ஞாயிறு, 14 நவம்பர், 2021

இந்துக் கோயில்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்களின் கட்சி அலுவலகங்களாக மாறி விட்டன என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. - கி.வீரமணி



சிறீரங்கம், மதுரைக் கோயில்களில் எல்.இ.டி. திரையமைத்து பிரதமரின் உரையை பா.ஜ.க.வினர் பார்ப்பது - கேட்பது சட்டப்படி சரிதானா?

கோயில் பி.ஜே.பி.  ஆர்.எஸ்.எஸ். கூடாரமா? 

தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கட்டும்!.- கி.வீரமணி

இந்துக் கோயில்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்களின் கட்சி அலுவலகங்களாக மாறி விட்டன என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. 

இதோ ஒரு செய்தி.

கோயிலில் பா.ஜ.க.வினர் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறீரங்கம் கோயிலிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் பிரதமரின் உரையைக் கேட்க எல்.இ.டி. திரை / டி.வி, ஸ்பீக்கர் வைத்து பா.ஜ.க.வினர் அமர்ந்து கேட்டிருக்கிறார்கள். இன்னும் பல இடங்களிலும் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  

சான்றுக்கு அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் டுவிட்டுகள் உள்ளன. கோயில்களைக் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் நெடுநாளைய குறிக்கோள். அதனை மறைமுகமாக பல இடங்களில் நிறைவேற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் கோயில் மண்டபம் அல்லது வளாகத்திற்குள் (பிரதமரின் உரை என்று சாக்கிட்டு) இப்படி திரையிட்டு குறிப்பிட்ட கட்சியினர் பார்க்க அனுமதி உண்டா? அளித்தது யார்? என்பது குறித்து கவனிப்பது முக்கியம். இதே போல் தொடர்ந்தால் கோயில்கள் ஆர்.எஸ்.எஸ். பரப்புரைத் தளங்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை அரசியல் படுத்துவது எந்த வகையில் சரி?

எதற்கெடுத்தாலும் ‘ஆகமம்‘ ‘ஆகமம்‘ என்று கூச்சல் போடுபவர்கள், இப்படி கோயில்களைத் தங்கள் கூடார மாக மாற்றுவது எந்த வகையில் சரி? இது அரசாங்கத்தின் குறிப்பாக இந்து அற நிலையத்துறை அமைச்சரின் கவனத்துக்கு வந்ததா?

இதற்குக் காரணமாக இருந்த இந்து அறநிலையத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பிரதமர் கலந்து கொண்டது - மத நிகழ்ச்சி பிரதமர் உரையைத் தானே ஒளிபரப்பினார்கள் என்று சொல்லித் தப்பிக்கவும் முடியாது. ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியோ ஆதி சங்கரர் மடத்தில் பிரதமர் மேற் கொண்ட பூஜை விழாவாகும் - அப்பட்டமாக ஓர் இந்து மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி.

இந்த வாய்ப்பு மற்றவர்களுக்கு அளிக்கப்படுமா?

இதுவரை இல்லாத ஒன்றிற்குப் புதுவழி திறந்து விடப்பட்டிருக்கிறது என்று கருதலாமா?
கோயில்களைப் போராட்டக் களமாக மாறும் நிலையை இதன் மூலம் ஏற்படுத்தாதா? 
முளையிலேயே இதனைக் கிள்ளி எறிய வேண்டும். இந்து அறநிலையத்துறை அமைச்சர் கவனித்துக் கொள்வார் என்றே எதிர்பார்க்கிறோம்!

இன்னொரு முக்கிய செய்தி. முதல் அமைச்சரே தனக்கென்று உள்ள பாதுகாப்பு (கான்வாய்)களைக் குறைத்துக் கொண்டுள்ள நிலையில் சங்பரிவார் பிரமுகர்களுக்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு என்பதெல்லாம் எதற்கு? வீண் செலவும் மக்களின் கவன ஈர்ப்பும் தானே மிச்சம்!

திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூரில் பள்ளி ஒன்றிற்கு  தந்தை பெரியாரின் புகழ் பெற்ற ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலைக் கொடுத்ததற்காக பள்ளியை முற்றுகையிட்டதும், தலைமை ஆசிரியரை அச்சுறுத்தியதுமான அடாவடித்தனம் நடந்துள்ளது. கல்வித்துறை அதி காரிகள் துணை போனதும் கண்டிக்கத்தக்கது. “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற தந்தை பெரியாரின் நூலை திருப்பூரில் பரவலாக்க முடிவு செய்யப்படும்.

மக்களவை உறுப்பினர் தோழர் சுப்பராயன் (சி.பி.அய்.) தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று, முதல் அமைச்சரிடமும் இதுபற்றி புகாரும் செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் மீதெல்லாம் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக