திங்கள், 1 ஜூலை, 2019

"பக்ரீத் " இந்தப்படம் போல ஒருபடம் இதுவரை வந்ததில்லை.இனியும் வராது. - நடிகர் விக்ராந்த்


ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பக்ரீத். இப்படத்தை ஜெகதீசன்சுபு இயக்கம் மற்றும் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இதில் விக்ராந்த் , வசுந்தரா,  ரோகித் பதாக் மற்றும் 3 ஒட்டகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எம்10 புரொடக்‌ஷன் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார். 

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதில், விக்ராந்த் வசுந்தரா,  சுபு.ஜெகதீசன், டி.இமான்  உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 

விக்ராந்த் கூறுகையில், நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகுது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதுசு.
இப்போது பெரிய நம்பிக்கையோடு நிற்கிறேன். இந்தப்படம் அந்த தைரியத்தைக் கொடுத்து இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம் போல ஒருபடம் இதுவரை வந்ததில்லை.இனியும் வராது. முருகராஜ் அண்ணன் எனக்கு 13 வருடமாக தெரியும். நிறைய நொந்துவிட்டார். ஆனால் இந்தக் கதை மீது அவருக்கு பெரிய நம்பிக்கை. இந்த படத்தில் வரும் ஒட்டகத்தை கொண்டுவருவதற்கு அவ்வளவு சிரமப்பட்டார். ஓட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு. அந்த ஒட்டகத்தை அனுமதி வாங்கி கொண்டுவர 8 மாதங்கள் ஆகியது. ஒட்டகத்தை தத்தெடுத்து பயிற்சி கொடுத்து, அதனுடன் நாங்கள் பழக ஒரு மாதம் ஆகியது. மேலும் அந்த ஒட்டகத்தை 100 நாளில் ஒப்படைக்க வேண்டும் என்ற டெட்லைன் வேறு இருந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் ஆகிய இடங்களுக்கு ஒட்டகத்தை அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்தினோம். வானிலை, மழை என பல பஞ்சாயத்து இருந்தது. உண்மையிலேயே தயாரிப்பாளருக்கும் ஒட்டகத்திற்கும் தான் பெரிய நன்றி சொல்லணும். இப்படத்தில் ஒரு கிராபிக்ஸ் காட்சிகள் கூட இல்லை. படத்தைப் பார்த்த அனைவருமே பெரிதாகப் பாராட்டி இருக்கிறார்கள். நடிகரக்ளை விட ஒட்டகத்திற்குதான் அதிக செலவுசெய்துள்ளோம். நிச்சயம் இந்த நல்ல படத்தை பத்திரிகையாளர்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

வசுந்தரா பேசும்போது, நல்ல படங்களுக்கு பத்திரிகையாளர்கள் சப்போர்ட் பண்ணுவாங்க. இந்தியாவிலே ரொம்ப சிறந்த படமாக பக்ரீத் வந்திருக்கிறது. இதுபோன்ற ஒரு அனுபவம் எந்தப்படத்திலும் எனக்கு கிடைத்தது இல்லை. டி.இமான் சாரின் இசை மிக அற்புதமாக இருக்கிறது. இயக்குநர் ஜெகதீசன் சாருடன் தொடர்ந்து வேலை பண்ண வேண்டும் என்று எல்லா நடிகர்களுக்கும் தோன்றும். விக்ராந்த் மிகச் சிறப்பான நடிகர். நிச்சயம் படம் உங்களை அழ வைக்கும் என்றார் 

இசையமைப்பாளர் டி.இமான் பேசும்போது, இந்தப்படத்தை நான் ஒப்புக் கொள்ள முதல்காரணம் தயாரிப்பாளர் முருகராஜ் தான். அவர் மிக நல்ல மனிதர். இந்தப்படம் ரொம்ப அற்புதமான ஒன்லைன். அதை இயக்குநர் சொல்லும் போதே ரொம்ப நல்லா இருந்தது. இந்தப்படத்தில் நடித்துள்ள விக்ராந்த் வசுந்தரா, குட்டிப்பொண்ணு என அனைவரும் அந்தந்த கேரக்டர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இப்படத்தில் பாடல் வேறு பின்னணி இசை வேறு என்று பிரித்தறியாத அளவில் இசை அமைத்துள்ளேன். 

இயக்குநர் ஜெகதீசன் சுபு பேசும்போது, எனக்கு இது முதல் மேடை. தயாரிப்பாளர் இப்படத்தை ஒத்துக்கொண்ட பின் ஒரு சின்னப்படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் படம் படிப்படியாக வளர்ந்தது. முதலில் எடிட்டர் ரூபன் சார் கதையை கேட்டுவிட்டு உடனே நான் செய்கிறேன் என்றார். அதேபோல் டி.இமான் சார். கதை கேட்டதும் இமான் சார், தயாரிப்பாளரிடம் இப்படியான கதைகள் எல்லாம் பண்ணுவீர்களா என்று கேட்டார். அப்பவே இந்தப்படம் பெரிய படமாக வளர ஆரம்பித்தது. 
இந்தக் கதை எழுதும் போது எனக்கு விக்ராந்த் நினைவில் வரவேயில்லை. ஆனால் அவர், இந்தப்படத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்றார். மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். வசுந்தராவின் வாய்ஸ் எனக்கு பிடிக்கும். அன்பைக் கூட அவர் சத்தமாகத் தான் வெளிப்படுத்துவார். இந்தப்படத்தின் பாடல்களை வெட்டி எடுக்க முடியாத அளவில் பாடல்கள் படத்தோடு ஒன்றியுள்ளது. பாடலாசிரியர்கள் சிறப்பாக ஒத்துழைத்து உள்ளார்கள். மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி" என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக