செவ்வாய், 20 ஜூலை, 2021

பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனாவின் கீழ் 1.09 கோடி நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. - தொழில்முனைதல் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்


திறன் வளர்த்தல் மற்றும் தொழில்முனைதல் அமைச்சகத்தின் முதன்மை திட்டமான பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனா 2.0-வின் (2016-2020) கீழ், ஒரு கோடி நபர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 1.09 கோடி நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

2021 ஜனவரி 15 அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனா 3.0-வின் (2020-2022) கீழ், 8 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1.2 லட்சம் பேருக்கு இது வரை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி/சான்றிதழ் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயிற்சி தேவையை பூர்த்தி செய்வதற்காக, மாவட்ட அளவிலான திறன் வளர்த்தலை திறன் வளர்த்தல் மற்றும் தொழில்முனைதல் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜனாவின் கீழ், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நீடித்த வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்காக அசாம், பிகார், ஒடிசா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 70,823 நபர்களுக்கு இது வரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக