திங்கள், 24 ஆகஸ்ட், 2020

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களது நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுக்கும் செய்தி


"விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களது நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுக்கும் செய்தி"

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளில் (20.8.2020), அவருக்கு நாம் அனைவரும் இணைந்து செலுத்தும் வீரவணக்கம்; இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட நம் தீரர்களின்  தியாக வரலாற்றை, இன்றைய இளைய தலைமுறையினர்க்கு  எடுத்துரைக்கும் ஏற்றமிகு நிகழ்வாகும். 

நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் - ஆதிபத்திய ஆங்கிலேயர்களை தன்னந்தனியாகவே சந்தித்து வெற்றி பெற்ற சாதனை வீரர் என்பதால், "ஒண்டிவீரன்" என்று அழைக்கப்பட்ட அவர், பூலித்தேவனின் படை வீரராகவும், தளபதியாகவும் விளங்கியவர்.

ஒண்டிவீரனின் விடுதலைப் போராட்ட வரலாறு  இளைஞர்களுக்கு,  எழுச்சி பெற்ற இந்தியத் திருநாட்டை என்றைக்கும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். ஆகவேதான் சுதந்திரப் போராட்டத்திற்காகப் பாடுபட்ட வீரர்கள் பலருக்கும் பெருமை சேர்த்த கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு - ஒண்டிவீரனின் புகழை - பெருமையைப் போற்றிடும்  வகையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி - அடிக்கல்லும் நாட்டியது. இன்று பாளையங்கோட்டையில் அந்த மணி மண்டபம் ஒண்டிவீரனின் தியாகத்தை நாட்டு மக்களுக்குப் பறைசாற்றும் காலப் பெட்டகமாகத் திகழ்கிறது என்பது சிறப்புக்குரியது.

வாழ்க ஒண்டிவீரனின் புகழ்! வளர்க இளைஞர்களின் நாட்டுப் பற்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக