சனி, 24 ஜூலை, 2021

டாஸ்மாக் கடை எதிர்ப்பு உள்ளிட்டு மக்கள் நலனுக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறுக! - கே.பாலகிருஷ்ணன்


 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் ஜூலை 23, 24, 25 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் (24.7.2021) நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

கடந்த ஆட்சியில் டாஸ்மாக் கடை எதிர்ப்பு உள்ளிட்டு மக்கள் நலனுக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறுக! 

கடந்த ஆட்சிக் காலத்தில் மக்கள் கோரிக்கைகளுக்காக தன்னெழுச்சியான பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இத்தகைய போராட்டங்களில் மாநில அரசு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, போராடியவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு வழக்குகள், தடியடி, சிறை உள்ளிட்ட அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, டாஸ்மாக் கடைகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் பல்வேறு தரப்பு பெண்களும், இயக்கங்களும், அமைப்புகளும் கலந்து கொண்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை புனைந்துள்ளனர். இவையனைத்தும் ஆளும் கட்சியின் நிர்பந்தத்தால், அரசியல் நோக்கத்திற்காக புனையப்பட்ட வழக்குகளே தவிர, குற்றச் செயல்களுக்காக பதியப்பட்ட வழக்குகள் அல்ல.

 தற்போது தமிழக அரசு சிறந்த முன்னுதாரணமாக, கடந்த ஆட்சியில் கருத்து சுதந்திரம் பறிப்பு, மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம், சேலம் 8 வழிச்சாலை,  நீட், ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு உலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற்றுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்பதுடன், தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

 அதேபோன்று, டாஸ்மாக் கடைகள் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள், விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் உயர்அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிராக போராடிய விவசாயிகள், விளை நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிப்பு, எரிவாயு குழாய் பதிப்பு போன்ற திட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட மக்கள் நலனுக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக