சனி, 24 ஜூலை, 2021

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆகக் குறைக்கப்பட வேண்டும் வேலை வாய்ப்பு பெருகட்டும், நம் இளைஞர்களின் துயரம் நீங்கட்டும்! - கி.வீரமணி

 தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பின் அபாய நிலை ஓய்வு வயதை அ.தி.மு.க. அரசு உயர்த்தியதன் பின்னணி என்ன?

இந்த நெருக்கடியிலிருந்து மீள தி.மு.க. அரசு செய்யவேண்டியது என்ன?

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆகக் குறைக்கப்பட வேண்டும்

வேலை வாய்ப்பு பெருகட்டும் - நம் இளைஞர்களின் துயரம் நீங்கட்டும்!

 - கி.வீரமணி

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் - நடுத்தர வயதினர்களின் எண்ணிக்கை 67 லட்சத்து  76 ஆயிரமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதில் பட்டதாரி மற்றும் வயது குறைந்த இளைஞர்களின் எண்ணிக்கை  சுமார் 12 லட்சம் ஆகும். மற்றும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள்!

இதற்கு முக்கிய காரணம் முந்தைய அ.தி.மு.க. அரசேயாகும்.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தியதன் பின்னணி என்ன?

2021 தேர்தலுக்கு முன்னர், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்தினர் - கடும் எதிர்ப்பை நாமும், பல அரசு ஊழியர்களும், தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகளும்கூட எதிர்த்துக் குரல் கொடுத்தனர்.

என்றாலும், இதுபற்றி கேளாக்காதுடன் அலட்சியமாகவே அன்றைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நடந்துகொண்டது! அதற்குக் காரணம், அரசு கருவூலத்தில் பணம் - நிதி இல்லை. தான்தோன்றித்தனமாக - டம்பாச்சாரி திட்டங்கள் - சுமார் 5 லட்சம் கோடி கடன் மாநில அரசுக்கு - அதில் பெரும்பகுதி பழைய கடனுக்குக் கட்டவேண்டிய வட்டித் தொகைக்காகவே புதிய கடன் என்ற விசித்திரமான ‘நிதி மேலாண்மை’ நிர்வாகம்!

இந்த நிலையில், ஓய்வு பெற்றுச் செல்லும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தொகை - பென்சன் உடனடியாக வழங்கிட  ஒரு பகுதி - இருப்பில் இல்லாததால், அவர்களைப் பதவியில் நீடிக்கச் செய்யும் ‘உத்தி’யாகத்தான் இந்த 58 வயது ஓய்வு வயதை 60  வயதாக ஆக்கினார்கள்!

பல அரசு சங்கங்களேகூட இந்த வயது  நீட்டிப்பை எதிர்த்தன; புதிய இளைஞர்களின்  வேலைவாய்ப்புகள் இதன்மூலம்  அறவே தடுக்கப்பட்டன. பதவி உயர்வு பெற்ற பல ஆண்டு காத்திருந்த தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வாய்ப்புக் கதவுகள் சாத்தப்பட்டன!

அ.தி.மு.க. அரசின் நிதி முறைகேட்டை அறிக்கையாக பட்ஜெட் உரையில் 

அரசு வெளியிடலாம்!

(விரைவில் தி.மு.க. அரசு வெளியிடவிருக்கும் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையில் பழைய அ.தி.மு.க. அரசின் திறமையற்ற முறைகேடான நிதி மேலாண்மைபற்றிய ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் வெளிவந்தால் பல அதிர்ச்சியூட்டக் கூடிய உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அரசுக்கு வந்து சேரவேண்டிய நிதி எப்படித் தனியாருடன் ஒப்பந்தம் போடப்பட்டு கூட்டுக் கொள்ளைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்ற ஊழல் பனிப் பாறையையே வெளியே கொண்டு வரப்படக் கூடிய வாய்ப்பு உலகத்திற்குக் கிடைக்கும்).

ஓய்வு வயதை உயர்த்தி தமிழ்நாடு அரசு புதிய வேலை வாய்ப்புக் கதவுகளைச் சாத்தியதோடு, தமிழ்நாடு அரசின் பல துறைகளில் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமே இருந்த வாய்ப்பினைக் குறுக்கும் வகையில், அன்றைய முதலமைச்சர் இ.பி.எஸ்., துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோர், பிற மாநிலத்தவர்களும் தாராளமாக தமிழ்நாடு அரசுத் துறைகளில் நுழைய இருந்த தடுப்புகளை நீக்கினர்!

தமிழ்நாட்டின் அரசுத் துறைகள் மின்சார வாரியம் உள்பட பல துறைகளும் வடநாட்டவரின் - வேறு வெளிமாநிலத்தவரின் ஆதிக்கம் நிறைந்ததாகவே ஆகி, தமிழ்நாட்டு இளைஞர்கள் தெருவில் நிற்கும் பரிதாபமான நிலைக்குக் காரணமானார்கள்.

அறிஞர் அண்ணா சொன்ன வரிகள்

அறிஞர் அண்ணா முன்பு ஒரு திரைப்படத்தில் எழுதிய வசனத்தை இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இந்திய முதலமைச்சர்களில் முதல் இடத்தினைப் பிடித்து உயர்ந்து நிற்கும் ஆளுமைமிகு முதலமைச்சர் அவர்கள் அறியாதவரல்ல!

‘‘சாலை ஓரத்தில் வேலையற்றதுகள் வேலையற்றதுகளின் விழிகள் கேள்விக்குறி! அவைதான் ஆபத்தான அறிகுறி வேந்தே!’

என்ற வசனம்.

இன்றைய சூழலில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கரோனா கொடுந்தொற்றின் இரண்டாம் அலை வீச்சின் தாக்கம் உள்பட பல காரணங்களால் - ஊரடங்கு தொழில் முடக்கம் - காரணமாக, ஏற்கெனவே இருந்த வேலைகளை இழந்தவர் எண்ணிக்கை, எரியும் நெருப்புக்கு நெய்யூற்றிய கொடுமையாகவே சேர்ந்துள்ளது!

காலியாக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் கருவூலத்தைக் கையில் பெற்று, கடினமான நிதி நெருக்கடியிலும் தாம் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக  நமது முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்!

இதில் தெளிவான கொள்கை முடிவாக ஓய்வு வயது 60 ஆக உயர்த்தியதை, மீண்டும் 58 ஆக குறைப்பதோடு, மாற்றுத் திறனாளிகள் உள்பட பலருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க - குறுகிய காலத்தில் 29 ஆயிரம் கோடி முதலீடுகளை சிறப்பாக தொழில்துறையில் ஈர்த்துள்ளதைத் தொடரவேண்டும்.

வேலை வாய்ப்புப் பெருகட்டும்!

தமிழ்நாடுதான் முதல் முகவரி - காரணம், இது அமைதிப் பூங்கா! ஆளுமை வெளிப்படை, ஒற்றைச் சாளர அனுமதி என்ற ஈர்ப்புகள்; எனவே, வேலை வாய்ப்பு பெருகட்டும்; இளைஞர்கள் துயர் நீங்கட்டும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக