வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

கிராம வங்கிகளில் நகைக் கடன்களுக்கு 8.25% வட்டி வன்மையான கண்டனத்திற்குரியது. - பெ.சண்முகம்


கிராம வங்கிகளில் நகைக் கடன்களுக்கு 8.25% வட்டி
வன்மையான கண்டனத்திற்குரியது. 
- பெ.சண்முகம், 
பொதுச் செயலாளர், 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

கிராமப்புற மக்களுக்கு எளிதில் வங்கிச் சேவை கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டது கிராம வங்கிகள். பாண்டியன், பல்லவன் என்று பல்வேறு பெயர்களில் துவங்கப்பட்ட கிராம வங்கிகள் தற்போது மாநில அளவில் தமிழ்நாடு கிராம வங்கிகள் என்று மாற்றப்பட்டு 632 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

பொதுத்துறை நிறுவனமான இந்த கிராம வங்கிகளில் விவசாயத்திற்காக பெறும் நகைக்கடனுக்கு 8.25% வட்டி வசூலிக்கப்படுகிறது. அனைத்து பொதுத்துறை வங்கிகளும் 7% வட்டி நிர்ணயித்துள்ள நிலையில் கிராம வங்கி மட்டும் 8.25% என்று நிர்ணயித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. 

தனியார் வங்கி மற்றும் அடகு கடைகளில் வட்டி அதிகம் என்ற காரணத்தினால்தான் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் நகையை அடகு வைக்கிறார்கள். ஏற்கனவே கடன் சுமை காரணமாக நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் வங்கி நிர்வாகம் உடனடியாக இந்த அநியாய வட்டியை ரத்து செய்து மற்ற பொதுத்துறை வங்கிகள் போல் நகைக்கடனுக்கு 7% என்று வட்டியை நிர்ணயிக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.

இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு, விவசாயிகளுக்கு விரோதமான வட்டி மற்றும் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக