ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஶ்ரீகாகுளத்தில் 2206 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 432 மூத்த குடிமக்களுக்கு உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் முகாமை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு தாவர்சந்த் கெலோட் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஏடிஐபி திட்டம் மற்றும் ராஷ்டிரிய வயோஸ்ரீ திட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அலிம்கோ மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஊனமுற்றோர் அதிகாரமளித்தல் துறை செய்திருந்தது.
ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் திரு தர்மன கிருஷ்ணதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம் மோகன் நாயுடு கிஞ்சாரபு ஆகியோர் நேரடியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ரூபாய் 2.90 கோடி மதிப்பிலான 4874 உதவி உபகரணங்கள் 2206 மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இதுவரை இல்லாத அளவு நல்ல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார்.
ஆந்திரப் பிரதேசத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட அவர், 1755 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பலனளிக்கும் வகையில் ரூபாய் 29.68 கோடி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி உள்ளதாக கூறினார். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள 9 மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையங்களுக்கு ரூபாய் 1.59 கோடி வழங்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக