வியாழன், 29 ஜூலை, 2021

அரசமைப்புச் சட்டம் 8 ஆவது அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றிருக்க - ஹிந்திக்கு மட்டும் தனிச் சலுகையும் - கோடி கோடியாகப் பணத்தை வாரி இறைப்பதும் ஏன்? - கி.வீரமணி

 அரசமைப்புச் சட்டம் 8 ஆவது அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றிருக்க - ஹிந்திக்கு மட்டும் தனிச் சலுகையும் - கோடி கோடியாகப் பணத்தை வாரி இறைப்பதும் ஏன்?

ஹிந்தி எதிர்ப்பு 1938 இல் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தலைமையில் தொடங்கப்பட்டதை நினைவூட்டுகிறோம்!

ஹிந்தி எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்த்தே தீருவோம்! - கி.வீரமணி

இந்திய அரசமைப்புச் சட்டப்படி எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகள் 22 ஆகும். முதலில் 14 மொழிகள் - பிறகு கூடுதலாகி 22 ஆக பட்டியல் நீண்டது. எந்த ஒரு தனி மொழிக்கும் ‘தேசிய மொழி’ என்று அதன் தலைப்பில் குறிப்பிடாமல், ‘‘Languages’’‘‘மொழிகள்’’ - என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்!

ஒன்றிய அரசின் உறுதிமொழி என்னாயிற்று?

‘தேவ பாஷை’ எழுத்துக்களைக் கொண்ட  ‘ஹிந்தி’ ஆட்சி மொழியாக அர சமைப்புச் சட்டத்தில் அறிவிக்கப்பட்டாலும், ஜனநாயகத்தில் மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் இணை ஆட்சி அலுவல் மொழியாக நீடிக்கும் என்பது இந்திய பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர் களால் நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி!

அது ஒன்றிய அரசின் வாக்குறுதியே தவிர, ஒரு தனி நபர் தந்த வாக்குறுதி அல்ல! ஒன்றிய அரசை எந்நாளும் கட்டுப்படுத்தும்.

இந்தப் பின்னணியை அறவே - ‘வசதி யாக’ மறந்துவிட்டு, ஆர்.எஸ்.எஸின் அரசியல் பிரிவான பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததுமுதல், ஹிந்தியையும், அதன் தாயான சமஸ்கிருதத்தையும் வேக வேகமாகத் திணிப்பதிலேயே முனைப்பு காட்டி வருகின்றது!

எங்கும் ‘ஹிந்தி, எதிலும் ‘ஹிந்தி’ கூடுதல் நிதியை செம்மொழி தகுதி பெற்றி ருந்த தமிழுக்குக் கிள்ளிக் கொடுப்பதும், சமஸ்கிருதத்திற்கு அள்ளி - வாரிக் கொடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது இந்த பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில்! 

(2017 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.643.84 கோடி. அதேநேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா மொழிகள் அனைத்திற்கும் சேர்த்து ஒதுக்கப்பட்ட தொகையோ ரூ.29 கோடி மட்டுமே!)

கேள்வி கேட்பது ஒரு மொழியில் என்றால், பதில் அளிப்பது ஹிந்தியிலா?

ஹிந்தி தெரியாதவர்கள் கேள்வி கேட்டால், தகவல் சேகரிக்க விரும்பினால், அவர்கள் எந்த மொழியில் கடிதம் எழுதிக் கேட்கிறார்களோ, அம்மொழியில் பதிலளிப்பதுதான் குறைந்தபட்ச நாகரிகம், சட்டப்படியான கடமையும்கூட!

அப்படியில்லாமல், ‘சர்வமும் ஹிந்தி’ என்ற முறையில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் ஹிந்தி பேசாத - தெரியாத - பகுதி எம்.பி.,களுக்கும்கூட ஹிந்தி மொழியிலேயே பதில் எழுதுவது அரசியல் அடாவடித்தனம் அல்லாமல் வேறு என்ன?

மாநிலங்களவை தி.மு.க. கட்சியின் தலைவரான மூத்த உறுப்பினர் மானமிகு திருச்சி சிவா அவர்கள் இதுபற்றி இரண்டு நாள்களுக்குமுன், ஒரு பேட்டியை புது டில்லியில் ஊடகங்களுக்குத் தந்துள்ளார் - வேதனையுடன்!

தகவல் பரிமாற்றம் என்பது முக்கியமா? மொழித் திணிப்பு முக்கியமா?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வேதனை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (28.7.2021) விசாரணைக்கு எடுத்துக்கொள் ளப்பட்ட வழக்கொன்றில், புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான தகவல்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சென்னையைச் சேர்ந்த வழக்கு ரைஞர் எம்.ஞானசேகரன் என்பவர்.

அந்த மனுவை அவருக்குத் திருப்பி அனுப்பிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம், ஹிந்தியிலேயே பதிலளித்திருக்கிறது.

‘‘எனக்கு ஹிந்தி தெரியாது. தமிழ், ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும்.எனவே, ஹிந்தியில் வழங்கிய உத்தரவை ரத்து செய்யவேண்டும். எனக்குத் தெரிந்த மொழிகளில் மட்டுமே பதில் அளிக்க உத்தரவிட வேண்டும்‘’ என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.வைத்தியநாதன் அவர்கள் முன் நேற்று (28.7.2021) விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு ஆவணங்களைப் பார்த்த உயர்நீதிமன்ற நீதிபதி, மனுதாரரைப் பார்த்து, ‘‘உங்களுக்கு மட்டுமல்ல; எனக்கும் ஹிந்தி தெரியாது’’ என்று விளக்கம் அளித்தார்!

பின்னர் ஒன்றிய அரசு 16 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்!

என்னே விசித்திரம்! திணிப்பின் காரணமாக எவ்வளவு நேரம்,  உழைப்பு வீணாகி, நீதிமன்றமே இப்படி வேதனைப்படும் அளவுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் படுகிறது!

தனக்கே ஹிந்தி தெரியாது என்று உண்மையைக் கூறிய மாண்பமை நீதிபதி, ஹிந்தி எதிர்ப்புப் பின்னணியிலிருந்து அப்பதவிக்கு வந்தவர் அல்ல! அவருக்கே இந்தத் திணிப்பு இவ்வளவு வேதனையைத் தந்துள்ளது என்கிறபோது, மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்படும் என்பதை ஒன்றிய அரசு எண்ணிப் பார்க்கவேண்டாமா?

‘ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!’ - முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொலைநோக்கு முழக்கம்!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் தந்த அய்ம்பெரும் முழக்கங்களில் ஒன்று, ‘ஹிந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!’ என்பது - எப்படி சரியான வழிகாட்டல் பார்த்தீர்களா?

1938-லேயே கட்டாய ஹிந்தியை எதிர்த் துப் போர்க்குரலை தந்தை பெரியாரும், தமிழ் அறிஞர்களும், தமிழ்ப் பெருமக்களும் எதிர்த்துத் தொடங்கிய அறப்போர் இன்னும் முடியவில்லை. முற்றுப்புள்ளி வைக்காது, அரைப் புள்ளியாகவே தொடரவேண்டிய அவசியத்தை வடக்கின் ஹிந்தி வெறியர்கள் உருவாக்கினால், ஒருபோதும் தமிழ் மண் - சகித்துக் கொண்டிருக்காது!

எதிர்த்தே தீருவோம்!

திணிப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்த்தே தீருவோம் - உயர்நீதிமன்ற நட வடிக்கை சாட்சியங்களாக அமைந்துள்ளது. நாம் நீதியின் பக்கம் நின்று நியாயம் கேட்பதை உலகுக்கு உணர்த்துவதாக உள்ளது அல்லவா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக