குமான “தமிழ்நாடு அமைப்பு சாராத் தொழிலாளர் வேலை வாய்ப்பு வாரியம்” ஒன்றைப் புதிதாகத் தொடங்கி மேலே சொல்லப்பட்ட ஆண் - பெண் தொழிலாளிகள் அனைவரையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். பல துறை வேலை வாய்ப்பிற்குரிய கல்வித் திறன் பெற்றவர்களும் உடல் உழைப்பாளிகளும், கட்டுமானத் தொழிலாளிகள் உள்பட அனைவரும் இந்த வாரியத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று விதிமுறை உருவாக்க வேண்டும். 

எல்லாத் தொழில் நிறுவனங்களும் இந்த வாரியத்திலிருந்து தங்களுக்குத் தேவையான தொழிலாளிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சட்டமியற்ற வேண்டும். தொழில் நிறுவனங்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளிகளை அழைத்து வரும் பணவேட்டைத் தரகர்களுக்குத் தடை விதிக்க வேண்டும். எந்தத் தொழில் நிறுவனத்திலும் 10 விழுக்காட்டிற்கு மேல் வெளி மாநிலத் தொழிலாளிகள் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது! 

இந்தத் தொழிலாளிகளுக்கு வேலை நேரம், வேலைக்கேற்ற ஊதியம் அனைத்தையும் வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கும்போது, தொழிலாளி கிடைக்கவில்லை என்ற சிக்கல் ஏற்படாது. வெளி மாநிலத் தொழிலாளிகளைக் கட்டாயப்படுத்தித் தங்க வைக்கும் உரிமை மீறல் தேவை இல்லை. 

தமிழ்நாட்டிலுள்ள வெளி மாநிலத் தொழிலாளிகள் தங்கள் மாநிலங்களுக்குச் செல்ல விரும்பும் நிலையில், அவர்களைத் தடுத்து இங்கேயே தங்க வைத்துக் கொள்ள தொழில் முனைவோர் சிலர் முயல்கிறார்கள். அடுத்து, கொரோனா காலத்தில் ஒரு விடுமுறை போல் தங்கள் மாநிலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பித் தமிழ்நாட்டுக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்திலும் புலம் பெயர் தொழிலாளிகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஒரு சரியான முடிவெடுக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் மிகை எண்ணிக்கையில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் நிரம்பியுள்ளார்கள். ஒரிசா மாநில அரசு, தங்கள் மாநிலத் தொழிலாளிகளுக்காக தமிழ்நாட்டில் சென்னையிலும், திருப்பூரிலும் அலுவலகம் திறந்துள்ளது. இப்பொழுது உள்ள புலம் பெயர் தொழிலாளிகளும், இதே எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் நிலைத்து மேலும் மேலும் வடமாநிலத் தொழிலாளிகள் இங்கு வந்து குவிந்தால் தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்குரிய வேலைகள் அயல் மாநிலத்திற்குப் பறிபோய்விடும். தமிழ்நாட்டு மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்திலும் வறுமையிலும் உழல்வார்கள். மேலும் இதே எண்ணிக்கையில் வட மாநிலத் தொழிலாளர்கள் வந்து குவியும்போது, தமிழ்நாட்டு மக்கள் தொகை விகிதத்தில் அயல் மாநிலத்தார் எண்ணிக்கை அதிகமாகி, தமிழர்கள் எண்ணிக்கை குறையும் அபாயமிருக்கிறது. 

அரசமைப்புச் சட்டப்படி தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்ட நோக்கம் சிதைந்து, கலப்பின மாநிலமாக மாறிவிடும். தமிழ் மொழி தமிழ்நாட்டில் பின்னுக்குத் தள்ளப்படும். தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு இருக்காது! 

இந்த அபாயங்களை உணர்ந்து, மண்ணின் மக்கள் வேலைப் பாதுகாப்பு மட்டுமின்றி, தமிழர் தாயகப் பாதுகாப்பு என்ற நோக்கத்திலும் மேற்சொன்ன நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். 

மிகக் குறைந்த கூலிக்காகவும், மிகை நேர வேலைக்காகவும் தமிழ்நாட்டு குடிமக்களைப் புறக்கணித்துவிட்டு, வெளி மாநிலத் தொழிலாளிகளை வேலைக்குச் சேர்க்க முனைகின்ற தன்னலவாத தொழில் முனைவோரின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களது மேற்கண்ட வேண்டுகோளை பரிசீலித்து, “மண்ணின் மக்கள் வேலை வழங்கு வாரியம்” அமைத்திடவும், வெளி மாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலத்திற்கு அனுப்பி வைக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்".   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக