செவ்வாய், 9 நவம்பர், 2021

21-ம் நூற்றாண்டுக்கான நவீன உள்கட்டமைப்பை இதுவரை கண்டிராத வேகத்தில் உருவாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது - திரு பியூஷ் கோயல்


 சரக்கு போக்குவரத்து செலவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5% குறைப்பதற்கு ‘பல்வேறு மாநிலங்களில் சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதற்கான அறிக்கை 2021’ வழிவகுக்கும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர் திரு பியூஷ் கோயல்  கூறினார்.

லீட்ஸ் எனப்படும் ‘பல்வேறு மாநிலங்களில் சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதற்கான அறிக்கை 2021’-ஐ புதுதில்லியில் இன்று வெளியிட்ட பின்னர் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

21-ம் நூற்றாண்டுக்கான நவீன உள்கட்டமைப்பை இதுவரை கண்டிராத வேகத்தில் உருவாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று திரு பியூஷ் கோயல் கூறினார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட பிரதமர் கதிசக்தி மாஸ்டர் திட்டத்தைப் பற்றி அவர்
குறிப்பிடுகையில், இது நாட்டின் அடுத்த தலைமுறை பல்முனை உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி உள்கட்டமைப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதைப் பாராட்டிய அமைச்சர், குஜராத்தில் 13 ஆண்டுகளாக அவர் எடுத்த முயற்சிகள், லீட்ஸ் அறிக்கையில் குஜராத் தொடர்ந்து முதலிடத்தில் இருக்க அடித்தளம் அமைத்துள்ளது என்றார்.

நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகம் 2013-14-ல் ஒரு நாளைக்கு ~12 கிலோமீட்டரில் இருந்து 2020-21-ல் 37 கிமீ என மூன்று மடங்கு அதிகரித்துள்ளது மற்றும் ரயில்வே மூலதன செலவினம் 2013-14ல் ரூ 54,000 கோடியில் இருந்து 2021-22-ல் ரூ 2.15 லட்சம் கோடி ஆக நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

2014க்கு முந்தைய 5 ஆண்டுகளில், 60 பஞ்சாயத்துகளில் மட்டுமே கண்ணாடி இழை இணைப்பு வழங்க முடிந்ததையும், கடந்த 7 ஆண்டுகளில், 1.5 லட்சத்துக்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகள் ஆப்டிகல் ஃபைபருடன் இணைக்கப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக