செவ்வாய், 27 ஜூலை, 2021

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந் ராய் தெரிவித்தார்.

 

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந் ராய் தெரிவித்தார்.

மக்களவையில் அவர் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

செல்லுபடியாகக் கூடியப் பயண ஆவணங்கள் இன்றி, நாட்டில் நுழையும் வெளிநாட்டினர் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்படுகின்றனர். எந்தவித சட்டவிரோதக் குடியேற்றத்தையும் இந்தியா ஆதரிக்கவில்லை.

மியான்மரில் உள்நாட்டு நிலவரம் காரணமாக, மியான்மர் மக்கள், இந்தியப் பகுதிக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக நுழைபவர்களை கண்காணித்து, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணிப்பூர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடந்த மார்ச் 10ம் தேதி அன்று அறிவுறுத்தல் வழங்கியது.

காசி மொழி சேர்ப்பு பற்றி பரிசீலனை: 

இந்திய அரசியல் சாசனத்தின் 8வது அட்டவனையில் காசி மொழியை சேர்க்க வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் விடப்பட்டன. இது தொடர்பானத் திட்டத்தை மத்திய அரசு பெற்றது. வட்டார மொழிகள் மற்றும் மொழிகளுக்கான அளவுகோல்களை நிர்ணயிப்பது சிரமம். மக்களின் உணர்வுகளை மனிதில் வைத்து, இது போன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

நக்சல் தாக்குதல்:

நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில், நக்சல் நடவடிக்கைகள் குறைந்துள்ளன. சத்தீஸ்கரில் மாநில போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், பாதுகாப்புப் படை வீரர்கள் 22 பேர் கொல்லப்பட்டனர்.

நக்சலைட்டுகளின் கடத்தல்: 

இந்தாண்டில் இதுவரை ஜார்கண்ட்டில் 2 கடத்தல் சம்பவங்களும், கடந்தாண்டில், ஜார்கண்ட், பீகார், சத்தீஸ்கரில் 6 கடத்தல் சம்பவங்களும் நடந்துள்ளன. 

கைதிகளுக்குக் கட்டாயக் கல்வி:

சிறைக் கைதிகளின் நலன்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது  மாநில அரசுகளின் பொறுப்பு. ஆனாலும், மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வருகிறது. சிறைகளில் சிறப்புப் படிப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும், கைதிகளின் கல்விக்குத் திறந்தவெளி பல்கலைக்கழகம் மற்றும் தொலைதூரக் கல்வி  திட்டங்களைப் பிரபலப்படுத்தும் பயிலரங்குகளை நடத்த வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

திஷா மசோதா:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சில குறிப்பிட்டக் குற்றங்களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க  ‘ஆந்திர பிரதேசம் திசா மசோதா’ குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகப் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் பெறப்பட்ட ஆலோசனைகள் ஆந்திர பிரதேச அரசுடன் பகிரப்பட்டுள்ளது. ஆந்திர அரசிடமிருந்து இதற்கான விளக்கம் பெறப்படவில்லை.

காவல்துறை நவீனமயமாக்கத்துக்கு நிதியுதவி:

மாநில அரசுகளின் காவல்துறை நவீனமயமாக்கத்துக்கு, மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இதன் மூலம் ஆயுதங்கள், உளவு உபகரணங்கள், வாகனங்கள், கட்டுமானங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநிலங்களின் காவல்துறை நவீனமயமாக்கத்துக்கு கடந்த 2019-20ம் நிதியாண்டில், ரூ.65.98 கோடி வழங்கப்பட்டது.

மாநிலங்களின் எல்லைப் பிரச்னை:

ஹரியானா-ஹிமாச்சலப் பிரதேசம், லடாக் - ஹிமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா- கர்நாடகா, அசாம் -அருணாச்சலப் பிரதேசம், அசாம் - நாகாலாந்து, அசாம் -மேகாலாயா, அசாம் - மிசோரம் ஆகியவை இடையே எல்லை பிரச்னை தொடர்பாக  எதிர்ப்பு மற்றும் மோதல் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இவற்றை மாநில அரசுகளின் ஒத்துழைப்பு மூலம்தான் தீர்க்க முடியும். பரஸ்பர புரிதல் அடிப்படையில், எல்லைப் பிரச்னைகளை சுமூகமாகத் தீர்ப்பதற்கான உதவிகளை மத்திய அரசு செய்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு  2021:

மக்கள் தொகை கணக்ககெடுப்பு சட்டம் 1948-ன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு -2021-ஐ, வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என  இரண்டு கட்டங்களாக  நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.  ஆனால் கொவிட் தொற்று காரணமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஒத்திபோடப்பட்டன.

சிஏஏ விதிகள்:

குடியுரிமை திருத்த சட்டம் 2019(சிஏஏ) கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.  இதற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கான கால வரம்பை 09/01.2022 வரை மேலும் நீட்டிக்க வேண்டும் என மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான துணை சட்ட குழுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

பீகாருக்கு வெள்ள நிவாரணம்:

2020-21ம் நிதியாண்டில், பீகார் வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு ரூ.1255.27 கோடி வழங்கியது.  அதோடு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக, ரூ.1416 கோடி வழங்கப்பட்டது. மேலும், மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக, முதல் தவணை ரூ.566.40 கோடி கடந்த ஏப்ரல் 29ம் தேதி அன்று  வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக