புதன், 26 ஜூன், 2019

தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன - கே. எஸ். அழகிரி

தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன
கே. எஸ். அழகிரி அறிக்கை
(தமிழ்நாடு காங்கிரஸ்)


அமரர் ராஜீவ்காந்தி கண்ட கனவான, மத்திய - மாநில அரசுகளுக்கு இணையாக மக்களுக்கே அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்துராஜ் மசோதா 73 ஆவது சட்ட திருத்தத்தின்படி 1993 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது. காங்கிரஸ் கொண்டு வந்த பஞ்சாயத்துராஜ் சட்டம்
அமலுக்கு வந்து 26 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்தால் கடும் அதிர்ச்சியும், வேதனையும் தான் ஏற்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பஞ்சாயத்துராஜ் சட்டம் கட்டாயமாக்கியும், 2016 இல் நடைபெற வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தமிழகத்தில் நடத்தப்படாமல் உள்ளது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென பலமுறை கூறியும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் நடத்தப்படுமா என்கிற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது.

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. - கே. எஸ். அழகிரி

மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாமல் பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் அவல நிலையில் உள்ளன. பஞ்சாயத்து அமைப்புகளை செயல்படாமல் தடுக்கிற வகையில் அ.தி.மு.க. அரசு உரிய நிதியை ஒதுக்காமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்தச் சூழலில் கடந்த மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி நடத்தப்பட வேண்டிய கிராமசபை கூட்டம் மக்களவை தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகளின் காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. ஒத்தி வைக்கப்பட்ட கிராமசபை கூட்டத்திற்கான மாற்று தேதியாக 28.6.2019 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக ஊரக வளர்ச்சித்துறை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறது. இக்கடிதத்தின்படி வருகிற 28.6.2019 அன்று காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளதால், அதற்கான ஆயத்தப் பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. முதற்கட்டமாக கடந்த ஜூன் 21 ஆம் தேதி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி கட்சியின் சின்னம் இல்லாமல் போட்டியிட வாய்ப்புள்ள ஊராட்சி மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஊராட்சிகளில் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட தீவிரம் காட்ட வேண்டுமென மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
எனவே, இந்தப் பின்னணியில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 28.6.2019 அன்று காலை 11 மணியளவில் நடைபெறுகிற கிராமசபை கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய கூட்டங்களில் பங்கேற்பதன் மூலம் மகாத்மா காந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் கண்ட கனவை நனவாக்க இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும் என நம்புகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக