வெள்ளி, 15 மே, 2020

கோவிட்-19 குறித்து உங்களுக்கு என்ன தெரியும்? மத்திய அரசின் விநாடி-வினா போட்டியில் கலந்து கொள்ளுங்கள்! உடனடியாகச் சான்றிதழ் பெறுங்கள்!!


கோவிட்-19 குறித்து உங்களுக்கு என்ன தெரியும்?

மத்திய அரசின் விநாடி-வினா போட்டியில் கலந்து கொள்ளுங்கள்! உடனடியாகச் சான்றிதழ் பெறுங்கள்!!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதில் இருந்து நம் நாட்டில் பலவிதமான பொய்ச் செய்திகளும் புனைவுகளும் கட்டுக்கதைகளும் உலா வர ஆரம்பித்துள்ளன.  பேரிடர் காலத்தில் தவறான தொடர்பியல் நடவடிக்கைகள் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.  எனவே சரியான தகவல்களை மக்களுக்கு அளிப்பது அரசின் பொறுப்பாக இருக்கிறது.  அந்த வகையில் மத்திய அரசு தனது ஊடகங்கள் மூலமாக கோவிட்-19 குறித்த உண்மைத் தகவல்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறது. 

பொதுமக்களிடையே சரியான தகவல்களைத் தெரிவிப்பதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மத்திய அரசு கோவிட்-19 குறித்த ஆன்லைன் விநாடி-வினா போட்டியை தற்போது நடத்தி வருகின்றது.  1-5-2020ல் தொடங்கிய இந்தப் போட்டி 29-5-2020ல் நிறைவுறுகிறது.  கொரோனா போர்வீரராக உருவாகுங்கள் & கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுங்கள் என்ற முழக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது. 

quiz.mygov.in என்ற வலைத்தளத்தில் இந்தப் போட்டி நடைபெறுகின்றது. இந்திய குடிமக்கள் யார் வேண்டுமென்றாலும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.  இந்த வலைத்தளத்தில் நுழைந்தவுடன் ஏதாவது ஒரு முறையில் லாக்இன் செய்ய வேண்டும்.  ஏற்கனவே @gov.in அல்லது @nic.in கணக்கு வைத்திருப்பவர்கள் நேரிடையாக லாக்இன் செய்யலாம். மற்றவர்கள் இ-மெயில் / மொபைல் மூலம் ஓடிபி வரப்பெற்று லாக்இன் செய்யலாம்.  இல்லையென்றால் தங்களது சமூக ஊடக கணக்கின் மூலம் லாக்இன் ஆகலாம். பிறகு பெயர், இ-மெயில் முகவரி, பிறந்த தேதி, பாலினம் ஆகிய தகவல்களைத் தந்து பதிவு செய்து கொண்டு நேரிடையாகப் போட்டியில் பங்கேற்கலாம்.

போட்டியில் 10 கேள்விகள் கேட்கப்படும்.  ஏற்கனவே இருப்பில் உள்ள கேள்வித் தொகுப்பில் இருந்து ஏதாவது 10 கேள்விகள் தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கேட்கப்படும்.  விநாடி-வினா போட்டிக்கான கால அவகாசம் 120 விநாடிகள் ஆகும்.  கோவிட்-19 தொடர்பாக செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை, கட்டுக்கதைகளை உடைத்து உண்மையைக் கண்டறிதல், மருத்துவத் தகவல்கள் முதலானவை தொடர்பாக கேள்விகள் இருக்கும். 


போட்டியில் 10 கேள்விகளுக்கும் பதில் கூறிய பிறகு தகுதி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் பங்கேற்றவரின் பெயரை அச்சிட்ட பங்கேற்புச் சான்றிதழ் உடனடியாக பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.

மத்திய அரசின் இந்த ஆன்லைன் விநாடி-வினா போட்டியைப் பார்த்த பிறகு பல்வேறு கல்வி நிறுவனங்கள் இது போன்ற விநாடி-வினா போட்டியை நடத்த ஆரம்பித்துள்ளன.  உதாரணமாக சிதம்பரம் அருகில் உள்ள முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் ஆன்லைன் விநாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் இந்த ஆன்லைன் விநாடி-வினா போட்டியில் கலந்துகொண்டவர்களின் கருத்துகளைக் கேட்போம்:

சித. முத்துசிவக்குமரன், நிதி ஆலோசகர், வளவனூர்: மக்கள் தொடர்பு கள அலுவலகம் மூலமாக இந்த விநாடி-வினா நடத்துவது குறித்து அறிந்து கொண்டேன்.  இதில் கலந்து கொண்டது பயன் உள்ளதாக இருந்தது. இந்த லிங்க்கை பல நண்பர்களுக்கும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.  இந்த விநாடி-வினா அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என விரும்புகிறேன்.

கோ.ஜெகதீஷ்வரி, புதுச்சேரி: ஆன்லைன் விநாடி-வினா லிங்க் எனக்கு புதுச்சேரியில் உள்ள மக்கள் தொடர்பு களஅலுவலகம் மூலமாக கிடைத்தது.  கொரோனா பற்றி தெரியாத விஷயங்களையும் தெரிந்து கொள்ள இந்த விநாடி-வினா ஊக்கமாக இருக்கிறது.  குழந்தைகள் கூட எளிதில் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

மு. கேஷிகாஞ்சனி, எம்.ஓ.பி.வைஷ்ணவி கல்லூரி மாணவி, சென்னை  மத்திய அரசின் கோவிட் விநாடி-வினா போட்டியில் கலந்து கொண்டேன்.  சான்றிதழ் கிடைத்தது.  எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.  என் நண்பர்களை இதில் கலந்து கொள்ளக் கூறி உள்ளேன்.

உதயகுமார், விரிவுரையாளர், அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, புதுச்சேரி: கேள்விகள் எல்லாம் கோவிட்-19 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தன.  என்னுடைய மாணவிகளுக்கும் இந்த லிங்க்கை அனுப்பி கலந்து கொள்ளுமாறு கூறினேன். நிறைய மாணவிகள் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுள்ளனர்.

தகவல் இன்று ஆயுதமாகவும் விலையுயர்ந்த சரக்காகவும் இருக்கின்றது.  சரியான தகவல்கள் சரியான நேரத்தில் தேவையானவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதுதான்  இன்றைய தொடர்பியல் பணியாளர்களின் முக்கிய வேலையாகும்.  இந்த விநாடி-வினா போட்டி அத்தகைய ஒரு முயற்சி என்றால் மிகையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக