வியாழன், 7 மே, 2020

காவிரி ஆணையத்தைத் தொடாதே! சுதந்திரமாக விடு! மாநிலங்கள்தான் இந்தியா; இந்தியா என்று தனியாக இல்லை; தெரிந்துகொள்! - தி.வேல்முருகன்


ஒன்றிய அரசே, காவிரியில் தலையிடாதே! அதில் உனக்கென்ன உரிமை?
ஃபாசிச மோடி அரசே, காவிரி ஆணையத்தைத் தொடாதே! சுதந்திரமாக விடு! மாநிலங்கள்தான் இந்தியா; இந்தியா என்று தனியாக இல்லை; தெரிந்துகொள்! - தி.வேல்முருகன்

தன்னதிகாரமுள்ள காவிரி ஆணையத்தை, புதிய ஜல்சக்தித்துறையின் கீழாக, மோடி அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதை எதிர்த்துப் போராட்டம்!

காவிரி ஆணையத்தில் தலையிடும் ஃபாசிசப் போக்கைக் கண்டித்து, அதைச் சுதந்திரமாக விடுமாறு காவிரி உரிமை மீட்புக் குழுவுடன் இணைந்து போராட, தோழமைக் கட்சியினரையும் பொதுமக்களையும் அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

காவிரிப் பிரச்சனை சுதந்திரத்துக்கு முன் இல்லை. சுதந்திரம் 1947இல் என்றால், 1968இலேயே காவிரி பிரச்சனை தொடங்கிவிட்டது. இன்றும் தொடர்கிறது. இப்போது காவிரி மேலாண்மை ஆணையம் எனும் தன்னாட்சி அதிகாரமுடைய தீர்ப்பாயத்தை, ஜல் சக்தி எனும் புதிய துறையை ஏற்படுத்தி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது ஒன்றிய அரசு.

இப்படிச் செய்ததற்குக் காரணம், கூட்டாட்சித் தத்துவம் சொல்கின்ற அதிகாரப் பரவலுக்கு மாறாக, அதிகாரக் குவிப்பு எனும் ஃபாசிச ரத்தமே பாஜகவின் உடம்பில் ஓடுவதாகும். அப்படி அனைத்து அதிகாரங்களையும் தானே வைத்துக்கொள்வது, பிரச்சனைகள் வரும்போது பொதுவாக நடந்துகொள்ளாமல், தனக்கு வேண்டிய மாநிலத்தின் பக்கம் நின்றுகொண்டு, மற்ற மாநிலத்தைக் குற்றம்சாட்டி, துணைபோகும் மாநில வாக்குகளை அறுவடை செய்யவே. 

அப்படித்தான் ஒன்றிய அரசு பிழைத்துக் கொண்டிருக்கிறது இதுவரை. 
மக்களாட்சிக்கான இலக்கணமோ ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம், அதன்படியான அதிகாரப் பரவல் என்பதுதான். எனவே காவிரி மேலாண்மை ஆணையத்தை ஒன்றிய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கக் கூடாது. இது. மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியே மாநிலத்திலும் இருந்தால் அதற்கே சாதகமாக மத்திய அரசும் நிற்க வழிவகுக்கும். அதற்காகத்தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சியதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்வதென்றால், பாதுகாப்பு, நாணயம் அச்சிடல், மாநிலங்களுடன் இணைந்த அயலுறவு ஆகிய துறைகள் தவிர மிச்சமனைத்தும் மாநிலங்களுக்கானவையே; அவை உடனடியாக மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

எனவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னதிகாரத்தைப் பறித்து அதனை ஜல் சக்தித் துறையின் கீழ் இணைத்த ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து “காவிரி உரிமை மீட்புக் குழு”வின் சார்பில் நாளை 7-05-2020 மாலை 5 மணி அளவில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது. 
எனவே 7ந் தேதி மாலை 5 மணி அளவில், காவிரியில் தானாகத் தலையிட்டு, தன் மேலாதிக்கத்தைத் திணிக்கவும் நிலைநிறுத்தவும் பார்க்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசின் ஃபாசிச நடவடிக்கைகளைக் கண்டித்தும் காவேரி மேலாண்மை வாரியத்தை பாதுகாக்கவும்  (இந்திய அரசே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன் அதிகாரத்தை பறிக்காதே! உன் அதிகார நீராற்றல் துறையில் சேர்க்காதே! தனியே முழுநேர தலைவர் அமர்த்து! தமிழக வாழ்வுரிமைக் கட்சி!)  என்ற பதாகைகளைக் கையில் பிடித்தவாறு அவரவர் வீட்டின் முன் நின்று, காவிரி உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்புமாறு அனைத்துத் தோழமைக் கட்சியினரையும் பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக