புதன், 20 மே, 2020

அச்சு ஊடகங்களின் நெருக்கடிகளை களைய பா.ம.க. துணை நிற்கும்! - அன்புமணி ராமதாஸ்


அச்சு ஊடகங்களின் நெருக்கடிகளை 
களைய பா.ம.க. துணை நிற்கும்! - அன்புமணி ராமதாஸ்

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக திகழும் ஊடகங்கள், கொரோனா நோய் பரவல்  காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. நாடு நெருக்கடிகளை சந்திக்கும் போது, அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு துணை நிற்கும் ஊடகங்களே இப்போது நெருக்கடியை சந்திக்கும் நிலையில், அவற்றுக்கு உதவ வேண்டியது அரசின் கடமையாகும்.

ஊடகங்களில் அச்சு ஊடகங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அவை குறித்து விளக்குவதற்காக தி இந்து குழுமத்தின் தலைவர் திரு.என்.இராம், தினமலர் நாளிதழின் வெளியீட்டாளர் திரு.எல்.ஆதிமூலம், தினகரன் நாளிதழின் ஆசிரியர் திரு.ஆர்.எம்.ஆர். இரமேஷ் ஆகியோர் இன்று காலை என்னை எனது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். பொருளாதார மந்தநிலை காரணமாக அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள் குறித்தும், அவற்றைக் களைய அரசுத் தரப்பிலிருந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் விரிவாக விளக்கினர்.


1. செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான நியூஸ் பிரிண்ட் காகிதம் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்.

2. அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

3. அரசு ஊடகங்களின் விளம்பரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டும்

ஆகியவை தான் அச்சு ஊடகத்துறையினரின் முதன்மையான கோரிக்கைகளாகும். இதுதொடர்பாக பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அக்கோரிக்கைகளை நிறைவேற்றும்படி மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்காக அவர்கள் வழங்கிய கடிதத்தில் தினத்தந்தி அதிபர் திரு.பாலசுப்பிரமணிய ஆதித்தன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் திரு.மனோஜ்குமார் சவுந்தாலியா ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர்.

எனது இல்லத்தில் இருந்தவாறே பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் குறித்து  அவர்கள் விளக்கினார்கள். அதைக் கேட்ட மருத்துவர் அய்யா அவர்கள்,‘‘ ஊடகங்கள் எப்போதும் எங்கள் கூட்டணித் தோழர்கள். அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் அனைத்தையும் நான் அறிவேன். மிகவும் நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் ஊடகங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி துணை நிற்கும். அச்சு ஊடகங்களின் பிரச்சினைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களிடம் பேசுகிறேன்; அவருக்கு கடிதம் எழுதுகிறேன். அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு வரும் அனைத்து நெருக்கடிகளையும் களைவதற்கு பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்’’ என்று உறுதியளித்தார்.

மருத்துவர் அய்யா அவர்கள் கூறியதைப் போலவே அச்சு ஊடகங்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவது உண்மை; அதேபோன்று அவர்கள் அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை. செய்தித்தாள்களின் தயாரிப்பு செலவு அதன் விற்பனை விலையை விட பல மடங்கு அதிகம் எனும் நிலையில், அதிக அளவில் விளம்பரங்கள் வந்தால் மட்டும் தான் தயாரிப்பு  செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை சமன் செய்ய முடியும். பொருளாதார நிலைமை சரியாகி தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள் வருவதற்கு இன்னும் பல மாதங்களோ, சில ஆண்டுகளோ ஆகக்கூடும் என்பதால் அதுவரை அச்சு ஊடகங்களுகு அதிக விளம்பரங்கள், அதிக விளம்பரக் கட்டணம் ஆகியவற்றின் மூலம் ஆதரவளிக்க வேண்டியது அரசின் தார்மிகக் கடமை ஆகும். இதை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி, ஊடகங்களுக்கு உதவும்படி பா.ம.க. வலியுறுத்தும்.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இந்தியா எப்போது மீளும்? கொரோனா பாதிப்பு மற்றும் பொருளாதார மந்தநிலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அச்சு ஊடகக் குழுவினரும் நானும் விவாதித்தோம். வெகுவிரைவில் அனைத்து சிக்கல்களும் தீரும்; இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்று நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக