திங்கள், 3 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களையும் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது - டிடிவி.தினகரன்


புதிய கல்விக்கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களையும் தமிழக அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது
- டிடிவி.தினகரன்

மும்மொழிக்கொள்கை போன்றே புதிய கல்விக் கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கின்ற அம்சங்களையும் பழனிசாமி அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாமல் ஊரடங்கு தொடரும் நேரத்தில் அவசரமாக புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல என்று ஏற்களவே தெரிவித்திருந்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தி, குறைகளைச் சரிசெய்து, அதன்பிறகே செயல்பாட்டுக்கு கொண்டு வருவதே சரியாக இருக்கும். அப்படி வரும் போது குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி கட்டாயம் என்பதை 8ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்விதான் என்று அறிவிக்க வேண்டும்

தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் முதன்மை மொழியாக தமிழும் , உலக அளவிலான பயன்பாட்டிற்கு ஆங்கிலமும் கொண்ட இருமொழிக் கொள்கையே ஏற்றதாக இருக்கும் மூன்றாவது மொழியைப் படிப்பது என்பதையே விரும்பினால் மட்டுமே (Optional) என்றிருக்க வேண்டும். அப்படி மூன்றாவதாக ஒரு மொழியைப் படிக்க விரும்பினால் அது மாணவர்கள் விரும்பும் மொழியாகவே இருக்க வேண்டும். ஆனால் அந்த மூன்றாவது மொழி என்பது எந்தக்காலத்திலும் இந்தி அல்லது சமஸ்கிருதம் ஆக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டோம்" என்னும் உறுதிமொழியை தெளிவாகவும் வெளிப்படையாகவும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

எந்த ஒரு மொழியும் நமக்கு எதிரானது அல்ல. அதே நேரத்தில், நம்முடைய தாய்மொழியை அழுத்திவிட்டு எந்த மொழியை உயர்த்திப் பிடித்தாலும் அதனை ஏற்க முடியாது: கண்டிப்பாக எதிர்ப்போம். எனவே பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதம் போன்ற மொழிகளை வலிந்து நடைமுறைக்கு கொண்டுவரும் முயற்சிக்குப் பதிலாக தாய்மொழிகளை உயர்த்திப்பிடிப்பதே வளர்ச்சிக்கான பாதையாக இருக்கும்

பாடச்சுமை குறைக்கப்பட்டு மாணவர்கள் சுயமாக சிந்தித்து கற்பதற்கான வாய்ப்புகளைத் தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்குவது பாராட்டத்தக்கது. ஆனால் போதுமான கழிப்பறைகளோ, வகுப்பறைகளோ இல்லாத பள்ளிக்கூடங்கள் அதிகமிருக்கும் நாட்டில் அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதே முதல் பணியாக இருக்க வேண்டும்

கல்விக்கொள்கை தொடர்பான கழகத்தின் பரிந்துரையில் கூறியதைப்போல 3, 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களை நிச்சயமாக வதைப்பதாகவே அமையும், "பள்ளியில் சுற்றல் இடைநிற்றல் இருந்து வெளியே சென்ற 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவது 2020 தேசிய கல்விக் கொள்கையின் இலக்கு" என்று கூறப்பட்டிருப்பது உண்மையாக இருந்தால், அதனைச் சிதைக்கும் இந்த பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்

இதைப்போன்றே, பொதுவான படிப்போடு கூடுதல் அறிவு தொழில் படிப்பும் சேர வேண்டுமே தவிர, பட்டப்படிப்பை முடிக்காமல் மாணவர்களை ஏதாவது ஒரு தொழிலை நோக்கி தள்ளி விடுவதாக இருந்தால், பேரறிஞர் அண்ணா அச்சப்பட்டதைபோல எதிர்காலத்தில் அது குலக்கல்வியாக மாறுவதற்கான ஆபத்து இருக்கிறது. எனவே, இதனை செயல்படுத்துவதில் தமிழகம் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

நாடு முழுமைக்கும் NCERT மட்டுமே பாடத்திட்டங்களை உருவாக்கும் என்று கூறப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல அந்தந்த மாநிலங்களில் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவதே சரியாக இருக்கும். இதேபோன்று உயர் படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். நீட் தேர்வுக்குப் பிறகு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ள நிலையில் இந்தத்தேர்வும் வைக்கப்பட்டால், பட்டப்படிப்பு என்பது ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விடும். தேசிய அளவிலான ஆசிரியர் தேர்வு முறையும் எதிர்பார்க்கிற நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்பதையும் ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

இதையெல்லாம் விட, பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மறைமுகமாக மத்திய பட்டியலுக்கு கொண்டுசெல்லும் ஏற்பாடுகளாக தேசிய கல்வி ஆணையம், தேசிய ஆய்வு அமைப்பு (MERU) போன்ற அமைப்புகளை புதிய கல்விக்கொள்கை முன்மொழிந்து இருக்கிறது. பாடத்திட்டம், பயிற்றுவிக்கும் முறை, தேர்வுகள் போன்றவற்றை எல்லாம் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு இவற்றுக்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்கும் வேலைகளை மாநில அரசுகளிடம் தள்ளிவிடுவது எப்படி சரியாக இருக்க முடியும்? இது நான் உமி கொண்டு வருகிறேன்; நீ அரிசி எடுத்து வா. இருவரும் ஊதி சாப்பிடலாம்' என்ற பழமொழியைப் போல இருக்கிறது

இந்த ஏற்பாடு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பல்வேறு வகையான மொழி, கலாச்சாரம், பண்பாடு, உட்கட்டமைப்பு வசதி கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநில சூழலுக்கும், கல்வி வளர்ச்சியில் அந்தந்த மாநிலங்கள் பெற்றிருக்கும் முன்னேற்றத்தின் அடிப்படையிலும் தேவைக்கு ஏற்பவும் புதிய கல்விக் கொள்கையில் மாற்றங்களைச் செய்து கொள்வதற்கான உரிமை மாநில அரசுகளுக்கு கட்டாயம் இருக்க வேண்டும், அந்த வகையில் தமிழகத்திற்கு தேவையான மாற்றங்களுடன் கூடிய தனித்த கல்விக் கொள்கையைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்

தி.மு.க வைப் போல வறட்டு வாதத்திற்காகவோ, அரசியலுக்காவோ நாங்கள் கண்களை மூடிக்கொண்டு புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை; அதைப் போல ஒரேயடியாக ஆதரிக்கவும் இல்லை கல்வி என்பது மாணவர்கள் மற்றும் நாட்டின் எதிர்காலம் சார்ந்தது; இதில் அரசியலுக்காக நாங்கள் எதையும் பேச விரும்பவில்லை. அதே நேரத்தில் கல்விக்கொள்கையிலுள்ள குறைகளையும், அதற்காக செய்ய வேண்டிய திருத்தங்களையும், தமிழக அரசு இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டியவற்றையும் ஏற்கனவே தெளிவாக முன் வைத்திருக்கும்

மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக்கொள்கை - வரைவின் மீது நாட்டிலேயே முதலாவதாக குழு அமைத்து, அது தொடர்பான பரிந்துரைகளை மிகத் தெளிவாக வெளியிட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கல்விக்கொள்கையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பாதையில் மக்களின் நலன் சார்ந்தும், தமிழகத்தின் நலன் சார்ந்தும் தொடர்ந்து பயணிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக