திங்கள், 19 ஜூலை, 2021

ரூ.58.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், எல்எஸ்டி ஸ்டாம்புகள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


 ரூ.58.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள், எல்எஸ்டி ஸ்டாம்புகள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக  இருவர் கைது செய்யப்பட்டனர்.

போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு கிடைத்த தகவல் படி, சென்னையில் வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த பார்சல்  சோதனை செய்யப்பட்டது. அந்த அட்டைபெட்டி பார்சலை திறந்து பார்த்தபோது, ஒரு வாழ்த்து அட்டை மற்றும் இரண்டு சில்வர் நிற பிளாஸ்டிக் பைகள் இருந்தன. அவற்றில் ஒன்றை பிரித்து பார்த்தபோது, இளஞ்சிவப்பு நிற மாத்திரைகள்  ஒரு பக்கத்தில் மண்டை ஓட்டு வடிவில் இருந்தன. இவை எம்டிஎம்ஏ போதை அல்லது பரவச மாத்திரைகள் என அழைக்கப்படுகிறது. மொத்தம் 994 மாத்திரைகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம். இவை பறிமுதல் செய்யப்பட்டன.

வாழ்த்து அட்டையை திறந்து பார்த்தபோது, அதில் உள்ள வெள்ளை நிற பிளாஸ்டிக் பாக்கெட்டில்  LSD “Lysergic Acid Diethylamide  ஸ்டாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவை உறிஞ்சும் தாளில் போதை மருந்து ஏற்றப்பட்ட வண்ண ஸ்டாம்புகள். இவை துண்டு துண்டாக ஒவ்வொரு டோஸாக எடுத்துக் கொள்ளப்படும் போதை மருந்து. இவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம்.

இந்த பார்சல் புதுச்சேரி ஆரோவில்லி பகுதியில் உள்ள ஜேஎம்ஜே மதர்லேண்ட் என்ற பெயரில் ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த முகவரியில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர்  மற்றும் கடலூர் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டில் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து வாங்கி வந்த இரு கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. 5.5 கிலோ எடையிலான இந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.2.5 லட்சம். இவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கடத்தல் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த ஓவியர் ரூபக்மணிகண்டன்,(29) கோழிப் பண்ணையில் வேலை செய்யும் லாய் வீகஸ்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் இருவரும் ஆலந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

மொத்தம் ரூ.58.5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், எல்எஸ்டி ஸ்டாம்புகள் மற்றும் கஞ்சா ஆகியவை போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடப்பதாக சென்னை சர்வதேச விமான நிலை சுங்க ஆணையர் ராஜன் சவுத்திரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக